மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மைசூர் சாமுண்டீஸ்வரி கோவில்

மைசூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

மைசூரில் இருந்து சுமார் 13 கி.மீ தொலைவில் உள்ளது சாமுண்டி மலை . ஏறத்தாழ 3500 அடி உயரத்தில் உள்ள இந்த மலை மேல் தான் சாமுண்டீஸ்வரி கோவில் உள்ளது . துர்கை அம்மனின் ரௌத்திர கோலம்தான் சாமுண்டீஸ்வரி அம்மன். 51 சக்தி பீடங்களில், இத்தலம் சம்பப்பிரத பீடம் ஆகும். சாமுண்டீஸ்வரி அம்மன் இங்கே ஆதி சக்தியாக வணங்கப்படுகிறார். மேலும் இவள் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒன்றான மகா பிரம்மம் என்றும், மகா சக்தி என்றும் பக்தர்களால் வழிபடப்படுகிறார்.

முன்னொரு காலத்தில் மைசூர் நகரமானது, மகிஷாசூரன் என்ற அரக்க மன்னனால் ஆளப்பட்டது. இவனது பெயரிலுள்ள மகிஷா என்ற வார்த்தை காலப்போக்கில் மருவி மைசூர் என்று தற்போது அழைக்கப்பட்டு வருகிறது. பெண் தெய்வமான சாமுண்டீஸ்வரி, மகிஷாசுரனை வதம் செய்து அந்த ஊர் மக்களை அரக்கனிடம் இருந்து காப்பாற்றியதால், காவல் தெய்வமாக மைசூர் நகரத்திலேயே தங்கிவிட்டாள் என்கிறது வரலாறு. சாமுண்டி மலைப்பாதையில் மகிஷாசுரன் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கையில் கத்தியும், மற்றொரு கையில் நாகபாசமும் கொண்டு உயர்ந்த வடிவில் மகிஷாசுரன் நிற்கிறான்.

கருவறையில் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அம்மன் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். பழமையான இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டது. சாமுண்டீஸ்வரி அம்மன் மூல விக்கிரகம் தங்க மூலாம் பூசப்பட்டது . மூலத்தான கதவுகள் வெள்ளியிலானது . அம்மனின் காலடியின் கீழ் மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் விழிகள் பிதுங்கிய வண்ணம் இருக்கிறான். திரிசூலத்தால் அம்மன் இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள். மூன்றாவது ஆடிவெள்ளியில் தேவி அவதரித்தார் என்பதால், ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

மைசூர் ராஜ வம்சத்தின் குல தெய்வம் சாமுண்டீஸ்வரி அம்மன். 1573ம் ஆண்டு மைசூரை நான்காம் சாமராஜ உடையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். ஒருநாள் இவர் தனது குல தெய்வமான சாமுண்டி தேவியை தரிசிக்கச் சென்றார். தரிசித்து முடிந்ததும் பல்லக்கில் ஏறி மைசூருக்குப் புறப்பட்டார். சிறிது தொலைவு சென்ற பின் திடீரென இடி, மின்னல், மழை என்று இயற்கை சீற ஆரம்பித்தது. பாதுகாப்புக்காக ஒரு பெரிய மரத்தின் அடியில் பல்லக்கை வீரர்கள் நிறுத்தினார்கள். 'நாங்கள் பத்திரமாக ஊர் திரும்ப அருள்புரிவாய் அம்மா' என்று அந்த மரத்தடியிலிருந்தே சாமுண்டிதேவியை வேண்டியபடி அன்னை கோயில் கொண்டிருந்த மலையுச்சியைப் பார்த்தார். மழை ஒரு திரையாகி ஆலயம் தெரியாதபடி மறைத்தது. சரி, சற்றுத் தொலைவு சென்று பார்க்கலாம் என தன் வீரர்களுடன் சில அடி தூரம் மன்னர் நகர்ந்தபின், அவர் அதற்கு முன் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மரத்தில் இடி விழுந்து மரம் தீப்பற்றி எரிந்தது. தன்னைக் காப்பாற்றவே அந்த இடத்திலிருந்து தேவி, கோவிலைத் தெரியாமல் செய்திருக்கிறாள் என உணர்ந்த சாமராஜ உடையார், அதற்கு நன்றிக் கடனாக மைசூரின் எந்தப் பக்கத்திலிருந்து பார்த்தாலும் கோவில் தெரியும் வண்ணம் சாமுண்டீஸ்வரிக்கு ஆலயம் எழுப்பினார்.

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா திருவிழா

சாமுண்டீஸ்வரி அம்மன் விஜயதசமி அன்று மகிஷாசுரனை வதம் செய்தாள். அதனால் தான் மைசூரில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கிபி 1610-ம் ஆண்டில் இருந்து மைசூரை ஆண்ட உடையார் மன்னர்கள், போரில் வென்றதை நினைவுக்கூறும் வகையில் ஆண்டுதோறும் விஜயதசமி பண்டிகையின்போது 10 நாட்கள் தசரா விழாவை கொண்டாட தொடங்கினர். தசரா பண்டிகையின் முதல் நாள் மைசூர் உடையார் வம்ச மன்னர் சாமுண்டீஸ்வரி அம்மனை வணங்கி சிறப்பு பூஜைகள் செய்து விழாவினை தொடங்கி வைப்பார். பின்னர் புகழ்பெற்ற அரச தர்பார் வைபோகம் நடைபெறும் அதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு அரச வம்சத்தினரின் தர்பார் கோலத்தினை காண்பார்கள். நவராத்திரி ஒன்பது நாட்களும் சிறப்பான பூஜைகளும், கொண்டாட்டங்களும் மைசூரில் நடக்கும். விஜயதசமி தினத்தன்று ஜம்பூ சவாரி எனும் யானைகள் அணிவகுப்பு சிறப்பானது. அலங்கரிக்கப்பட்ட தலைமை யானையின் மீது சாமுண்டீஸ்வரி அம்மன் 750 கிலோ எடை கொண்ட தங்க மண்டபத்தில் பவனி வருவது தசரா திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.

ஞாயிறு, செவ்வாய், வெள்ளியன்று இத்தலத்தில் கூட்டம் அதிகம் இருக்கும். இந்த அன்னையை வணங்கினால், எதிரிகளை எளிதில் வெற்றிகொண்டு, வாழ்வில் நல்லருள் பெறலாம் என்பது ஐதீகம்.

Read More