விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

கருவறையில் அட்சயபுரீஸ்வரர் லிங்கத் திருமேனியராக கிழக்கு திசை நோக்கி அருள்பாலிக்கிறார். இவர், சனி பகவானுக்கு அருளிய தினம் ஓர் அட்சய திருதியை நாள். எனவே இறைவன், அட்சயபுரீஸ்வரர் என்றே அழைக்கப்படுகிறார். அட்சயம் என்றால் வளர்வது என்று அர்த்தம். இத்தலத்திற்கு ஒருமுறை வந்து போனாலே பக்தர்களின் இல்லத்தில் செல்வம் உள்ளிட்ட பதினாறு பேறுகளும் தழைத்து வளரும் என்பது ஐதீகம்.

செல்வங்கள் அனைத்துக்கும் அதிபதியான குபேரன், ஈசனை வழிபட்டே சங்கநிதி, பதுமநிதிகளைப் பெற்றான் என்கிறது புராணம். அப்படி குபேரன் செல்வங்களைப் பெற்று அளகாபுரிக்கு அரசனானதும், அட்சயபுரீஸ்வரரின் அருளால்தான் என்பதால் இத்தலம் அட்சய திருதியைக்கு உரிய தனிச்சிறப்புத் தலமாகக் கூறப்படுகிறது.

அம்பிகை அபிவிருத்தி நாயகி, மேல் இரு கரங்களில் தண்டத்தையும், தாமரையையும் தாங்கி, கீழ் இரு கரங்களில் அபய வரத முத்திரைகளுடன் நின்ற கோலத்தில் புன்னகை தவழ தென்திசை நோக்கி அருள்பாலிக்கின்றாள். அம்பிகையின் திருநாமமும், அபிவிருத்தி நாயகி என அமைந்திருப்பது, இத்தலத்தில் வழிபட்டால், மேலும் மேலும் செல்வங்கள் வளரும் என்பதையே உறுதிப்படுத்துகிறது. கணவருக்கு நிகராக, இவளும் நமக்கெல்லாம் அபிவிருத்தியைத் தந்தருளும் கருணைக் கடல் என்று பக்தர்கள் போற்றுகின்றனர்.

அட்சய திருதியை நாளில், மூலவர் சிவனாருக்கு சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்கள் பதித்து, சிறப்பு பூஜைகள் நடைபெறும். பிறகு, சனீஸ்வரருக்கு புனுகு கலந்த சந்தனக் காப்பு செய்வித்து, எள், அரிசி, கோதுமை, பாதாம்பருப்பு, குங்குமப்பூ மற்றும் நவதானியங்களைப் பதித்து அலங்கரிப்பார்கள்.

அட்சய திருதியை நாளிலும் வெள்ளி, ஞாயிறு, திங்கட்கிழமை முதலான நாட்களிலும் விளங்குளம் வந்து, சிவபார்வதியைத் தரிசித்தால், சகல செல்வங்களும் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்.

புராணங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அட்சயதிருதியை நாளில் நடந்த சில நிகழ்வுகள்

- வேத வியாசர், மகாபாரதத்தை விநாயகர் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நாள் அட்சய திருதியை.

- திருமாலின் பத்து அவதாரங்களில் ஒருவரான பரசுராமர் அவதரித்த நாள்

- நான்கு யுகங்களில் முதல் யுகமான கிருத யுகத்தில், பிரம்மன் உலகத்தைப் படைத்தது அட்சய திருதியை நாளில்தான்

- இரண்டாவது யுகமான கிரேதா யுகம் தோன்றிய நாளும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

-காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பிச்சை பெற்று, சிவனின் தோஷம் நீங்கிய நாளும் அட்சய திருதியைதான்

- பகீரதனின் தவத்தால் கங்கை பூமிக்கு வந்ததும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

- கிருஷ்ணன் தன் நண்பன் குசேலனிடமிருந்து அவல் மூட்டையை பெற்றுக் கொண்டு அவருடைய வறுமையை நீக்கிய நாள் அட்சய திருதியை.

- கிருஷ்ணன், துரியோதனன் சபையில் திரௌபதியின் மானத்தை காப்பாற்றியதும் ஒரு அட்சய திருதியை அன்றுதான்

Read More
விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் கோவில்

குடும்ப சமேதராக அருள் பாலிக்கும் அனுக்கிரக சனி பகவான்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தலம் விளங்குளம் . இறைவன் திருநாமம் அட்சயபுரீஸ்வரர். இறைவியின் திருநாமம் அபிவிருத்தி நாயகி.

இத்தலத்தில் நவக்கிரக சன்னிதி கிடையாது. அதற்குப் பதில் சூரியனும் அவரது புத்திரர் சனிபகவானும் தனித் தனி சன்னதிகளில் அருளுகின்றனர். இத்தலத்தில் சனீஸ்வர பகவான் தெற்கு நோக்கி குடும்ப சமேதராக தனது மனைவியர் மந்தா, ஜேஷ்டா ஆகியோருடன் எழுந்தருளியிருக்கிறார். இத்தலத்தில் சனிபகவான் சிவபெருமானை வழிபட்டு சாபவிமோசனம் பெற்றதால் இங்கு அவர் அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

இவரை ஆதி பிருஹத் சனீஸ்வரர் எனப் போற்றுகிறார்கள். சனி பகவான் குடும்பத்துடன் இருப்பதால், 12 ராசிக்காரர்களும் இங்கு வந்து வழிபட்டால், சனியின் கோபத்தில் இருந்து தப்பிக்கலாம், அவரின் அருளைப் பெறலாம் என்கிறது தல புராணம்.

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய சனிபகவான்

இவரை நினைத்து மாதந்தோறும் அமாவாசை தினங்களில் காகத்துக்கு அல்லது இயலாதவர்களுக்கு உணவு வழங்கினால், பித்ரு தோஷம் நீங்கும். கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். வீட்டில் தரித்திரம் விலகி ஐஸ்வரியம் பெருகும் என்கிறார்கள்.

குறிப்பாக, பூச நட்சத்திரக்காரர்கள் வணங்கிய வேண்டிய திருத்தலம் என்றும் பூச மருங்கர் எனும் சித்தர் வழிபட்ட தலம் இது என்றும் சொல்கிறது தல புராண மகிமை. எனவே, மாதந்தோறும் பூச நட்சத்திர் நாளில், தைப் பூச நாளில் வந்து வேண்டிக்கொள்ளலாம்.

Read More