பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில்

பொழிச்சலூர் அகத்தீசுவரர் கோவில்

வடதிருநள்ளாறு - திருநள்ளாறுக்கு இணையான சென்னையிலுள்ள சனி பகவான் பரிகார தலம்

சென்னை மாநகரம் பல்லாவரத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள பொழிச்சலூர் பகுதியில் அமைந் துள்ளது அகத்தீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி. பல்லவர்கள் காலத்தில் பொழில் சேர் ஊர் என்று அழைக்கப்பட்டு அதுவே மருவி, பொழிச்சலூர் என்றானது. ஒரு காலத்தில் பல்லவர்கள் இவ்விடத்தில் யானைகளை பாதுகாத்து வந்தார்கள் . இங்குள்ள அடையார் ஆறும் மற்றும் அருகில் உள்ள மடுவும் யானைகளை பாதுகாக்க உகர்ந்ததாக இருந்தது . அதனால் ஆணைகாபுத்தூர் என்று பெயர் பெற்றிருந்த இப்பகுதி பின்னர் மருவி அனகாபுத்தூர் என்று தற்போது அழைக்கப்படுகிறது. அகத்திய முனிவர் தென்பகுதியில் சிவபூஜை செய்து வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான தலம் இது

இக்கோவிலில் எழுந்தருளி இருக்கும் சனிபகவான் மிகவும் வரப்பிரசாதி என்று போற்றப்படுகிறார். சனி பகவான் பிறருக்கு கண்டச்சனி ,ஏழரை சனி ,ஜென்ம சனி என்று அவர்களின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்றார் போல தண்டனைகளை கொடுத்து வந்ததால், அவருக்கு ஏற்பட்ட பாவங்களை போக்க சிவபெருமானை கேட்க அவர் இந்த இடத்தில் வந்து தனக்கு பூஜை செய் என்று கூறினார் அதன்படி அவர் இங்கு வந்து குளத்தை உருவாக்கி இறைவனை வேண்டிவந்தார் அதனால் அவர் பாவங்கள் போயிற்று . இங்குள்ள குளத்திற்கு வடதிருநள்ளாறு தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. சனிபகவான் திருநள்ளாறு திருத்தலத்தில் எழுந்தருளி இருப்பதைப்போலவே இங்கும் தனியாக எழுந்தருளி சின்முத்திரையுடன் காட்சியளிக்கின்றார். இங்குள்ள சனி பகவான் மங்கள சனீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். ஆகையால் இத்தலத்தை வடதிருநள்ளாறு என்று போற்றுகின்றனர். எனவே திருநள்ளாறுக்குச் சென்று பரிகாரம் செய்ய இயலாதவர்கள் இங்குள்ள சனீஸ்வரனுக்கு அந்த பரிகாரங்களைச் செய்கின்றனர். சனி தோஷங்களுக்கு பரிகார தலமாக இக்கோவில் விளங்குகிறது.

இக்கோவிலின் மற்றுமொரு சிறப்பு, கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்துள்ள சம்ஹார மகா கால பைரவர். அஷ்டமி தோறும் இங்கு நடைபெறும் பைரவ வழிபாடு மிகச் சிறப்பு வாய்ந்தது.

பிரார்த்தனை

ஏழரைச் சனி, பாதச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டகச் சனி என எந்த சனிதோஷம் இருந்தாலும் பொழிச்சலூரில் இருக்கும் அகத்தீஸ்வரரையும், சனிபகவானையும் வணங்கி வழிபட்டால் தோஷநிவர்த்தி அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More