திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில்

மத்திய ஜெகந்நாதம் என்று போற்றப்படும் திருமழிசை

சென்னை திருவள்ளூர் சாலையில், சுமார் 25 கி.மீ. தொலைவில், பூந்தமல்லியை அடுத்து உள்ள தலம் திருமழிசை. திருமழிசையாழ்வாரின் அவதார ஸ்தலம். அதனால் ஊருக்கும் அதே பெயர். இக்கோவிலில், மூலவர் ஜெகந்நாத பெருமாள் வீற்றிருந்த கோலத்தில் ருக்மணி சத்யபாமா சமேதராக சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் திருமங்கைவல்லித் தாயார்.

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில், மூன்று ஜெகன்நாதர் ஷேத்திரங்களில் 'மத்திய ஜெகந்நாதம்' என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. வடக்கே உள்ள பூரி, உத்திர ஜெகந்நாதம்' என்றும் திருப்புல்லாணி 'தக்ஷிண ஜெகந்நாதம்' என்றும் அழைக்கப்படுகிறது. பூரியில் நின்ற திருக்கோலத்திலும், திருப்புல்லாணியில் சயன திருக்கோலத்திலும், திருமழிசையில் வீற்றிருந்த திருக்கோவத்திலும் பெருமாள் சேவை சாதிக்கிறார்.

தலத்தின் சிறப்பு

அத்திரி,பிருகு ,வசிஷ்டர் ,பார்கவர் ஆகிய பிரம்மரிஷிகள் தாங்கள் பூலோகத்தில் தவம் செய்ய தகுந்த இடத்தை காட்டுமாறு பிரம்மனிடம் கேட்டனர் உடனே பிரமன் தேவசிற்பியை அழைத்து ஒரு தராசு கொடுத்து ஒரு தட்டில் திருமழிசையையும் மறு தட்டில் மற்ற புண்ணிய தலங்களையும் வைக்க சொன்னார் . திருமழிசை வைத்த தட்டு கணத்தில் கீழாய் சாய்ந்தது. மற்ற இடங்கள் மேலே சென்றது ,பிரமன் உடனே ரிஷிகளிடம் திருமழிசையில் தவம் இருக்க சொன்னார்

திருமழிசையாழ்வார்

இந்த தலத்தில்தான் திருமழிசையாழ்வார் , திருமாலின் சகராயுதத்தின் அம்சமாக அவதரித்தார். அவருக்கு இக்கோவிலில் தனி சன்னதி இருக்கிறது. திருமழிசை ஆழ்வாரின் வலது பாத கட்டை விரலில் மூன்றாவது கண் இருக்கின்றது.இவர் சமணம், சாக்கியம், சைவம் முதலிய கற்று சிவவாக்கியர் என்ற பெயரில் சைவத்தை முதலில் பின்பற்றி, பிறகு வைணவத்திற்கு வந்தார். இவரின் சொல்வன்மையைக் கண்ட சிவபெருமான், இவரை 'பக்திசாரர்' என்ற திருநாமத்தால் வாழ்த்தினார்.

ராகு , கேது தோஷ நிவர்த்தி தரும் துந்துபி விநாயகர்

பெருமாளின் கருவறை கோஷ்டத்தில் உள்ள துந்துபி விநாயகர் தனது வயிற்றில் ராகு , கேது பின்னியபடி காட்சி தருகிறார் , ஆதலால் இவரை வணங்கினால் ராகு , கேது தோஷத்தில் இருந்து நிவர்த்தி பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

படங்கள் உதவி : திரு. C. பாஸ்கர், திருமழிசை

ஜெகந்நாத பெருமாள்

திருமழிசையாழ்வார்

துந்துபி விநாயகர்

துந்துபி விநாயகர் வயிற்றில் ராகு , கேது

 
Previous
Previous

கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோவில்

Next
Next

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்