வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

வேதபுரி தட்சிணாமூர்த்தி கோவில்

9 அடி உயர திருமேனியுடன் மூலவராக வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி

தேனி - மதுரை வழியில் 1 கி.மீ. தொலைவிலிருக்கும் அரண்மனைப்புதூரில் இறங்கி, அங்கிருந்து வயல்பட்டி செல்லும் கிளைப்பாதையில் 2 கி.மீ. பயணித்தால் வேதபுரியை அடையலாம். முற்காலங்களில் வேதியர்கள் அதிகம் வாழ்ந்து வந்த போது எப்போதும் வேத பாராயணங்கள் நடைபெற்றதால் இந்த ஊருக்கு வேதபுரி என்ற பெயர் ஏற்பட்டது.

இக்கோயிலின் பிரதான மூலவர் நவகிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் அம்சம் கொண்ட தட்சிணாமூர்த்தி ஆவார். இவர் இங்கு பிராக்ஞா தட்சிணாமூர்த்தி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். சுமார் 500 ஆண்டுகள் பழமையான இந்த வேதபுரி தட்சிணாமூர்த்தி கோயில் பாண்டிய மன்னர்களுக்கு பிறகு இப்பகுதியை ஆட்சி புரிந்த அரசர்களால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இங்கு பிரக்ஞா தட்சிணாமூர்த்தி, 9 அடி உயரத்தில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். பக்தர்களால் எழுதப்பட்ட கோடிக்கணக்கான மூலமந்திரங்களை பீடத்தில் அமைத்து முறைப்படி எழுப்பப்பட்ட ஆலயம் இது.

கருவறையின் விமானத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை குறிக்கும் வகையில் 5 கலசங்கள் நிறுவப்பட்டுள்ளன.இக்கோயிலில் பூஜை நேரங்களில் மட்டுமே தேங்காய் உடைக்கும் விதி பின்பற்றப்படுகிறது. மேலும் தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலைக்கு பதிலாக, அதை பொட்டலமாக சமர்ப்பிக்கும் படி பக்தர்கள் கோயில் நிர்வாகத்தவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இக்கோவிலில் வியாழக்கிழமையன்று திருமண வரம், பிள்ளை வரம் ஆகியவற்றை வேண்டுபவர்களுக்கு அவை நிச்சயம் கிடைக்கும் என்றும், குழந்தைகள் கல்வி கலைகளில் சிறக்க, விரும்பிய காரியங்கள் நடக்க இங்கு வழிபட்டால் அது உறுதியாக கிடைக்கப்பெறுவர்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More