யானைமலை  யோக நரசிம்மர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

யானைமலை யோக நரசிம்மர் கோவில்

மிகப்பெரிய நரசிம்மர் உருவம் உடைய நரசிம்மர் கோவில்

மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில், மதுரையிலிருந்து 12 கி.மீ. தொலைவில் ஒத்தக்கடை கிராமத்தின் அருகே உள்ள யானைமலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோவில் அமைந்துள்ளது. யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி அமர்ந்த கோலத்தில் இருப்பது போல் தோன்றுவதால், இந்த மலைக்கு யானைமலை என்று பெயர் வந்தது. சுமார் 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமையான குடைவரைக் கோயில் ஆகும்.

கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டதாகும். நரசிம்மர் கோவில்களிலேயே மிகப்பெரிய நரசிம்மரின் மூலவர் விக்கிரகத்தை கொண்ட கோவிலாக இந்த யானைமலை யோக நரசிம்மர் கோவில் இருக்கிறது. தாயார் திருநாமம் நரசிங்கவல்லி தாயார்.

தலவரலாறு

ரோமச முனிவர் என்பவர் தனக்கு குழந்தை வரம் வேண்டி யானைமலையிலுள்ள சக்கர தீர்த்ததில் நீராடி யாகம் செய்தார். அப்போது பெருமாளின் நரசிம்ம அவதாரத்தை மீண்டும் காண விரும்பினார். அதனால் பெருமாள் மீண்டும் உக்கிர நரசிம்மராக அவர் முன் தோன்றினார். அவருடைய கோபத்தால் உலகம் வெப்பமயமானது. பின் தேவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி பிரகலாதனும், மகாலட்சுமியும் நரசிம்மரின் உக்கிரத்தினை தணித்தனர்.

பிரதோஷ பூஜை நடைபெறும் ஒரே வைணவ தலம்

எல்லா சிவன் கோயில்களிலும் பிரதோஷம் தினத்தை மிகவும் விமர்சையாக கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். ஆனால் பெருமாள் கோயிலில் பிரதோஷம் கடைப்பிடிக்கப்படுகிறதென்றல் அது இந்த கோயில் தான். தேய்பிறை பிரதோஷ காலத்தில் மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்ததால் இக்கோவிலில் தேய்பிறை பிரதோஷ தினத்தில் மிக சிறப்பான பூஜைகள் செய்யப்படுகின்றன. இச்சமயத்தில் நரசிம்ம மூர்த்தியை வழிபட்டால் கல்வி பயலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். தொழில், வியாபாரங்கள் நன்கு விருத்தியாகும். துஷ்ட சக்திகளின் தாக்கம் மற்றும் மரண பயம் நீங்கும். இச்சமயத்தில் நரசிம்மரோடு நரசிங்கவல்லி தாயரையும் வணங்க திருமண தடை தாமதம் போன்றவை நீங்கும்.

மேலும் கொடூரமான, கோபக்கார கணவர்களை அடைந்த பெண்கள் இங்கு வேண்டினால், அவர்களின் கணவர்களின் கோப குணங்கள் மாறி, மனைவி மற்றும் பிள்ளைகளிடம் அன்பாக நடக்கும் நபராக மாறுவார்கள் என்பது அனுபவம் வாய்ந்த பக்தர்களின் நம்பிக்கை.

Read More