கோட்டைப்பட்டி  சென்றாயப் பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

கோட்டைப்பட்டி சென்றாயப் பெருமாள் கோவில்

சின்னஞ்சிறு பாலகனாக, தாடி மீசையுடன் காட்சி தரும் பெருமாள்

திண்டுக்கல் மாவட்டம், பழைய வத்தலகுண்டுக்கு அருகில் உள்ள கோட்டைப்பட்டியில், 500 படிகள் கொண்ட மலையின்மீது அமைந்திருக்கிறது சென்றாயப் பெருமாள் கோவில். இக்கோவிலில் சின்னஞ்சிறு பாலகனாக, அதே நேரம் முறுக்கு மீசையும் தாடியுமாகப் பெருமாள், இரு கைகளையும் கூப்பி வணங்கியபடி, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கின்றார். தாடி மீசையுடன் இருக்கும் பெருமாளுக்கு சங்கும் சக்கரமும் இல்லை. ஆனால் அவருக்கு, சங்கும், சக்கரமும் ஏந்திய திருப்பதி வேங்கடாசலபதி போன்று அலங்காரம் செய்யப்படுகிறது.

பெருமாள் தாடி மீசையுடன் காட்சி தருவதற்கான காரணம்

பல நூற்றாண்டுகளுக்கு முன், இந்தப் பகுதியில் கிருஷ்ணதேவராயர் வம்சத்தை சேர்ந்த சென்னமநாயக்கர் என்பவர் பெரும் செல்வந்தராக இருந்தார். 60 வயதைக் கடந்த அவருக்குக் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒருநாள், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகளில் கன்று போடாத ஒரு பசு மட்டும் திரும்பவில்லை என்பதை அறிந்து, அந்தப் பசுவைத் தேடிச் சென்றார். அடர்ந்த மரங்கள் நிறைந்திருந்த மலைப் பகுதியில் ஓர் இடத்தில் அந்தப் பசுவைக் கண்டார். கன்று ஈனாத அந்தப் பசுவின் மடியில் இருந்து ஒரு சின்னஞ்சிறு பாலகன் பால் அருந்திக் கொண்டு இருந்தான்.

இயற்கைக்கு மாறாக நடைபெற்ற அந்தக் காட்சியைக் கண்டு திகைத்துப் போனார் சென்னம நாயக்கர். அவருக்கு, தான் சென்றாயப் பெருமாளே என்பதை உணர்த்தி, அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாகவும், அவரும் அவருடைய வம்சத்தில் வந்தவர்களுமே தனக்குப் பூஜைகள் செய்ய வேண்டும் என்றும் கூறினான் அந்த பாலகன்.

வம்சமே இல்லாமல் வருத்தப்பட்டுக் கொண்டிருந்த சென்னம நாயக்கருக்கு, இறைவனின் அருளால் ஒன்றல்ல, ஆறு பிள்ளைகள் பிறந்தனர். அவர்களில் மூத்த பிள்ளையே கோவிலில் பூஜை செய்யும் பாக்கியம் பெற்றவர். குழந்தை வடிவில் வந்து, சென்னம நாயக்கருக்கு அருள்புரிந்த இறைவன், அவர்களின் அடையாளமான தாடி மீசையுடனே காட்சி தருகின்றார்.

இக்கோவிலில், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை பங்குனித் திருவிழா நடைபெறுகிறது. அப்போது, மூலவரே உற்சவராக வீதி உலா வருகிறார். மேலும், பெருமாள் குழந்தைத் திருவுருவம் ஏற்றிருப்பதால், கிருஷ்ண ஜயந்தி இங்கு மிகவும் விசேஷம். ஓணம் பண்டிகையன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் அணிந்த மாலையை இவருக்கு அணிவிக்கிறார்கள்.

பிரார்த்தனை

குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, குடும்பம் தழைக்க பெருமாளிடம் மக்கள் வேண்டிக்கொள்கின்றனர். சென்றாயர் சன்னதிக்கு வலப்புறம், சுவாமி பசுவிடம் பால் குடித்த இடத்தில் சித்திர ரத மண்டபத்தில் கிருஷ்ண மேடை என்ற பெயர் கொண்ட ஒரு மேடை உள்ளது பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற இந்த மேடையின் இரு மூலைகளில் தங்கள் கைகளை வைத்து வழிபடுகின்றனர் சற்று நேரத்தில் அவர்களது இரு கைகளும் ஒன்றாக கூடிவிடும். இதை, அச்செயல் நடக்க சுவாமி தரும் உத்தரவாகவே கருதுகின்றனர்.

Read More