ஆலந்துறைநாதர் கோயில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

ஆலந்துறைநாதர் கோயில்

அழகும், கம்பீரமும் மிகுந்த துர்க்கையம்மன்

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் ஐயம்பேட்டையைத் தாண்டி, கண்டியூர் செல்லும் பேருந்துச் சாலையில் சென்றால் தேவாரத் தலமான பசுபதி கோயிலை அடையலாம். இத்தலத்தின் புராணப்பெயர் புள்ளமங்கை. இறைவன் திருநாமம் ஆலந்துறைநாதர். இறைவி அல்லியங்கோதை. இத்தலம் சப்தமாதர்களும், சப்த ரிஷிகளும் வழிபட்ட சப்தஸ்தான தலங்களுள் ஒன்றாகும்.

இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்திலுள்ள துர்க்கையம்மனின் மகிஷாசுரமர்த்தினி உருவம் தனிச் சிறப்புடையதாகத் திகழ்கின்றது. இந்த துர்க்கையம்மனின் அழகும், கம்பீரமும் பார்ப்பவரை பிரமிக்க வைக்கும். கருங்கல் குடை நிழலில், எட்டுக் கைகளுடன்,எருமைத் தலைமீது நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள். தன் கைகளில் சங்கு சக்கரம், வாள், வில், கதை, சூலம், கேடயம், அங்குசம் முதலிய ஆயுதங்களை ஏந்தியிருக்கிறாள். துர்க்கையம்மனின் வாகனங்களான சிம்மம் வலதுபுறமும், கலைமான் இடதுபுறமும் இருக்கின்றன. துர்க்கையம்மனின் வாகனங்ககளின் கீழே இரு வீரர்கள் கத்தியால் தலையை அரிந்து தருவதுபோலவும், தொடையைக் கிழித்து இரத்த பலி தருவது போலவும் காட்சித் தருகிறார்கள். துர்க்கையம்மன் திரிபங்கியாய் ஒரு கையில் வில்லேந்தி, மற்றது அபயகரமாக மோதிர விரல் மடக்கிய முத்திரையுடன் இருக்க, பின்புறம் அம்பறாத்தூணி, அம்புகளும் விளங்க துர்கையம்மன் நின்றிருக்கும் கோலம், நேரிலேயே அவளைப் பார்க்கும் சிலிர்ப்பைத் தரும்.

திருநாகேஸ்வரம், பட்டீச்சுரம், திருப்புள்ளமங்கை ஆகிய இம்மூன்று தலங்களிலும் உள்ள துர்க்கையம்மன்கள் ஒரே சிற்பியால் செய்யப்பட்டவை என்றும், இம்மூன்றுமே மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும் சொல்லப்படுகிறது.

Read More