திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

திருவல்லம் வில்வநாதேசுவரர் கோவில்

விநாயகர் சிவபெருமானைச் சுற்றிவந்து மாங்கனியை பெற்ற தேவாரத்தலம்

வேலூர் - ராணிப்பேட்டை சாலையில் 16 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் திருவல்லம். இறைவன் திருநாமம் வில்வநாதேசுவரர். இறைவியின் திருநாமம் வல்லாம்பிகை. முழு முதல் கடவுளான விநாயகப் பெருமான், நாரதர் மாங்கனியை சிவபெருமானிடம் தந்த பொழுது அம்மையப்பன்தான் உலகம், உலகம்தான் அம்மையப்பன் என்று கூறி உலகிற்கு அறிவித்து சிவபெருமானையும், அம்பாளையும் வலம் வந்து வணங்கி கனியைப் பெற்றுக் கொண்டது இத் திருத்தலத்தில்தான். விநாயகப் பெருமான் இறைவனை வலம் வந்து மாங்கனியைப் பெற்றதனால் இத் திருத்தலம் திருவலம் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மருவி திருவல்லம் என்றானது.

இக்கோவிலில் விநாயகர், கருவறையில் சதுரபீடத்தின்மேல் பத்மபீடம் அமைய அதன்மீது அமர்ந்த நிலையில், இறைவனிடம் கனி பெற்ற வரலாற்றை நினைப்பூட்டும் வகையில் துதிக்கையில் மாங்கனியுடன் விநாயகர் காட்சி தருகிறார். அதனால் இங்குள்ள விநாயகர் கனி வாங்கிய பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். அதற்கேற்றாற் போல துதிக்கையில் மாங்கனியை வைத்துக் கொண்டு வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தனது வாகனமான மூஞ்சூறு மீது அமர்ந்திருப்பது வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். முருகப் பெருமானுடன் நடந்த போட்டியில் விநாயகப் பெருமான் ஞானப் பழத்துடன் இத்திருத்தலத்தில் வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது. இதனால், இவரை வணங்கும் பேறு பெறுவோர், பிறப்பற்ற நிலையை அடைவர் என்று சொல்கிறார்கள்.

இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தமது திருப்புகழில் போற்றிப் பாடியுள்ளார்.

Read More
தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

கபால மாலையும், ஒட்டியாணமும் அணிந்த கபால கணபதி

கும்பகோணத்திற்கு அருகே, சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில், திருவிடைமருதூர் அருகே உள்ள தலம் தேப்பெருமாநல்லூர். இறைவன் திருநாமம் விசுவநாத சுவாமி. இறைவியின் திருநாமம் வேதாந்த நாயகி. இக்கோவில் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகும்.

இக்கோவிலின் கன்னி மூலையில், தனி சன்னிதியில் கபால கணபதி எழுந்தருளியுள்ளார் . இவர் கழுத்தில் மண்டையோடுகள் மாலையாக அணி செய்கின்றன. இந்த கபால கணபதியின் கண்கள் யானை முகத்திற்கு உள்ளது போல் முகத்தின் பக்கவாட்டில் இல்லாமல், மனிதர்களுக்கு இருப்பது போல் முகத்தின் நடுவில் உள்ளது. மேலும், இவரது கை, கால் விரல்கள் மனித விரல்களைப் போல் நீண்டுள்ளது. மனிதனுக்குத் தெரிவது போல், இவர் உடலில் நரம்புகள் தெரிகின்றன. இடுப்பில் கபால மாலையை அணிந்திருக்கிறார்.

ஒரு மகா பிரளய காலத்தில், இந்தப் பூவுலகமே நீரில் அமிழ்ந்தபோது, இத்தலம் மட்டும் மூழ்காமல் வெளியே தெரிந்தது. இதனைக் கண்டு திகைத்த நான்முகன், தன் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள விநாயகரை தியானித்தார். அவர் முன் தோன்றிய விநாயகர், இத்தலம் புனிதமானது. இங்கே சிவபெருமான் எழுந்தருளப்போகிறார். மறுபிறவி இல்லாத புனிதருக்குதான் இத்தல ஈசனை வழிபடும் பாக்கியம் கிட்டும். ஈசனுடன், அன்னையும் நானும் இத்தலத்தில் எழுந்தருள்வோம். அப்போது என் கண்கள், மனித கண்கள் போல நேராகக் காட்சி தரும்; என் நகங்கள், நரம்புகள் எல்லாம் மனித உறுப்புகள் போலவே இருக்கும். அந்த வேளையில் அஷ்டதிக் பாலகர்களை மண்டை ஓடு மாலைகளாக மாற்றி, என் இடுப்பில் ஒட்டியாணமாக அணிவேன். என்னை வழிபடுபவர்களுக்கு அவர்கள் செய்த பாவங்களை நிவர்த்தி செய்து சகல பாக்கியங்களையும் அளிப்பேன் என்று திருவாய் மலர்ந்தருளினார். இந்த கபால விநாயகருக்கு சந்தன அபிஷேகம் செய்யும் போது, அவரது இடுப்பில் உள்ள கபால ஒட்டியாணத்தை தரிசிக்கலாம்.

இவரை வழிபட சகல பாவங்களும் நீங்கி, எடுத்த காரியம் முழு வெற்றி பெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோவிலைப் பற்றிய முந்தைய பதிவுகள்

1. பழைய சோற்றை நிவேதனமாக ஏற்றுக் கொள்ளும் அன்னதான தட்சிணாமூர்த்தி 

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2-gcz2h

2. நந்தியெம்பெருமான் வலதுக்காது மடங்கி இருக்கும் அபூர்வத் தோற்றம்

https://www.alayathuligal.com/blog/8b87el97d7m4g5rnrjpx7l82wtsxy2

3. சிவபெருமானுக்கு ருத்ராட்ச மணி கவசம் சாத்தப்படும் தலம்

https://www.alayathuligal.com/blog/lc5e8xag9et35fe4jwj8llpwtt9f85

Read More
புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

புழுங்கல் வாரிப் பிள்ளையார் கோவில்

புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் ஏற்பட்ட வரலாறு

திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் ஈசான திசையில் காட்சி தருகிறார் புழுங்கல் வாரிப் பிள்ளையார். ஒரு சந்தர்ப்பத்தில் கோவில் நைவேத்யத்திற்குப் புழுங்கல் அரிசி தட்டுப்பாடு ஏற்படவே, இவர், புழுங்கல் அரிசியை மழை போல் வாரித் தந்தவராம் இவர். அதனால் இவருக்கு புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்று பெயர் வந்தது.

முன்னொரு காலத்தில் திருவில்லிப்புத்தூர் பகுதியில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் வேறு ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர். ஊரில் எஞ்சிய சில மக்களுக்கும் சமைக்க அரிசி கிடைக்கவில்லை. தங்களுக்குக் கிடைத்த சிறிதளவு வரகரிசியையே சமைத்து உண்டனர்.அப்போது அங்கிருந்த பெரியவர் ஒருவர், தனக்கு உணவு கிடைக்காத நிலையிலும், பிள்ளையாரின் நைவேத்தியத்திற்கு அரிசி கிடைக்கவில்லையே என்று மனம் வருந்தினார். அதனால் ஊர் மக்களிடம் நைவேத்தியத்திற்காக அரிசி தருமாறு வேண்டினார். ஆனால் மக்களோ, தாங்களே உணவிற்கு வரகரிசியைத்தான் உபயோகப்படுத்தும்போது பிள்ளையாருக்கு எப்படி அரிசி அளிக்க முடியும் என்று வினவினர்.இதனால் மனம் வருந்திய பெரியவர் பிள்ளையாரிடம் கண் கலங்கி நின்றார். பெரியவருக்காக மனமிரங்கிய பிள்ளையார், இரண்டு மரக்கால் புழுங்கல் அரிசியை சன்னதியில் வைத்து அருளினார். இதைக் கண்ட பெரியவர் பிள்ளையாருக்கு நைவேத்தியம் செய்து விட்டு, தானும் உண்டு மகிழ்ந்தார்.

இதைக் கணட ஊர் மக்கள் அவருக்கு எப்படி பஞ்ச காலத்தில் புழுங்கல் அரிசி கிடைத்தது என்று வினவினார்கள். பிள்ளையார் தனக்கு அருளியதைச் சொல்ல விரும்பாத பெரியவர் மௌனம் சாதித்தார். இதனால் கோபமடைந்த மக்கள் அவரைக் கட்டி வைத்து துன்புறுத்தத் தொடங்கினார்கள்.

தன் பக்தரைக் காப்பாற்ற விரும்பிய பிள்ளையார், அன்றிரவு ஊர் பெரியவர்களின் கனவில் தோன்றி தான்தான் அரிசி வழங்கியதாகவும், அந்தப் பெரியவர் எந்தத் தவறும் இழைக்கவில்லை என்று கூறியருளினார். இதையறிந்த ஊர் மக்கள் மனம் வருந்தி, பெரியவரிடம் மனினிப்புக் கேட்டார்கள்.அவரையே பிள்ளையாருக்கு தினமும் பூஜை செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.அவர் பரம்பரையினரே இன்றும் இக்கோவிலில் பூஜை செய்கின்றார்கள். அன்றிலிருந்து இப்பிள்ளையார் புழுங்கல் வாரிப் பிள்ளையார் என்றும் புழுங்கல் அரிசிப் பிள்ளையார் என்றும் அழைக்கப்படுகிறார்.

Read More