பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வாராகி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பள்ளூர் அரசாலை அம்மன் என்னும் வாராகி அம்மன் கோவில்

வரம் தரும் பள்ளூர் வாராகி அம்மன்

பிராமி, கவுமாரி, வைஷ்ணவி, இந்திராணி, சாமுண்டி, மகேஸ்வரி, வாராகி எனும் சப்த மாதா்களில், வாராகி அம்மன் ஐந்தாமானவள். வாராகி அம்மன், பார்வதி தேவியின் அவதாரம் ஆவாள். மனித உடலும், வராக (பன்றி) முகமும் கொண்டவள். சப்த மாதர்களில் வாராகியை தனி தெய்வமாக வழிபடும் முறை பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. சோழர்களின் வெற்றி தெய்வம் வராஹி.தஞ்சை பெரிய கோவிலில் தனி ஆலயமுள்ளது .

காஞ்சிபுரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பள்ளூர் அரசாலை அம்மன் கோவில் உள்ளது. மிகவும் புராதனமான வாராகி அம்மன் கோவில் இது. இங்கு தெற்கு நோக்கி அமர்ந்த நிலையில் வாராகி அம்மன் அருள்கிறாள். பெரும்பாலான அம்மன் கோவில்கள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். அபூர்வமாக சில அம்மன் கோவில்கள் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும். வழக்கத்திற்கு மாறாக அமைக்கப்பட்டிருக்கும் இக்கோவில்கள், பரிகார கோவில்கள் ஆகும். இங்கு செய்யப்படும் பரிகாரங்கள் உடனுக்குடன் அளப்பரிய பலன்களை அள்ளித் தரக்கூடியவை.

வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதி வழிபாடு

பள்ளூர் வாராகி அம்மன் சிறந்த வரப் பிரசாதி. வளர் பிறை மற்றும் தேய் பிறை பஞ்சமி திதியில் வாராகி அம்மனுக்கு, வாழை இலைபோட்டு அதில் பச்சரிசி சிறிது பரப்பி ,தேங்காய் உடைத்து அதன் இரு மூடியிலும் தூய பசு நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர நம் கோரிக்கைகள் எளிதில் நிறைவேறும். வாராஹிக்கு பூண்டு கலந்த, தோல் நீக்காத உளுந்து வடை, நவதானிய வடை, மிளகு சேர்த்த, வெண்ணெய் எடுக்காத தயிர்சாதம், மொச்சை, சுண்டல், சுக்கு அதிகம் சேர்த்த பானகம், மிளகு சீரகம் கலந்து செய்த தோசை, குங்குமப்பூ, சர்க்கரை, ஏலம், லவங்கம், பச்சைக் கற்பூரம் கலந்த பால், கறுப்பு எள் உருண்டை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் ஆகியவற்றைப் படைத்து வழிபடுவதால் விசேஷ பலன்களைப் பெறலாம். மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து, அதனை வாராகி அம்மனுக்கு வைவேத்தியம் செய்து பஞ்சமி நாட்களின் பின்னிரவில் (இரவு 11 மணிக்கு மணிக்கு மேல்) அல்லது வாராகி நவராத்திரி நாட்களின் பத்தாவது நாளான நிறைவு நாள் வரையிலும் நெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, வாராகி அம்மனுக்கு செம்பருத்தி, சிவப்பு அரளி, மரிக்கொழுந்து மாலை சூட்டி வழிபாடு செய்து வரலாம். இந்த வழிபாட்டின் மூலம் நற்பலன்களை அடையலாம்.

பில்லி, செய்வினை, மன நோய், மாந்திரீக பாதிப்பினால் உண்டான உடல்நோய்கள், தீராத எதிரி தொல்லை, முற்பிறவி கர்ம வினைகளால் உண்டான வறுமை , வழக்குகள், காரிய தடைகள் அண்டாது என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வாராகி அம்மனின் அம்சமான திருக்கடையூர் அபிராமி அம்மன்

திருக்கடையூர் அபிராமி அம்மன் வாராகி அம்சமே. இதனை அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில் குறித்து உள்ளார்.

''நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச

சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு

வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்

றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”

“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்

உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா

வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே

செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

என அபிராமிபட்டர் திருக்கடையூர் அபிராமியை வாராகி திருக்கோலத்தில் தரிசித்ததை தமது அபிராமி அந்தாதியில் பதிந்து உள்ளார்.

Read More
வன்னிக்காடு அகத்தீசுவரர் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

வன்னிக்காடு அகத்தீசுவரர் கோவில்

ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் அபூர்வ தோற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டைக்கு அருகில் வன்னி வேடு என்ற கிராமம் உள்ளது. இங்கு வன்னி மரங்கள் அதிகம் உள்ளதால் இத்தலத்துக்கு வன்னிக்காடு என்ற பெயரும் உண்டு. இங்கு அகத்தியர் வழிபட்ட அகத்தீசுவரர் கோவில் உள்ளது. இறைவியின் திருநாமம் புவனேசுவரி.

இத்தலத்து மூலவரை அகத்திய முனிவர் மணலால் அமைத்து வழிபட்டார். அகத்தியர் அமைத்த லிங்கம் என்பதால் லிங்கம் குள்ளமாக இருக்கிறது.

அம்பாள் புவனேசுவரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். ஆவுடையாரின் மேல் எழுந்தருளி இருக்கும் அம்பிகையின் இந்த தோற்றத்தை நாம் வேறு எந்த தலத்திலும் தரிசிக்க முடியாது.

பௌர்ணமியன்று அம்பிகைக்கு நடைபெறும் லகுசண்டி ஹோமம்

பௌர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விசுவாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் அம்பாளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சன்னதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். இந்த ஹோமத்தின்போது பூஜை செய்யப்படும் கலசத்திலிருந்து நீரை எடுத்து அம்பிக்கைக்கு அபிஷேகம் செய்வார்கள். இந்த அபிஷேகத்தை சப்த ரிஷிகளே வந்து செய்வதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது ஏழு இலைகளில் சப்த ரிஷிகளுக்கும் நைவேத்யம் படைப்பார்கள்.

பௌர்ணமி நாள்களில் நடைபெறும் இந்த அபிஷேகப் பூஜையில் கலந்து கொண்டால் வீடு மற்றும் கட்டிடம் கட்டுபவர்கள் தடங்கலின்றிக் கட்டி முடிப்பார்கள்.

Read More