கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருஷ்ணாபுரம் அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில்

ஆறடி உயர திருமேனியுடன், கண்களில், ஒளிர் விடும் பிரகாசத்துடன் தோற்றமளிக்கும் ஆஞ்சநேயர்

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகிலுள்ள கிருஷ்ணாபுரத்தில் அமைந்துள்ளது அபய ஹஸ்த ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில். . இராமர் இத்தலத்தில் யாகம் செய்ததால், இத்தலத்தில் எங்கு தோண்டினாலும் வெண் சாம்பல் போன்ற திருமண் கிடைக்கிறது. இக்கோவிலில் தனிச் சன்னதியில் ஆறடி உயர திருமேனியுடன் அபய ஹஸ்த ஆஞ்சநேயர் மிக கம்பீரமாக எழுந்தருளி இருக்கிறார். அவரது திருப்பாதங்கள் பக்தர்களை நோக்கி ஆசிகள் வழங்க வருவது போல் உள்ளது. வலது திருக்கரம் 'அபய முத்திரை' காட்டி, பக்தர்களுக்கு பயத்தை போக்குகிறது. இடுப்பின் இடதுபுறத்தில் அவரது இடது திருக்கரம் பதிந்துள்ளது. மார்பினை மூன்று மணிமாலைகள் அலங்கரிக்கின்றன. அவற்றில் ஒன்றில் பதக்கம் உள்ளது. காதுகளை மணிகுண்டலங்களும், காதில் மேல்பகுதியில் அணிகலமும் அணிந்திருக்கிறார். அவரது வால் தலைக்கு மேல் சென்று, நுனி சற்றே வளைந்து, சிறிய மணியுடன் காணப்படுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக அவரது கண்களில், ஒளிர் விடும் பிரகாசம், தரிசிப்பவரை பரவசத்தில் ஆழ்த்தும்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள குளத்தின் படியில் படிப்பாயாசம் சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம்.

Read More
கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில்

உலகப் புகழ்பெற்ற, உயிரோட்டமுள்ள கிருஷ்ணாபுரம் சிற்பங்கள்

திருநெல்வேலி – திருச்செந்தூர் சாலையில், 17 கி.மீ. தொலைவில் கிருஷ்ணாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது வெங்கடாசலபதி கோவில். மூலவர் வெங்கடாசலபதி. தாயார் அலர்மேல்மங்கை. பதினாறாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது.

இக்கோவிலில் உள்ள கலையழகு மிளிரும் சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. நம் முன்னோர்கள் சிற்பக்கலையில் அடைந்திருந்த உன்னத நிலையும், தொழில் நுட்பத்திறனும் காண்போரை பிரமிக்க வைக்கும். வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும். இங்குள்ள எழில் கொஞ்சும் சிற்பங்களில் தெரியும் முகபாவங்கள், கை மற்றும் கால்களில் ஓடும் நரம்புகள் கூட தெளிவாகத் தெரியும்படியான நுணுக்க வேலைப்பாடுகள், தத்ரூபமாக காணப்படும் ஆடை அணிகலன்கள் ஆகியவற்றை கவனிக்கும்போது, இவை சிற்பங்களா அல்லது உயிர் பெற்று வந்து நிற்கும் நிஜ உருவங்களா என்று நம்மை எண்ண வைக்கும். தட்டினால் இனிய ஓசை எழுப்பும் இசைத் தூண்கள், ஒரு சிற்பம் பற்றியுள்ள வளைவான வில்லின் ஒரு முனையில் ஒரு குண்டூசியைப் போட்டால் மற்றோரு முனை வழியாக தரையில் விழுவது போன்ற நேர்த்தியான வடிமைப்பு கொண்ட சிற்பங்கள், நமது சிற்பிகளின் திறமையை உலகுக்கு பறை சாற்றுகின்றன.

இக்கோவிலில் ரதி-மன்மதன், ரம்பை, கர்ணன், அர்ஜுனன், அரசியை தோளில் சுமக்கும் வாலிபன், யானையும் காளையும் (ரிஷப குஞ்சரம்) சிற்பம், பெண்ணின் தோளில் கொஞ்சும் மொழி பேசும் பச்சைக்கிளி முதலிய, மொத்தம் 42 அழகு மிளிரும் சிலைகளைக் காணலாம்.

ராஜகுமாரியை தோளில் சுமந்து கடத்திச் செல்லும் வாலிபன் சிற்பம் - அவன் உடலில் ரத்தக் காயம் தெரியும் ஆச்சரியம்

இக்கோவிலில், ஒரு தூணில் ராஜகுமாரியை ஒரு வாலிபன் கடத்திச் செல்லும் காட்சி சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. ராஜகுமாரி தன்மேல் வெயில் படாதவாறு இருக்க தன் முந்தானையை ஒருகையால் தலைக்குமேல் பிடித்துக்கொண்டு காட்சியளிக்கிறாள். அவள் உடல் எடையை சுமப்பதால், உடற்கூற்றியல்படி வாலிபனின் கைகளில் தசைகள் முறுக்கேறியுள்ளன, விலா எலும்புகள் விரிவடைந்து காணப்படுகின்றன. அவர்களைப் பிடிக்க, ஈட்டி ஏந்திய குதிரை படை வீரர்கள் பின் தொடர்வதை நாம் காணலாம். இந்த சிற்பத்தில் மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால், வாலிபனின் விலா எலும்பு பக்கத்தில் ரத்த காயம் போன்று சிவப்பு நிறம் படர்ந்து இருப்பதுதான். சிவப்பு ரேகை படர்ந்த ஒரு பாறையை தேர்ந்தெடுத்து அதில் மேலே குறிப்பிட்ட அத்தனை உருவங்களையும் வடித்து, அந்த வாலிபனின் விலாவில் ரத்தக்கறை படிந்து இருப்பது போல் சிற்பத்தைப் பூர்த்தி செய்து இருப்பது, அந்த காலத்து சிற்பிகளின் கலை நயத்திற்கும், கைவண்ணத்திற்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

இந்த சிற்பத்திற்கு பின்னால் ஒரு கற்பனை கதை உண்டு. சோழ நாட்டு ராஜகுமாரியை பாண்டியநாட்டு வாலிபன் ஒருவன் காதலிக்கின்றான். தங்கள் திருமணத்திற்கு அரசனின் சம்மதம் கிடைக்காது என்பதால், இருவரும் பாண்டிய நாட்டிற்கு தப்பிச் சென்று திருமணம் செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். தப்பிச் செல்லும் இவர்கள் இருவரையும் பிடிக்க குதிரை படை வீரர்கள் விரைகிறார்கள். ராஜகுமாரியால் ஓட முடியாததால், அவளை வாலிபன் தோளில் சுமந்து செல்கின்றான். வாலிபன் பாண்டியநாட்டு எல்லையை நெருங்கும் போது, அவனை தடுத்து நிறுத்தும் கடைசி முயற்சியாக அவன்மீது ஈட்டி எறிகிறார்கள். ஈட்டி அவன் விலாவில் பட்டு ரத்த காயம் உண்டானது. ஆனாலும் அவன் ராஜகுமாரியோடு தன் நாட்டுக்கு சென்று விடுகிறான்.

Read More