திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவில்

கருணை மழை பொழியும் தேவி கருமாரியம்மன்

சென்னைக்கு மேற்குத் திசையில் 18 கி.மீ தொலைவில் உள்ளது, மிகப் பிரசித்தி பெற்ற அம்மன் தலமான திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில். ஆதிகாலத்தில் வேப்பமரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் 'வேலங்காடு' என்று அழைக்கப்பட்டது இந்த இடம். நாளடைவில் திருவேற்காடு ஆகியது. கரிய மழை மேகம் போல் அம்மன் தன் அருளை வாரி வழங்குவதால் கருமாரி என்று பெயர் பெற்றாள். சகலமுமாய் இருப்பவள் தேவி கருமாரியம்மன். எனவேதான் அவளை,

'காற்றாகி, கனலாகி கடலாகினாய், கருவாகி, உயிராகி உடலாகினாய்

நேற்றாகி, இன்றாகி நாளாகினாய் நிலமாகிப் பயிராகி உயிராகினாய்...'

என்று நெகிழ்கிறது கருமாரியம்மன் பதிகம்.

கருவறையில், கருமாரியம்மன் சுயம்பு வடிவில் காட்சி அளிக்கிறாள். இவள் சாந்த சொரூபத்துடன், தங்க விமானத்தின் கீழ் பராசக்தி அம்சமாக விளங்குகிறாள்.

இவளுக்குப் பின்புறம் ஓர் அம்பிகை சிலை உள்ளது. இவள் அக்னி ஜ்வாலையுடன், கைகளில் கத்தி, கபாலம், டமருகம், சூலம் ஏந்தி பத்ம பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். அம்மனின் சந்நிதியில், ஒரு விளக்கு அணையாமல் எரிகிறது. இதைப் 'பதி விளக்கு' என்கிறார்கள். அம்மனையும், இந்த விளக்கையும் சேர்ந்து தரிசித்தால் குடும்பத்தில் எந்தக் குறையும் இருக்காது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஒருமுறை ஈசன் தேவர்களின் துன்பம் நீக்கச் சென்றபோது, இறைவன் அம்பிகையிடம் 'நீயே சிவனும், சக்தியுமாகி ஐந்தொழில்களையும் செய்யவேண்டும்!' என்று கூற, அம்பிகை சம்மதித்து அகத்தியரிடம் தான் ஆட்சி செய்யத் தகுந்த இடம் கேட்க, அகத்தியர் 'வேற்காட்டை'க் காட்டுகிறார். மாயாசக்தியான அவளிடம் மகாவிஷ்ணு 'நீ பாம்பு உருவாக புற்றில் இருந்து அருளாட்சி செய். கலியுகத்தில் இப்போது இருக்கும் உருவத்துடன் திருக்கோயில் பெற்று விளங்குவாய்!' என்று கூற அன்னை கருமாரியாக கருநாக வடிவம் எடுத்து புற்றில் அமர்ந்தாள். அந்தப் புற்று இன்றும் திருக்கோயில் அருகே உள்ளது. ஈசனிடமிருந்து திருநீற்றைப் பெற்றே அம்பிகை ஐந்தொழில்களையும் செய்தாள். அதுவே தீர்த்தமாக உருமாறி விட்டது.

பிரார்த்தனை

சகல நோய்களையும் தீர்க்கும் மருந்தாக இங்கு வேப்பிலை பிரசாதமாக வழங்கப்படுகிறது. பௌர்ணமி, செவ்வாய் வெள்ளி கிழமைகளில் கோயிலில் பக்தர்களின் வருகை பெருமளவில் இருப்பது சிறப்பு. கடன், வியாதி, வழக்கு, திருமணத்தடை, குழந்தையின்மை என்று அனைத்துவித பிரச்சனைகளுக்கும் பக்தர்கள் இங்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருவிளக்கு பூஜை, வேப்பஞ்சேலை அணிதல், தேர் இழுத்தல், முடி காணிக்கை, குங்கும் அபிஷேகம், உப்பு காணிக்கை என்று பலவித பிரார்த்தனைகள் இங்கு நிறைவேற்றப்படுகிறது.

Read More
திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில்

முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் இருக்கும் திருப்புகழ் தலம்

சென்னையில் பிரசித்தி பெற்ற திருவேற்காடு தேவி கருமாரி அம்மன் கோவிலிலிருந்து ஒரு கி. மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத் தலம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பாலாம்பிகை . நான்கு வேதங்களும் வேல மரங்களாக மாறி நின்று ஈசனை வழிபட்டக் காரணத்தால், வேற்காடு (வேல் காடு) என்று பெயர் பெற்றது. 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தலம் இது. சிவலிங்கத்தின் பின்னால் ஈசனும் அம்பாளும் திருமணக்கோலத்தில் எழுந்தருளி இருக்கிறார்கள்.

முருகப் பெருமான், ஈசனை வழிபட்டு தனது தவறுக்குப் பரிகாரம் தேடிய தலம்

முருகப் பெருமான், பாலமுருகனாகத் திருவிளையாடிய போது, திருக்கயிலாயத்துக்குச் சென்ற பிரம்மாவிடம், பிரணவப் பொருள் கேட்க, அதற்கு பிரம்மா விடை அளிக்காததால், அவரை சிறையில் இட்டார். அவரைச் சிறையிலிட்ட குற்றத்துக்காக முருகப் பெருமான் சிவனாரை வழிபட முடிவு செய்தார். இத்தலத்திற்கு வந்து வேதபுரீஸ்வரை வழிபட்டார். பின்னர், அவருக்கு அருகில், மரகதலிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து, அதற்குக் கிழக்கில் மந்தாகினி தீர்த்தத்தையும், மேற்கில் தமது கூர்வேலால் வேலாயுத கூபத்தையும் (கிணறு) ஏற்படுத்தினார். மரகதலிங்கம், கந்தன் ஸ்தாபித்தது என்பதால் ''ஸ்கந்த லிங்கம்" ஆனது. இப்படி முருகப்பெருமானின் முன்பு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்திருப்பது வேறு எந்த தலத்திலும் நாம் காண முடியாத காட்சியாகும். திங்கட்கிழமைகளில் வேலாயுத கூபத்தில் நீராடி, முருகரையும் வேதவனநாதரையும் வழிபட்டால், அனைத்து பாவங்களும் நீங்கும் என்று தலபுராணம் விவரிக்கிறது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.

விஷம் தீண்டா பதி

திருமால் இத்தலத்துக்கு அருகில் உள்ள கண்ணபாளையம் என்ற இடத்தில் சிவபெருமானை பூஜித்து தான் இழந்த சக்கராயுதத்தை திரும்ப பெற்றார். இதனைப் பார்த்து அதிசயித்த ஆதிசேஷன், 'இனி இந்த திருத்தலத்தில், யாரைப் பாம்பு கடித்தாலும் அவர் மீது விஷம் அணுக விட மாட்டேன். வேறெந்த விஷப் பூச்சி கடித்தாலும் அப்படியே' என்றாராம். எனவேதான், திருவேற்காடு 'விஷம் தீண்டா பதி' ஆகி விட்டது. இங்கு பாம்புகள் யாரையும் தீண்டுவதில்லை

பிரார்த்தனை

இங்கு சிவனும் பார்வதியும் திருமண கோலத்தில் எழுந்தருளி இருப்பதால், இங்கு வந்து வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும். தொடர்ந்து 9 ஞாயிற்றுக்கிழமைகள் அல்லது கார்த்திகை மாத ஞாயிறு, திங்கள்கிழமைகளில் நீராடி வேதபுரீஸ்வரரை வழிபட்டால் தோல் சம்பந்தமான நோய்கள் அகலும்.

Read More