பண்ணாரி மாரியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

பண்ணாரி மாரியம்மன் கோவில்

பக்தர்களுடன் கால்நடைகளும் தீ மிதிக்கும் அம்மன் தலம்

ஈரோடு மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் பண்ணாரி மாரியம்மன் கோவில் முக்கியமான ஒன்றாகும் . இக்கோவில், சத்தியமங்கலத்திலிருந்து 15 கி.மீ. தொலைவிலும், ஈரோட்டில் இருந்து சுமார் 75 கி.மீ. தொலைவிலும், மேற்குத்தொடர்ச்சி மலைச்சாரலில், தமிழ்நாடு கர்நாடகா எல்லைப் பகுதியில் ஒரு அழகான வனப்பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் சக்தி வாய்ந்த பண்ணாரி அம்மன் கோவிலுக்கு தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திர மற்றும் கேரளாவில் இருந்து பல பக்தர்கள் வந்து அம்மனை தரிசித்து அருள் பெற்று செல்கின்றனர்.

புற்று மண் பிரசாதம்

கருவறையில் பண்ணாரி அம்மன் தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில், தெற்கு நோக்கி சுயம்புவாக எழுந்தருளி இருக்கின்றாள். சாந்தம் தவழும் முகத்துடன், கைகளில் கத்தி, கபாலம், டமாரம் , கலசம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகின்றாள். எல்லாக் கோவில்களிலும் திருநீற்றைத்தான் பிரசாதமாக தருவார்கள் . ஆனால், இங்கே புற்று மணலையே விபூதி பிரசாதமாக தருகிறார்கள். இதை வீட்டுக்கு எடுத்துச் சென்று பூஜை அறையில் வைத்தால், திருட்டு மற்றும் தீங்கு போன்ற அபாய செயல்கள் நடக்காது என்பதும், தீராத நோயும் தீரும், கால் நடைகளுக்கு நோய் வராது என்பதும் நம்பிக்கை. மங்களகரமான செயல்கள் வீடுகளில் நடப்பதுடன், அம்மன் தங்களுக்கு பாதுகாப்பாகவும் இருப்பாள் என்கின்றனர் பக்தர்கள். அம்மன் கால்நடை வளர்ப்போரின் காவல் தெய்வமாக விளங்குகிறாள். கால் நடைகள் கொண்டு தொழில் செய்பவர்கள், தங்கள் தொழில் விருத்தியடைய அம்மனை வணங்குகின்றனர்.

பங்குனி மாத குண்டம் திருவிழா

இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் இறங்கும் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. குண்டம் இறங்கும் திருவிழா என்பது தீமிதி திருவிழா என்பது ஆகும். பூக்குழி என்றழைக்கப்படும் அக்னி குண்டத்திற்கு தேவையான விறகுகளை வெட்ட காட்டுக்குள் சென்று பக்தர்கள் வெட்டி வருவார்கள் இதை 'கரும்பு வெட்டுதல்' என இப்பகுதில் அழைப்பார்கள் .தமிழகத்தில் எங்கும் இல்லாத விசேஷமாக இங்கு தொடர்ச்சியாக 12 மணி நேரம் நடைபெறும் தீமிதி திருவிழா இதுவாகும். இதில் சுமார் 2 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து குண்டம் இறங்குவார்கள். குழந்தைகள் பெரியவர்கள் என பலதரப்பு மக்கள் இந்த தீமிதி திருவிழாவில் கலந்து கொள்வார்கள். பக்தர்களை வியக்க வைக்கும் விதமாக கால்நடைகளும் இந்த தீமிதி திருவிழாவில் பங்கு பெறுவதுண்டு.

முதலில் தலைமை பூசாரி அக்னி குண்டத்தில் இறங்கி நடந்து செல்லுவார். பின்பு லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி குண்டம் இறங்குவார்கள். காலை 4 மணி முதல் மாலை வரை பக்தர்கள் தொடர்ந்து அக்னி குண்டம் இறங்குவது மிகப் பெரிய பிரம்மாண்டமான மெய்சிலிர்க்கும் காட்சி ஆகும். கடைசியாக ஆடு, மாடு, குதிரை போன்ற கால்நடைகளையும் பக்தர்கள் குண்டம் இறக்கி நடக்க வைப்பார்கள்.

கண் வியாதியை குணப்படுத்தும் கோவில் தீர்த்தம்

பல ஆண்டுகளுக்கு முன், காட்டு இலாகா அதிகாரியாக பணியாற்றிய ஒரு ஆங்கிலேயர் , துப்பாக்கியால் பன்னாரி அம்மன் கோவில் சுவற்றில் சுட்டதால் பிறகு அவரது கண்கள் ஒளி இழந்தன. தவறை உணர்ந்து அம்மனிடம் வேண்டி, கோயிலில் வழங்கப்பட்ட தீர்த்தத்தால் கண் ஒளி பெற்றார். இதனால் தற்போதும், கண்வியாதி உள்ளவர்களுக்கு கோவில் தீர்த்தம் வழங்கப்படுகிறது. இது கண் வியாதியை குணப்படுத்துவதாக மக்களால் நம்பப்படுகிறது.

பிரார்த்தனை

திருமண பாக்கியம், குழந்தைப்பேறு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுடன் வருவோர் நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கின்றனர். மேலும் கேட்டதெல்லாம் தரும் வல்லமை வாய்ந்த அம்மனாக நம்பிக்கை வைத்து, பக்தர்கள் வணங்கி வருகின்றனர்.

Read More