கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் தன் மனைவியருடன் காட்சி தரும் சூரிய பகவானின் அபூர்வ கோலம்

சென்னை கோயம்பேடு பகுதியில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. ராமாயணத்தோடு தொடர்புடைய கோயில்களில் இக்கோவிலும் ஒன்றாகும். 1,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருத்தலம் இது.

பொதுவாக சிவன் கோயில்களில் சூரியன் நடுவிலும், சுற்றிலும் மற்ற எட்டு கிரகங்களும் அமைந்திருக்கும். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்களின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருக்கின்றது. சதுர மேடையில் தாமரையை ஓத்தவடியில் நவகிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது . தாமரை நடுவில் சூரிய பகவான் தன் இரு மனைவியர்கள் உஷா மற்றும் பிரத்யுஷா உடன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் எழுந்தருளி இருக்கிறார் . அவரது தேரோட்டியான அருணன் ஏழு குதிரைகளை பிடித்தபடி சாரதியாய் இருக்கிறரர். இவர்களைச் சுற்றி மற்ற எட்டு கிரகங்கள் அமைந்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நவக்கிரக அமைப்பை நாம் மற்ற தலங்களில் காண்பது அரிது.

Read More
கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்

ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலன் தரும் சிவாலயம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இறைவன் திருநாமம் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி. சுவாமியும், சுவாமியின் வலப்புறமுள்ள தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி உள்ளனர். மதுரையில் மீனாட்சி வலப்புறம் இருக்கிறாள் , அதுபோல், இத்தலத்திலும் அம்பாள் அதிக மகிமையுடன் உள்ளாள். இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம். தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு இருக்கிறாள். சுவாமிக்கு வலது பக்கம் இருப்பதால், அம்பாளை வணங்கினால் கல்யாண மாலை தோள் சேரும் என்பது ஐதீகம்.

மூக்கணாங்கயிறுடன் காணப்படும் அபூர்வ நந்தி

இந்தக் கோவிலில் உள்ள நந்திக்கு மூக்கனாங்கயிறு இருக்கின்றது. இப்படிப்பட்ட நந்தியை நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

இத்தலத்தை 'ஆதிபிரதோஷத்தலம்' என்கிறார்கள். ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

தல வரலாறு

சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது சக்கரம் லிங்கம் மீது ஏறி, ரத்தம் வெளிப்பட்டது. பயந்த மன்னன் பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்டு, கோயில் எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாணம் பாதி புதைந்துவிட்டது. எனவே இங்கு சிவன் குறுகியவராக (குள்ளமானவராக) காட்சி தருகிறார். இதனால் சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. 'குசலவம்' என்றால் 'குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர் குசலவபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுவதாகவும் சொல்வர்.

தந்தை ராமனை எதிர்த்துப் போரிட்ட காரணத்தால், லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷம் நீங்க லவ-குசர்கள் தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பது சிரமமாக இருந்தது. லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக் கொண்டு குறுங்காலீஸ்வரராய் காட்சி அளித்தார். ஈசனின் கருணையைக் கண்டு புளகாங்கிதம் அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். முன்பு குசவபுரிஸ்வரர் என்றும் பின்பு குறுங்காலீஸ்வரர் என்றும் அழைக்கப்பட்டார். அவரை நினைத்து வழிபட பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

ஞாயிற்றுக்கிழமை ராகு கால சரபேஸ்வரர் வழிபாடு

கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காணப்படுகிறார். ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் இவருக்கு பூஜை நடக்கிறது. சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரபலம். ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.

பிரார்த்தனை

இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால், மோட்ச தலமாக கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்தநாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.

Read More
கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் கோவில்

வைகுந்த வாசப் பெருமாள் அமர்ந்திருக்கும் அபூர்வத் தோற்றம்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெகு அருகில் உள்ளது வைகுண்ட வாசப் பெருமாள் கோவில். தாயார் திருநாமம் கனகவல்லி .

‘கோ’ எனப்படும் அரசனாகிய ராமனின் குதிரைகளை, ‘அயம்’ என்னும் இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த இடம் என்பதால் ‘கோயம்பேடு’ என பெயர் பெற்றது. பேடு என்றால் ‘வேலி’ என்று பொருள். இக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது.

வைகுண்ட பெருமாள் பெரும்பாலும் அமர்ந்த நிலையில்தான் காட்சி தருவார். ஆனால் இக்கோவிலில், அவர் ஸ்ரீதேவி , பூதேவி தாயாருடன் நின்ற கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும்.

சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில் இருக்கும் அரிய தோற்றம்

இத்தலத்தில் ராமர், சீதை ஆகிய இருவர் மட்டுமே, லட்சுமணன் அனுமன் உடன் இல்லாமல் காட்சி தருவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இக்கோவிலில் ராமர் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்து இருப்பதும் ஒரு அபூர்வ கோலமாகும். மேலும் இந்தக் கோவிலில், தனிச் சன்னதியில் சீதாதேவி கர்ப்பிணி கோலத்தில், மேடிட்ட வயிற்றுடன் எழுந்தருளி இருப்பது ஒரு அபூர்வ தோற்றமாகும். இத்தலத்தில் சீதா தேவிக்கு நடத்தப்படும் வளைகாப்பு உற்சவம் மிகவும் சிறப்பானது. குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சீதா தேவிக்கு வளையல் அணிவித்து வேண்டிக்கொண்டால், விரைவில் அந்த பாக்கியம் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோவில் முன் மண்டபத்தில் ராமனின் மைந்தர்கள் லவன், குசன் வால்மீகி முனிவரை வணங்கிய கோலத்தில் காட்சி தருகிறார்கள்.

பிரார்த்தனை

கோவில் வளாகத்தில் இரண்டு வில்வ மரங்கள், ஒரு வேம்பு மரம் பிணைந்து காணப்படுகிறது. இம்மரங்கள், சிவன், விஷ்ணு மற்றும் அம்பிகை அம்சமாக கருதப்படுகின்றன. இம்மரத்திற்கு 'பார்வதி சுயம்வர விருட்சம்' என்று பெயர். ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், இவ்விருட்சங்களுக்கு கல்யாண தோஷம் நிவர்த்தி வேண்டி, பக்தர்கள் பூஜை செய்கின்றனர்.

Read More