திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

திருக்குறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில்

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தரும் அபூர்வ நரசிம்மர்

சீர்காழியிலிருந்து 18 கி.மீ. தொலைவிலும், திருவெண்காட்டிலிருந்து 6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருகுறையலூர் உக்கிர நரசிம்மர் கோவில். தாயார் அமிர்தவல்லி. குறைகளை அகற்றும் ஊர் என்பதே மருவி, திருக்குறையலூர் என்று ஆயிற்று. மிகவும் பழமையான இத்தலத்தை 'ஆதி நரசிம்மர் தலம்' என்றும், தெற்கில் மிகவும் உயர்ந்த நரசிம்ம ஷேத்திரம் என்பதால் 'தட்சிண நரசிம்மர் தலம்' என்றும் சிறப்பு பெயரிட்டு அழைக்கிறார்கள் பத்ம புராணம், நாரத புராணத்தில் இத்தலம் ஸ்ரீ பூரண புரி, பூரண நரசிம்ம ஷேத்திரம் என குறிப்பிடப்பட்டு உள்ளது. திருமங்கையாழ்வார் அவதரித்த தலம் இது. பஞ்ச நரசிம்ம தலங்களில் முதலாவது இத்தலம்.

கருவறையில் உக்கிர நரசிம்மர். ஸ்ரீதேவி பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார். நரசிம்மரை இவ்வாறு இரண்டு தாயார்களுடன் தரிசிப்பது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத காட்சியாகும்.

தல வரலாறு

சிவனை அவமரியாதை செய்யும் வகையில், பார்வதியின் தந்தை தட்சன் ஒரு யாகம் நடத்தினான். இதனால் கோபம் கொண்ட பார்வதி, தந்தைக்கு புத்தி புகட்ட யாகம் நடக்கு மிடத்திற்குச் சென்றாள். அவளையும் தட்சன் அவமரியாதை செய்யவே, யாகத்தீயில் விழுந்து விட்டாள். கோபமடைந்த சிவன் தனது அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி அனுப்பி யாகத்தை அழித்தார். மேலும், பார்வதியைப் பிரிந்த துயரம் சிவனை வாட்டியது. நரசிம்மர் அவருக்கு இத்தலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி தந்து அமைதிப்படுத்தியதாக தல புராணம் கூறுகிறது.

பிரார்த்தனை

மன நலம் பாடுக்கப்பட்டவர்கள், கடன் பிரச்னை உள்ளவர்கள், குடும்பத்தில் பிரசினை உள்ளவர்கள் பிரதோஷ நாளிலும், அஷ்டமி, சுவாதி நாட்களிலும் நெய்விளக்கு ஏற்றி, பானக நைவேத்தியம் செய்து வழிபடுகிறார்கள். பித்ரு தோஷம் உள்ளவர்கள், அமாவாசை நாளில் இங்கு வந்து நரசிம்மருக்கு திருமஞ்சனம் செய்து இயன்ற அளவு அன்னதானம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்கப் பெற்று வம்சவிருத்தியுடன் சீரும் சிறப்புமாக வாழ்வர் என்பது ஐதீகம்.

Read More