நட்சத்திர கோயில் (வில்வாரணி)  சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

நட்சத்திர கோயில் (வில்வாரணி) சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

நாகாபரணத்துடன், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் காட்சி தரும் அபூர்வ முருகன்

திருவண்ணாமலை-வேலூர் சாலையில், கலசபாக்கத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ளது நட்சத்திர கோயில் (வில்வாரணி) என்னும் சிற்றூர். இந்த ஊரில் அமைந்துள்ள நட்சத்திர கிரி மலையில், சுயம்பு வடிவ லிங்கத் திருமேனியராய் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளார். இத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சி தருவது தனிச்சிறப்பாகும். வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க ஆலயம் இதுவாகும்.

கார்த்திகைப் பெண்களும் 27 நட்சத்திரங்களும் தினமும் இங்கு வந்து முருகனை வழிபட்டுச் செல்வதாக நம்பிக்கை. அதனால் இத்தலம் ,27 நட்சத்திரங்களுக்கும் அனுகிரகத் தலமாகவும் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர். 27 நட்சத்திரங்களும், சிவ சர்ப்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை. இக்கோவிலின் சுயம்பு முருகனை வழிபட்டால் நாகதோஷம், புத்திர தோஷம் மற்றும் கல்யாண தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. கிருத்திகைதோறும் பக்தர்கள் நட்சத்திரகிரி மலையை வலம் வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இக்கோவில் கும்பாபிஷேகத்தின் போது, மலேசியா நாட்டில் உள்ள முருகன் சிலையை போல் 42 அடி உயர முருகன் சிலை இக்கோவிலில் நிர்மாணிக்கப்பட்டது.

பிரார்த்தனை

இக்கோவிலில் செவ்வாய்க்கிழமைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்களின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும். பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை.

இந்த கோவில், 1,200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக 227 படிகள் அமைக்கப்பட்டுள் ளன. சன்னதி வரை வாகனங்கள் செல்லவும் சரிவுப் பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.

Read More