வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில்

வள்ளி தேவிக்குக்கென்று தனி சன்னதி உள்ள திருப்புகழ் தலம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி.மீ. தொலைவில், நாகர்கோவில் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வள்ளியூர் சுப்பிரமணியர் சுவாமி கோவில். பாறையை குடைந்து உருவாக்கப்பட்ட, குடைவரை கோவில் இது. மற்ற கோவில்களில் முருகப் பெருமான் குன்றின் மீது நின்று அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் இங்கு, குன்றுக்குள் இருந்து அருள்பாலிக்கிறார் என்பது தனிச்சிறப்பு. வள்ளி-தெய்வானையுடன், முருகப்பெருமான் வீற்றிருக்கும் இந்த குன்றின் பெயர், 'பூரணகிரி' என்பதாகும். சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த சமயத்தில், கிரவுஞ்ச மலையையும் தகர்த்து எறிந்தார். அந்த மலையின் துண்டுகள் விழுந்து உருவான மலையே வள்ளியூர் என்று கூறப்படுகிறது. மாயம் நிறைந்த கிரவுஜாசுரனின் தலைப்பாகமாக, இந்த குன்று கருதப்படுகிறது. அகத்தியருக்கு பிரம்ம ஞான உபதேசம் அருளிய காரணத்தினால் முருகப்பெருமான் ஞானஸ்கந்தன் என்று அழைக்கப்படுகின்றார். வள்ளி கேட்ட வரத்தின் படி முருகன் வள்ளியை திருத்தணிகையில் மணமுடித்து தென்கோடியில் உள்ள பூரணகிரி மலைக்குகையில் வள்ளியுடன் வந்து அமர்ந்தாராம். அதனால் இம்மலை அமைந்துள்ள பகுதி வள்ளியூர் என அழைக்கப்பட்டது. இங்குள்ள சரவணப் பொய்கை, வள்ளியின் வேண்டுகோளுக்கிணங்க, முருகப்பெருமானால் உருவாக்கப்பட்டதாம். இத்தலம் அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்றது.

கருவறையில் வள்ளி-தெய்வானையோடு முருகப்பெருமான் அருள்காட்சி தருகிறார். அதே வேளையில் வள்ளிதேவிக்கு மட்டும் தனியாகவும் இங்கு சன்னிதி அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். நான்கு கரங்களைக் கொண்ட இத்தல முருகப்பெருமான், வலது மேற்கரத்தில் வள்ளிக்குப் பிடித்த தாமரையையும், இடது மேற்கரத்தில் தெய்வானைக்குப் பிடித்த நீலோற்பவத்தையும் ஏந்தியிருக்கிறார். வலது கீழ் கரத்தில் அபய முத்திரையை காட்டி, இடது கீழ்கரத்தை இடுப்பில் வைத்து வள்ளி, தெய்வானையுடன் கல்யாண கோலத்தில் நின்றபடி அருள்கிறார். முன்புறம் வைரம் பதித்த வஜ்ரவேல் மின்னுகிறது.

திருமணத் தடை நீக்கும் வள்ளியூர் முருகன்

வள்ளியூர் கோயில் வந்து வள்ளி சமேத முருக பெருமானை வழிபட திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களுக்கு இடையே நம்பிக்கையாக உள்ளது. வள்ளிதேவியிடம் மனதிற்கு பிடித்தவரை கரம் பிடிக்க வேண்டிக் கொள்ளும் கன்னி பெண்களுக்கு, அவரையே மணம் முடிக்கும் பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை உள்ளது.

Read More