வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்

சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்

முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.

கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.

இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.

இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.

பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.

அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.

சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.

முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.

அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.

Read More