கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்

சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க அருள் புரியும் அம்பிகை

நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை. இக்கோவிலின் தல மரம் இலந்தை. முற்காலத்தில் இந்த இடமே இலந்தை மரக் காடாக இருந்திருக்கின்றது. அதனால் இத்தலத்திற்கு தட்சிண பத்ரி ஆரண்யம் என்ற பெயர் ஏற்பட்டது.

பார்வதிதேவி, கைலாயத்தில் தினமும் ஆறுகால சிவபூஜை செய்வது வழக்கம். ஒரு சமயம் பார்வதி தேவி தனது பூஜையை முடித்துவிட்டு, இலந்தை மரக் காடாக இருந்த இத்தலத்துக்கு வந்தபோது பாம்பும் கீரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாமல், விளையாடிக் கொண்டிருந்த அதிசயக் காட்சியை கண்டாள். மேலும் அங்கு சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி இருந்த கேடிலியப்பரை தரிசித்தாள். தனது அடுத்த கால சிவபூஜைக்கு நேரமாகி விட்டதால், அந்த இலந்தை( பத்ரி) மரக்காட்டில் இருந்த கேடிலியப்பருக்கு பூஜை செய்து முடித்தாள். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு, பதரி வனமுலை நாயகி என்ற பெயரும் உண்டு. . கருவறையில் அம்பிகை தன் மேலிரு கரங்களில் அட்சமாலை, தாமரை மலர் தாங்கியும், இடது கையைத் தொடையில் வைத்து வலது கையைத் தூக்கி, அபயம் அளிக்கும் கோலத்தில் அழகு மிளிர காட்சி அளிக்கிறாள்.

இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் ஆகியவை தேவாரப் பாடலில் போற்றப்பட்ட சிறப்பு

வனமுலைநாயகி என்று இறைவியின் பெயரை திருஞானசம்பந்தர் தனது மின் உலாவிய சடையினர் என்று தொடங்கும் இவ்வூர்ப் பதிகம் இரண்டாம் திருப்பாட்டில் "வாருலாவிய வனமுலையவளொடு மணி சிலம்பு அவை ஆர்க்க" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்திருக்கோவிலைப் பெருந்திருக்கோயில் என்று இவ்வூர்ப் பதிகத்தில் பல பாடல்களில் ஞானசம்பந்தர் கூறியுள்ளார். எனவே இத்தலத்தின் இறைவன், இறைவி ஆகியோரின் திருப்பெயர்கள், கோவில் இவைகள் எல்லாம் தேவாரத்தில் போற்றப்பட்ட சிறப்புடையனவாகும்.

பிரார்த்தனை

வேண்டுவோருக்கு இல்லையெனாது அனைத்தையும் அள்ளி வழங்கும் கருணை உடையவள் சுந்தர குஜாம்பிகை. பக்தர்கள், சகல பாவங்கள், தோஷங்கள் நீங்க இந்த அம்பிகையிடம் வேண்டிக் கொள்கிறார்கள்

சித்ரா பவுர்ணமியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது. ஆடி வெள்ளி, ஆடிப்பூரம், நவராத்திரி, தீபாவளி, வருடப்பிறப்பு, பொங்கல், மாசிமகம், பங்குனி உத்திரம் ஆகிய விசேஷ நாட்களில் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.

Read More
கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கீழ்வேளூர் கேடிலியப்பர் கோவில்

முருகனின் சிவபூஜைக்கு இடையூறு வராமல் காத்த அஞ்சுவட்டத்தம்மன்

நாகப்பட்டிணம்-திருவாரூர் சாலையில் 12 கீ.மீ. தொலைவில் உள்ள தேவாரத் தலம் கீழ்வேளூர். இறைவன் திருநாமம் கேடிலியப்பர். இறைவியின் திருநாமம் சுந்தர குஜாம்பிகை.

முருகப் பெருமான் தேவர்களைக் காக்க திருச்செந்தூரில் அசுரன் சூரபத்மனையும், அவனைச் சார்ந்தவர்களையும் அழித்தார். அசுரர்களைக் கொன்றதால் ஏற்பட்ட வீரஹத்தி தோஷம் நீங்க என்ன செய்வது என்று அவரது தந்தையான சிவபெருமானைக் கேட்டார். அதற்கு ஈசன், 'பூவுலகில் தட்சிண பதரி ஆரண்யம் என்ற போற்றப்படும் கீழ்வேளூர் திருத்தலத்தில், சுயம்புலிங்க வடிவில் எழுந்தருளி அருள்பாலிக்கும் என்னை நவலிங்க பூஜை செய்து, வழிபட்டு, தவமியற்றி வந்தால் இந்த தோஷம் நீங்கும்' என்று கூறி அருளினார்.

அவரது அருளாணைப்படியே இத்தலத்திற்கு வந்த முருகப்பெருமான் தன் வேலால் பூமியைப் பிளந்து தீர்த்தம் உண்டாக்கினார். பின்னர் இந்தக் கீழ்வேளூரின் எட்டுத் திசைகளிலும் உள்ள கோவில்கடம்பனூர், ஆழியூர், இளங்கடம்பனூர், பெருங்கடம்பனூர், கடம்பர வாழ்க்கை, வல்ல மங்கலம், பட்டமங்கலம், சொட்டால்வண்ணம், ஒதியத்தூர் ஆகிய ஒன்பது ஊர்களில் நவலிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். பின்னர் கீழ்வேளூரில் எழுந்தருளியுள்ள சுயம்புமூர்த்தியாகிய கேடிலியப்பரை சரவணப் பொய்கையில் நீராடி, வழிபட்டு, வீரஹத்தி தோஷம் போக்க வேண்டினார். அப்போது வீரஹத்திகளான மாயைகள், முருகப் பெருமானின் தவத்திற்கு இடையூறு செய்தனர். உடனே சாந்த ஸ்வரூபியான சுந்தரகுஜாம்பிகை, பத்ரகாளியாகத் திருவுருவங் கொண்டு வடதிசை நோக்கி பத்து திருக்கரங்களுடன், நான்கு திசைகள் மற்றும் ஐந்தாவது திக்கான ஆகாயத்தில் இருந்தும் குமரனுக்கு இடையூறு வராமல் காத்து நின்றார். எனவே இந்த அம்பிகைக்கு ஸ்ரீ அஞ்சுவட்டத்தம்மன் என்ற திருநாமம் உண்டு.

கீவளூர் காளி எனப்படும் அஞ்சு வட்டத்தம்மண் மிக உக்கிரமானவள். சோழர்கள் போருக்கு செல்லும முன்னர் இந்த கீவளூர் காளியை வழிபாட்டு செல்வார்கள் என்று வரலாறு சொல்கிறது. அஞ்சு வட்டத்து அம்மையின் சன்னிதி முதல் பிரகாரத்தில் முருகன் சன்னிதிக்கு முன்னால் தனியே வட பக்கத்தில் இருக்கிறது. அஞ்சு வட்டத்தம்மண் சுதைவடிவில் பெரிய திருஉருவுடன் பத்து திருக்கரங்களுடன் வடக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார்.

இங்கு அமாவாசை மற்றும் ராகு காலங்களில் எலுமிச்சை தீபம் ஏற்றி,கருவறை தீபத்தில் எள் எண்ணெய் சேர்த்து,9 உதிரி எலுமிச்சை பழங்களை சமர்ப்பித்து,குங்குமார்ச்சனை செய்து அஞ்சுவட்டத்துக் காளி அம்மனை வழிபட்டு வர நம்மை பீடித்த நோய்கள்,தீராதநோய்கள், தரித்திரம், வறுமை,ஏவல்,பில்லி, சூன்யம், மாந்திரீகம் என அத்தனை பீடைகளும், தீவினைகளும், தோஷங்களும் விலகி ஓடும். பித்ரு தோஷம்,குலதெய்வ சாபம் விலகும். தொடுவதால்,காற்றுமூலம் பரவுவதால் என பரவும் தொற்றுக் கிருமிகளையும்,தொட்டு தொடரும்,பற்றிப்படரும் தொற்றுநோய்களையும் அடியோடு துடைத்தெறியும் வல்லமைபடைத்தவள் அஞ்சுவட்டத்து அம்மன்.

Read More