ரணபலி முருகன் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

ரணபலி முருகன் கோவில்

முருகன் உருவம் பொறித்த அபூர்வமான சத்ரு சம்ஹார வேல்

ராமநாதபுரம் அருகே பெருவயல் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த சிவ சுப்ரமணிய சுவாமி என்ற ரணபலி முருகன் கோவில் உள்ளது. ராமநாதபுரத்திலிருந்து 9 கி.மீ. தொலைவில், தேவிபட்டினம் செல்லும் வழியில், பெருவயல் விலக்கு எனற இடத்தில் இருந்து மேற்கே 3 கி.மீ. தொலைவில் பெருவயல் கிராமத்தில் ரண பலி முருகன் கோவில் உள்ளது. ரணபலி முருகன் கோவிலுக்கு பெருமை சேர்ப்பது முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேல் ஆகும். இத்தகைய வேலை நாம் வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

முருகன் சுட்டிக் காட்டி கிடைத்த சத்ரு சம்ஹார வேல்

இராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களில் ஒருவரான கிழவன் சேதுபதியின் தளபதியாக விளங்கியவர் தளவாய் வயிரவன் சேர்வை. முருகபக்தரான இவர் அடிக்கடி திருச்செந்தூர் முருகன் கோவில் சென்று வழிபட்டு வருவது வழக்கம்.

ஒருநாள் அவர் கனவில் முருகன் தோன்றி, என்னை வழிபட இனி திருச்செந்தூர் வர வேண்டாம். தேவிப்பட்டினம் கடலில் நவபாஷாண கற்கள் இருக்கும் இடத்துக்குக் கிழக்கில் கண்ணாமுனை என்ற இடத்தில் மேலே கருடன் வட்டமிடும். அதற்குக் கீழே கடலில் மாலையும் எலுமிச்சம் பழமும் மிதக்கும். அந்த இடத்தில் கடலுக்கு அடியில் வள்ளி-தெய்வானை சமேதராக சத்ரு சம்ஹார வேலுடன் நான் இருப்பேன். என்னை எடுத்துச் சென்று உங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்து வழிபடு என்று கூறினார்.

இதே போன்று கனவு அருகில் உள்ள திரு உத்திரகோச மங்கை என்னும் தலத்தைச் சேர்ந்த ஆதிமங்களேஸ்வர குருக்களுக்கும் தோன்றியதால், இருவரும் மறுநாள் சந்தித்து, முருகன் கனவில் சொன்ன அடையாளங்களின்படி ஆட்களை விட்டு கடலுக்குள் முருகன் சிலையைத் தேடினார்கள். பல மணி நேரம் தேடியும் சிலை கிடைக்கவில்லை. கடைசியில் வயிரவன் சேர்வையே கடலுக்குள் மூழ்கி அந்த சிலையையும் வேலையும் எடுத்து வந்தார். கடலுக்குள் இறங்கி முருகன் சிலையை எடுக்க முற்பட்ட பலருக்கு உடல் முழுவதும் ரணம்(காயம்) ஏற்பட்டதால் மூலவர் சிவ சுப்ரமணிய சுவாமி, ரணபலி முருகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

விஷயம் அறிந்த ராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி, தன் அரண்மனையில் 'ராமலிங்க விலாசம்' என்ற தர்பார் மண்டபம் கட்டுவதற்காக வைத்திருந்த பொருட்களைத் தந்து பெருவயல் ஊரணிக்கரையில் முருகனுக்கு ஆலயம் அமைக்க நிலங்களையும் தானமாக கொடுத்து உதவினார். அதன் பின்னர் ஆலயத்திருப்பணிகள் வேகமாக நடைபெற்று, கடலில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

தளபதி வயிரவன் சேர்வை ராமேஸ்வரத்தில் உள்ள இராமநாத சுவாமி, பர்வத வர்த்தினி அம்மன் மீதும் தீவிர பக்தி உடையவராதலால் இருவருக்கும் இங்கு சன்னதி அமைத்துள்ளார்.

பக்தர்களின் உள்ள ரணத்தை ஆற்றும் முருகன்

பக்தர்களின் உள்ளத்தில் ரணத்தை ஏற்படுத்தும் கடன், பிணி, சத்ரு ஆகிய துன்பங்களையெல்லாம் பலி செய்து, அவர்களுக்கு சகல நன்மைகளும் அருள்வதால், ரணபலி முருகன்' என்ற பெயர் இவருக்கு மிகப் பொருத்தமான பெயராகும். முருகன் உருவம் பொறித்த சத்ரு சம்ஹார வேலை பிரம்மோற்சவம், சூரசம்ஹாரம் போன்ற கோவில் விழா நாட்களில்தான் நாம் தரிசிக்க முடியும். இந்த வேலைத் தரிசித்தவர்களுக்கு எதிரிகள் தொல்லை நீங்கி சகல செளபாக்கியஙகளும் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் இங்கு முருகன் ராகு கேதுக்களுடன் தனியாக காட்சி தருகிறார் இவரை வழிபட்டால் ராகுதோஷம் நீக்குவார் என்பது ஐதீகம்..

இத்தலத்துக்கு வந்த பிரபல ஆன்மீக சொற்பொழிவாளர் திரு.கிருபானந்த வாரியார் அவர்கள், இங்குள்ள முருகனின் திரு உருவம் பொறிக்கப்பட்ட வேல் போல் எங்கும் கண்டதில்லை என இத்தலத்தின் சிறப்பை பற்றி கூறியதை இங்கு அவரது புகைப்படத்துடன் செய்தியாக வைத்துள்ளார்கள்.

இக்கோவில் கட்டிய தளபதி வயிரவன் சேர்வையின் சமாதிக்கோவிலும் இங்கு உள்ளது. அங்கு சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது.

Read More