பழனிமலை தண்டாயுதபாணி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

பழனிமலை தண்டாயுதபாணி கோவில்

ஆங்கிலேய அதிகாரியின் வயிற்று வலியை தீர்த்த பழனி ஆண்டவர்

பழனிமலை தண்டாயுபாணிக்கு, ஒரு நாளைக்கு ஆறு முறை அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகி றது. இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்து விடும். அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்து விட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. தினமும் ஆறு காலங்களில் தண்டாயுதபாணி சுவாமி ஆறு அலங்காரத்தில் காட்சி தருகிறார். அந்த அலங்காரங்கள்

விளாபூஜை - காலை 6.40 மணிக்கு சன்யாசி அலங்காரம்

சிறுகாலசந்தி - காலை 8 மணிக்கு வேடர் அலங்காரம்

காலசந்தி - காலை 9 மணிக்கு பாலசுப்ரமணியர் அலங்காரம்

உச்சிகாலம் - பகல் 12 மணிக்கு வைதீகாள் அலங்காரம்

சாயரட்சைபூஜை - மாலை 5.30 மணிக்கு இராஜ அலங்காரம்

அா்த்தஜாம பூஜை - இரவு 8 மணிக்கு புஷ்ப அலங்காரம்

வெண்ணெய்யும், கோதுமை ரொட்டியும் நைவேத்தியம்

சிறுகாலச்சந்தி பூஜையின் போது ( காலை 8.00 - 8.30 மணி ) பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் முடிந்தபின் வேடர் அலங்காரம் செய்யப்படுகிறது. பழனி ஆண்டவருக்கு நைவேத்தியமாக மிளகு, சாம்பார்சாதம், வெண்ணெய், கோதுமை ரொட்டி படையலாகப் படைக்கப்படுகின்றது. அவருக்கு வெண்ணையும், கோதுமை ரொட்டியும் படைக்கப்படுவதின் பின்னணியில் அவர் ஒரு ஆங்கிலேய அதிகாரிக்கு அருள்புரிந்த நிகழ்ச்சி இருக்கின்றது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பழனிப் பகுதியை நிர்வகித்த ஆங்கிலேய அதிகாரிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. வயிற்றுவலியைத் தீர்த்தருளுமாறு பழனியாண்டவரை அவ்வதிகாரி வேண்டிக் கொண்டார். வலி தீர்ந்தால்தாம் உண்ணும் உணவை பழனியாண்டவருக்குப் படைப்பதாகவும் வேண்டிக்கொண்டார். இறைவன் அவ்வதிகாரியின் தீராத வயிற்று வலியைத் தீர்த்து அருளினார். அன்று முதல் சிறுகாலபூஜையின்போது வெண்ணெய்யும், நெய்யால் சுடப்பட்ட கோதுமை ரொட்டியும் ஆண்டவருக்கு படையாலகச் சேர்த்துப் படைக்கப்படுகிறது.

பிரார்த்தனை

நெடுநாட்களாக முடியாமல் இழுத்தடிக்கும் வழக்கு தீராத நோய் போன்ற பிரச்சினைகள் தீர பழனி ஆண்டவரை, அலங்காரம் இல்லாத ஆண்டிக் கோலத்தில் தரிசிப்பது நல்லது. வீட்டில் நடைபெறப்போகும் திருமணம், வீடு விற்பது, வாங்குவது, கட்டுவது, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்வுகளுக்கெல்லாம் ராஜ அலங்கார கோலத்தில் தரிசிக்கலாம்.

Read More
திருஆவினன்குடி வேலாயுத சுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

திருஆவினன்குடி வேலாயுத சுவாமி கோவில்

பழனியில் மூன்று கோலங்களில் அருள் பாலிக்கும் முருகன்

முருகன், தனக்கு மாம்பழம் கிடைக்காததால் தாய் தந்தையரிடம் கோபித்து முதலில் வந்து நின்ற தலம் என்பதால், பழனி மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே 'மூன்றாம் படை வீடு' ஆகும். குழந்தை வேலாயுதரை, மகாலட்சுமி (திரு), கோமாதா (ஆ), இனன் (சூரியன்), கு (பூமாதேவி), அக்னி (டி) ஆகியோர் வழிபட்டதால் இத்தலம், ‘திருஆவினன்குடி’ என்று பெயர் பெற்றது. இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். முருகன் குழந்தை வடிவமாக இருப்பதால் இவருடன் வள்ளி, தெய்வானை இல்லை. பழனிக்கு செல்பவர்கள் முதலில் திருஆவினன்குடியில் இருந்து 4 கி. மீ, தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருவாவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்க வேண்டும். அதன்பின்பே மலைக்கோவிலில் தண்டாயுதபாணியை வணங்க வேண்டும் என்பது ஐதீகம்.

பழனியில் முருகப்பெருமான் மூன்று கோலங்களில் அருள்பாலிக்கிறார். பெரியநாயகி கோவிலில் மயில் வாகனம் இல்லாமல் வள்ளி, தெய்வானையுடன் திருமணக்கோலத்திலும், திருஆவினன்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலைக்கோவிலில் கையில் தண்டத்துடனும் காட்சி தருகிறார். ஒரே தலத்தில் இவ்வாறு முருகனின் மூன்று கோலங்களையும் தரிசிப்பது மிகவும் அபூர்வம்.

ஆனி மாதத்தில் நடக்கும் அன்னாபிஷேகம்

சிவாலயங்களில் ஐப்பசி பவுர்ணமியன்று, சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படும். ஆனால்,பழனி தலத்தில் வித்தியாசமாக முருகனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோவிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோவிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோவிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

அருணகிரியார் வேலாயுத சுவாமியை வணங்கி, திருப்புகழ் பாடியபோது முருகன் காட்சி தந்ததோடு, ஜபமாலையும் கொடுத்தார். இதனை அருணகிரியார் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார் .

Read More