திருபுவனம்  கம்பகரேசுவரர் கோவில்

திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில்

பயத்தை நீக்கி, மனதில் துணிச்சலைத் தரும் கம்பகரேசுவரர்

கும்பகோணம் - மயிலாடுதுறை வழியில், கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது திருபுவனம் கம்பகரேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. கம்பகம் என்றால் நடுக்கம் என்று அர்த்தம். நடுக்கத்தை ஏற்படுத்தும் பயத்தை போக்கும் ஈசன் என்பதால் இந்த தலத்து சிவபெருமானுக்கு கம்பகரேசுவரர் என்ற பெயர் ஏற்பட்டது. இது தேவார வைப்புத் தலமாகும். பட்டுக்கும் பெயர் பெற்ற ஊர் இது.

சரபேசுவரருக்கான பிரதான தலம்

அம்மன் சன்னிதிக்கு நேர் எதிரே, இத்தலத்தின் முக்கிய சன்னிதியாக விளங்கும் சரபேசுவரர் சன்னிதி, தெற்கு முகமாய் அமைந்துள்ளது. சிவன், விஷ்ணு, காளி(பிரத்யங்காரா தேவி), துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசுவரர். நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது. இத்தலத்தில் சரபேசுவரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.

மகாவிஷ்ணு, தன் பக்தன் பக்த பிரகலாதனுக்காக, இரண்யன் பெற்ற வரத்தின்படி மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத வடிவமாக நரசிம்மராக அவதாரம் எடுத்து, இரண்யனை அழித்ததாக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி இரண்யனின் குடலை உருவி மாலையாக அணிந்த நரசிம்மர், இரண்யனின் உதிரத்தைக் குடித்தார். இதனால் அவரது செயல் அசுரத்தனமாக மாறியது. அவரது இந்த மாற்றத்தால் உலகே அச்சத்தில் நடுங்கியது. அனைவரும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். அதற்குச் செவி மடுத்த சிவபெருமான், தன் அம்சத்தில் இருந்து தோன்றிய வீரபத்திரரிடம் நரசிம்மரின் அட்டகாசங்களை நிறுத்தி, அவரை சாந்த மூர்த்தியாக்க ஆணையிட்டார்.

வீரபத்திரர் பேரண்டப் பட்சியாக, சரப வடிவம் ஏற்றார். சிங்கமுகம், நரிவால் கொண்டிருந்த அந்த தோற்றத்தைக் கொண்டு, நரசிம்மரை சாந்தப்படுத்தினார். அதே வடிவத்தில் சரபேசுவரர் என்ற பெயரில் கோவில் கொண்டார். பல்வேறு திருக்கோவில்களில் சரபேசுவரர் வடிவங்கள் இருந்தாலும், திரிபுவனம் கம்பகரேசுவரர் திருக்கோவிலில் உள்ள சரபேசுவரரே பிரதானமாக போற்றப்படுகிறது. இந்த ஆலயத்தின் உற்சவமூர்த்தியும் சரபேசுவரர் தான். இங்குள்ள சரபர் ஆறு கால்கள், நான்கு கரங்களுடன் பன்னிரு கால் பீடத்தையும், இரு கரங்கள் நரசிம்மனைப் பற்றியும் அமைந்துள்ளது.

பிரார்த்தனை

சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோசங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோசங்கள், கிரக தோசங்கள் அனைத்தும் நீங்கும். கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி , மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும். கடன் தொல்லை நீங்கும்.

செவ்வரளிப்பூ, மரிக்கொழுந்து, வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது. வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம்(வியாதி நீக்கம்) பால் அபிசேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது.

Read More
திருப்புவனம் புஷ்பவனேசுவரர்  கோவில்

திருப்புவனம் புஷ்பவனேசுவரர் கோவில்

பித்ரு வழிபாட்டிற்கு ஏற்ற ஆடி அமாவாசை

ஆடி மாதத்தில் சூரியன் கடக ராசியில் சஞ்சரிக்கும். இந்த மாதத்தில் தினக்கோளான சந்திரன் தனது ராசியான கடகத்தில் சூரியனுடன் சேரும் நாளே ஆடி அமாவாசை. இது சிறப்பு வாய்ந்த முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற அமாவாசையாகும். பித்ரு லோகத்தில் இருக்கும் ஆத்மாக்கள், அதாவது முன்னோர்கள், ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வருகிறார்கள். எனவே, ஆடி அமாவாசை என்று, பித்ருக்களை வழிபாடு செய்து, ஆசி பெறுவது வாழ்வை பல விதங்களில் மேம்படுத்தும். ஆடி அமாவாசை முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பித்ரு காரியம் செய்யவும், வேண்டி விரதம் இருக்கவும் ஏற்ற நாளாகும். ஆடி அமாவாசை அன்று விரதம் இருந்து, முன்னோர்கள் வழிபாடு செய்வது குடும்பத்தில் தலைமுறை தலைமுறையாக இருந்து வந்த தடைகள் மற்றும் சாபங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக காசி, ராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களை நாடுவது வழக்கம். தமிழ்நாட்டில் முன்னோர் வழிபாடு செய்வதற்கு ஏற்ற தலங்கள் சில உள்ளன. அவை, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில், பவானி சங்கமேஸ்வரர் கோவில், திருவள்ளூர் வீரராகவர் கோவில், கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், அரன்வாயல் வரமூர்த்தீஸ்வரர் கோவில், திருப்பள்ளிமுக்கூடல் குருவிராமேஸ்வரம் கோவில், பாபநாசம் திருநெல்வேலி மாவட்டம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க ஏற்ற தலமாகும்.

காசியை விட பதினாறு பங்கு அதிகம் புண்ணியம் கிடைக்கும் திருப்புவனம்

பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. இத்தலம் மதுரையில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது. இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. கோவிலுக்கு நேர் எதிரே வைகை ஆற்றின் வடகரையில் பார்வதி தேவியார் தவம் செய்த இடம் உள்ளது, இங்கே வந்த திருஞானசம்பந்தர் வைகை ஆற்றைக் கடக்க முயன்ற போது ஆற்று மணல்கள் எல்லாம் சிவலிங்கங்களாகக் காட்சியளித்தன. எனவே திருஞானசம்பந்தர் அங்கிருந்தபடியே தேவாரப் பதிகத்தைப் பாடி இறைவனை வணங்கினார். இறைவன் புஷ்பவனேஸ்வரர் நந்தியை சாய்ந்திருக்கச் சொல்லி அவருக்கு காட்சி அருளினார்.

காசிக்கு செல்ல இயலாதவர்கள் திருப்புவனத்திற்கு வருகை புரிந்து புஷ்பவனேசுவரர் சன்னதி முன் உள்ள வைகை ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு அஸ்தி கரைப்பது, திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் அவர்களது ஆத்மா சாந்தியடையும், அவர்களது ஆசிர்வாதம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இங்கு அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோசனம் கிடைக்கும் என்கிறார்கள். அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் திருப்புவனம் ஆகும். மேலும் இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம்புண்ணியம் அருளும் தலம்.

Read More