தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தக்கோலம் ஜலநாதீசுவரர் கோவில்

பிரயோக நிலையில் சக்கரத்தை ஏந்தி இருக்கும் அபூர்வ துர்க்கை

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

இக்கோவில் பிரகாரத்தில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை நான்கு திருக்கரங்களுடன், ஸ்ரீ திரிபங்கி நிலையில் காட்சித் தருகின்றாள். திரிபங்கி நிலை என்பது தலை, இடை, கால்கள் என உடலின் மூன்று பகுதிகளும், வளைவுகளுடன் மிகவும் ஒய்யாரமாக நிற்கும் நிலையாகும். தலையில் சிம்மமுகத்துடன் கூடிய கரண்டமகுடமணிந்துள்ளார். கண்களில் தாய்மை. இதழ்களில் ஒரு புன்னகை. காதுகளில் மகர குண்டலமும், கழுத்தில் அணிகளன்களுடன் கூடிய சரப்பளிகளை நாம் காணலாம். கையில் சங்கு, சக்கரத்துடன் காணப்படுகிறாள். வலது கையில் இருக்கும். பின் இரு கரங்களில் சங்கு, சக்கரத்தை ஏந்தி இருக்கின்றாள். வலது பின்கையில் உள்ள சக்கரம், பிரயோக நிலையில் இருக்கின்றது. இப்படி பிரயோக சக்கரத்தை ஏந்தி இருக்கும் துர்க்கையை நாம் காண்பது அரிது. இடது முன்கையை எந்த ஒரு முத்திரையும் காண்பிக்காமல் இடது தொடையின் மேல் வைத்துள்ளாள். மார்பில் சன்னவீரம், கொடி இடை, புலிக்கச்சுடன் கூடிய இடை ஆடை. கால்கள் வளைந்த நிலையில் ஸ்வஸ்திகத்தில் உள்ளன. பூத வரியில், பறவை முதற்கொண்டு தலைகீழாக தொங்கும் பூதங்கள், மத்தளம், ஒருகண் சிறுபறை முழக்கும் பூதம், கையில் தாளம் போடும் பூதம், இசை பாடும் பூதம் முதலியவை இருக்கின்றன. துர்க்கை அணிந்திருக்கும் அணிகலன்களின் வேலைப்பாடு நம்மை பிரமிக்க வைக்கின்றது.

துர்க்கை காயத்ரி

துர்க்கை என்றால் துக்கங்களையெல்லாம் போக்குபவள் என்று அர்த்தம். நம் துக்கங்களையெல்லாம் போக்கும் பணியை மேற்கொள்ளும் தேவதைகளில் துர்க்கைக்கு தனியிடம் உண்டு. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வழிபடுவதும் ராகுகாலத்தில் தீபமேற்றி வழிபடுவதும் எண்ணற்ற பலன்களை வழங்கவல்லது. அதேசமயம், தினமும் கீழ்க்கண்ட துர்க்கை காயத்ரியை 11 முறை அல்லது 24 முறை அல்லது 54 முறை சொல்வது நல்ல பலனை கொடுக்கும்.

ஓம் காத்யாயனய வித்மஹே

கன்யாகுமாரி தீமஹி

தந்நோ துர்கி ப்ரசோதயாத்

அதாவது, காத்யாயன மகரிஷியின் மகளாக அவதரித்தவளே. நித்திய குமரியாக திகழ்பவளே. உன்னை வணங்கித் தொழுவதால், என்னுடைய மனதை தெளிவுபடுத்துவாயாக. குழப்பமில்லாத மனதையும் அறிவையும் மேம்படுத்துவாயாக. நற்பலன்களை வாரி வழங்கும் உன்னுடைய பாதங்களைப் பணிகிறேன் என்று அர்த்தம்.

Read More
ஜலநாதீசுவரர் கோவில்

ஜலநாதீசுவரர் கோவில்

அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் தக்கோலம் தட்சிணாமூர்த்தி

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் தக்கோலம். இறைவன் திருநாமம் ஜலநாதீசுவரர். இறைவி கிரிராஜ கன்னிகை.

பொதுவாக தட்சிணாமூர்த்தி ஒருகாலை மற்றொரு காலின் மீது மடித்து வைத்திருக்கும் திருக்கோலத்தை பார்த்திருப்போம். ஆனால், இங்கு அமர்ந்த நிலையில்(உத்குடிகாசனம் / உத்கடி ஆசனம்) வேறு எங்கும் காண முடியாத உத்கடி ஆசன திருக்கோலத்தில் தட்சிணாமூர்த்தி வீற்றிருக்கின்றார். கல்லால மரத்தின் கீழ் வலக்காலைத் தொங்கவிட்டு, இடக்காலைக் குத்துக்காலிட்டு அபூர்வமாகக் காட்சி தருகின்றார். மனதைக் கட்டுப்படுத்தும் இந்த ஆசனம், மனம் அலைபாயும் மாணவர்களுக்கு கல்வி மேன்மை தரும். தலையை இடதுபுறம் சாய்த்த வண்ணம் ஒரு கையில் ருத்ராட்ச மாலையும், மற்றொரு கையில் தாமரையும்கொண்டும், காலடியில் முயலகன் இல்லாமலும் அருள்பாலிக்கிறார். வலது பின் கையில் அக்க மாலையுடன், சீடர்களை ஆட்கொண்டருளும், அடக்கியாளும், கண்டிப்போடு ஆசிரியர் போன்ற பாவனையில் இருக்கிறார்.

கல்வியில் நாட்டம் தரும் தட்சிணாமூர்த்தி

இவரை மஞ்சள் நிற மலர்களால் வியாழக்கிழமைகளில் அர்ச்சித்து வழிபடுவது விசேஷமானது. வியாழக்கிழமை தினங்களில் இவருக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை வாங்கி வந்து தினமும் தலையில் தடவிவந்தால் மாணவர்களுக்குக் கல்வியில் நாட்டம் பெருகும், நினைவாற்றல் கூடும் என்பது ஐதீகம். வியாழக்கிழமை தோறும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.

Read More