மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தரும் பகவதி அம்மன்

கன்னி்யாகுமரி மாவட்டம், நாகர்கோவிலிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள் மண்டைக்காடு பகவதியம்மன். ஆரம்பத்தில் காளிதேவியாக வழிபடப்பட்டவள், பின்னர் கேரள மக்களின் வழக்கப்படி 'பகவதி அம்மன்' என்று அழைக்கப்பட்டாள். கால்நடைகளை இங்கே மேய்ச்சலுக்குக் கொண்டு வந்ததால், இதை மந்தைகாடு என அழைத்துள்ளனர். அதுவே காலப்போக்கில் மருவி'மண்டைக்காடு' என்று மாறியதாக தல வரலாறு கூறுகின்றது.

பகவதி அம்மன் பிரம்மாண்டமான புற்று வடிவில் காட்சி தருகிறார். 15 அடிக்கு உயர்ந்து நிற்கும் புற்றின் மேல் பகவதி அம்மனின் முகம் சந்தனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரம்மாண்டமான புற்று வேறு எங்கும் இல்லை என்றும், இப்புற்றில் இதுவரை எந்த பாம்பும் வசித்ததில்லை என்றும் கூறுகின்றனர். பொதுவாக புற்றுக்கோவிலில் பக்தர்கள் பால் ஊற்றுவதும், முட்டைகளை வைத்து வேண்டுவதும் உண்டு. ஆனால் இங்கு பால் ஊற்றுவதோ, முட்டைகளை உடைப்பதோ கிடையாது. ஆனால் இந்த புற்றுக்கு தினமும அபிஷேகம் நடைபெறுகிறது. பூசாரி ஓர் ஏணி மரத்தை வைத்து அதில் ஏறி அம்மனுக்கு பூமாலைகளைச் சாற்றுகிறார்.புற்றுவடிவ மூலவர் தேவிக்கு முன்பாக வெண்கலச்சிலையாக நின்ற கோலத்திலும், வெள்ளிச்சிலையாக அமர்ந்த கோலத்திலும் பகவதியம்மன் அருள் பாலிக்கிறார்.

பெண்களின் சபரிமலை

கேரள கோவிலை போன்று அமைப்பு கொண்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு ஆண்களை விட பெண்கள் அதிகளவில் வருகின்றனர்.. சபரிமலைக்கு ஆண்கள் 41 நாள்கள் விரதம் இருந்து,பயபக்தியுடன் சென்று வழிபட்டு வருவதைப் போல, பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி கட்டி இந்தக் கோயிலுக்கு வருவதால், பெண்களின் சபரிமலை என்று சிறப்பித்து அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மாசி கொடை விழாவை ஒட்டி கேரளத்து பெண்கள் 41 நாள்கள் பயபக்தியுடன் விரதம் இருந்து, இருமுடி கட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தரிசனம் செய்கிறார்கள். மாசி மாத கொடை விழா இந்த ஆலயத்துக்குப் புகழ் சேர்க்கும் ஒரு திருவிழா. பெண்கள் 41 நாள்கள் விரதமிருந்து, இருமுடி சுமந்து, கால்நடையாக இங்கு ஆயிரக்கணக்கில் வந்து தரிசனம் செய்வார்கள். மாசி கொடை விழாவின் போது வேண்டுதல் நிறைவேற ஆலய வளாகத்தை சுற்றிலும் பொங்கல் வைத்தும் வழிபாடு செய்கின்றனர்.

பிரார்த்தனை

செவ்வாய்,வெள்ளிக் கிழமை, பௌர்ணமி நாட்களில் மண்டைக்காடு அம்மன் கோவிலில் கூட்டம் அலைமோதுகிறது. கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகளில் குறைபாடு, கண் திருஷ்டி தோஷம், தலைவலி நிவாரணம் போன்றவற்றிற்காக இங்கு பிரார்த்தனை செய்யப்படுகின்றது. இக்கோயிலில் கொடுக்கப்படும் மண்டையப்பம் மிகவும் பிரசித்தி பெற்றது. அரிசி மாவில் வெல்லம்,பாசிப் பருப்பு,ஏலம்,சுக்கு ஆகியவை சேர்ந்து நீராவியால் அவித்துத் தயார் செய்யப்படுகிறது இந்த மண்டையப்பம். அம்மனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது. அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நோயிலிருந்து மீண்ட பிறகு இங்கே வந்து, முத்தப்பம் என்னும் அப்பத்தை நைவேத்தியம் செய்கின்றனர்.

Read More