லட்சுமி நரசிம்மர் கோவில்

சகல தோஷங்களையும் நிவர்த்தி செய்யும் நரசிம்மர்

கடலூரிலிருந்து புதுச்சேரிக்குச் செல்லும் வழியில் 14 கி.மீ தொலைவில் உள்ள தவளக்குப்பம் வழியாக, மேற்கு நோக்கி செல்லும் வழியில் 1 கி.மீ தொலைவில் சிங்கிரிக் குடி (அபிஷேகப்பக்கம்) லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. மூலவர் லட்சுமி நரசிம்மர். தாயார் கனகவல்லி.

உக்கிர நரசிம்மரின் பிரம்மாண்டமான கம்பீரத் தோற்றம்

இங்கு பிரகலாதனின் விருப்பப்படி, நரசிம்மர் இரணியனை வதம் செய்யும் கோலத்தில், சிங்க முகத்துடனும், மனித உடலில் 16 கரங்களுடனும் மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளிக்கிறார். நரசிம்மர் தன் கண்களை உருட்டுவது போன்றும், அடர்ந்த மீசையை உடையவராகவும், அந்த மீசையை முறுக்குவது போலவும், தம் கோரைப் பற்களைக் காண்பிப்பது போன்றும், நாக்கை தொங்க விட்டுக் கொண்டும் காட்சியளிக்கிறார்.

பதினாறு கரங்களில், ஐந்து கரங்கள் ஹிரண்யகசிபுவை கொல்வது போன்றும், 3 கரங்கள் பக்தர்களைக் காப்பது போலவும் சேவை சாதிக்கிறார். குழந்தை பிரகலாதன், ஹிரண்யகசிபுவின் மனைவி லீலாவதி, அசுர குரு சுக்ராச்சாரியார், வசிஷ்ட மகரிஷி ஆகியோர் நரசிம்மரின் அருகில் காட்சியளிக்கிறார்கள்.

இரணியனை வதம் செய்யும் கோலத்தில் நரசிம்மர் காட்சி தருவது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களின் அரிதான காட்சி

இச்சன்னதியில் சிறிய வடிவில் பால நரசிம்மரும், யோக நரசிம்மரும் உடன் எழுந்து அருளியுள்ளார்கள். இப்படி ஒரே சன்னதியில் மூன்று நரசிம்மர்களை தரிசிப்பது என்பது மிகவும் அரிதான காட்சியாகும்.

மன்னர் கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் திருப்பணிகள் பல செய்துள்ளார். ஆற்காடு நவாப் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் ஆகியோர் நரசிம்மருக்கு அணிகலன்கள் அளித்துள்ளனர்.

நவக்கிரக தோஷ நிவர்த்தி தலம்

இத்தலத்தில் வழிபட்டால் .நவக்கிரக தோஷம் நிவர்த்தியாகும் எள்பது ஐதீகம். திருமண தடை, பில்லி, சூன்யம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள், குழந்தைப்பேறு இல்லாதோர், பேய் பிசாசு பிடித்தவர்கள், நரம்புத்தளர்ச்சி நோயில் துன்புறுபவர்கள், சுவாதி நட்சத்திரத்தன்றும், பிரதோஷ நாளன்றும், மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஓரையில் நரசிம்மரைத் தரிசித்தால் குறைகள் தீரும். வேண்டுதல்கள் நிறைவேறும். நரசிம்மருக்கு நெய் தீபம் ஏற்றுவது சக்தி வாய்ந்த நேர்த்திக்கடன் என்று நம்பப்படுகிறது.

 
Previous
Previous

வைத்தியநாதசுவாமி கோவில்

Next
Next

நாகநாதர் கோவில்