ஆனேகுட்டே விநாயகர் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

ஆனேகுட்டே விநாயகர் கோவில்

நெற்றியில் நாமம் தரித்த விநாயகர்

கர்நாடகா மாநிலம், உடுப்பியிலிருந்து சுமார் 31 கி.மீ தொலைவில் உள்ள கும்பாசி என்னும் ஊரில் ஆனேகுட்டே விநாயகர் கோவில் அமைந்துள்ளது. ஆனே என்றால் யானை, குட்டே என்பது சிறுகுன்றைக் குறிக்கிறது. யானை முகத்துடன் விநாயகர் குடியிருக்கும் குன்று என்பதே ஆனேகுட்டே என்றானது. கோவில் கருவறையில் விநாயகர் ஒரே கல்லிலான யானை முகம் கொண்ட 12 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இந்த விநாயகர் திருமேனியானது தமிழகத்தில் உள்ள விநாயகரின் வடிவமைப்பு போல் இல்லாமல், யானை போன்ற உருவ அமைப்பில் உள்ளது. இங்கு அமைந்துள்ள விநாயகரின் நான்கு கரங்களில், மேலிரு கரங்கள் வரம் தரும் வரஹஸ்தத்துடனும், கீழ் இரு கரங்கள் சரணடைந்தோரை காக்கும் அபயஹஸ்தத்துடனும் அமைந்திருக்கின்றன. இந்த விநாயகருக்கு நெற்றியில் திருநீறுக்குப் பதிலாக நாமம் அணியப்படுவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். இங்குள்ள விநாயகருக்கு விஷ்ணு ரூப கணபதி, விஷ்ணு ரூப பரமாத்மா, சித்தி விநாயகர், சர்வ சித்தி பிரதாய்கா என்ற பெயர்களும் உண்டு. தினமும் இவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றப் படுகின்றது.இந்த விநாயகர் சிலை வளர்ந்து வருவதாக பக்தர்களிடம் ஒரு நம்பிக்கையுள்ளது

திருவிழாக்கள்

இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி, மார்கழி பிரம்மோற்சவம் ஆகியவை விமர்சையாக கொண்டாடப்படுகிறது. பறவைகளின் ஒலி கேட்டு தான், அதிகாலையில் நாம் எழுவோம். அந்தப் பறவைகளையே அதிகாலையில் எழுப்பவும், பறவைகள் மற்றும் கால்நடைகளுக்கு நோய் நொடி ஏற்படாமல் இருக்கவும் கார்த்திகை மாதத்தில், பட்சி சங்கர பூஜை என்னும் விசேஷ நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

பிரார்த்தனை

கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம், புத்திர பாக்கியம் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைக்க இங்கு பிரார்த்தனை செய்கின்றனர். இக்கோவிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் பக்தர்கள் விரும்பும் நாளில் 400 கிலோ அரிசி, 1008 அல்லது 125 தேங்காய்களால் விநாயகருக்கு அலங்காரம் செய்யயப்படுகிறது. இதனை மூடுகணபதி பூஜை, அரிசி கணபதி பூஜை என்கின்றனர்.

Read More