திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

தேரினை ஆமை இழுத்துச் செல்லும் வடிவமைப்பு - வியக்க வைக்கும் கலைப்படைப்பு

சுழலும் தேங்காய்

தனித்தனியாக சுற்றும் வளையங்களால் இணைக்கப்பட்ட கிளிகள்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில், மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். கொங்கு நாட்டில் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களில் இதுவும் ஒன்று. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். இத்தலம் அமைந்துள்ள மலையானது ஒரு புறம் பார்க்கும் பொழுது ஆணாக தோற்றமளிக்கிறது. வேறு இடத்தில் பெண் போல தோற்றம் அளிக்கிறது. இக்கோவிலில் அர்த்தநாரீசுவரர், செங்கோட்டுவேலன், ஆதிகேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோவிலில் உள்ள எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களில், பல்வேறு விதமான அழகிய மற்றும் நுணுக்கமான வேலைப்பாடு உள்ள சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. இத்தலத்தில் எழுந்தருளில் உள்ள முருகப்பெருமானின் திருநாமம் செங்கோட்டு வேலவர். அவர் சன்னிதி முன்னுள்ள மண்டபத்தில் ஒரு தேர் போன்ற வடிவம் உள்ளது. அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு, அந்தத் தேரினை ஆமை இழுத்துச் செல்வது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வேறு எந்த கோவில்களிலும், நாம் காண முடியாத வியக்க வைக்கும் கலை படைப்பாகும்.

இந்த செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்திலும் மற்ற மண்டபங்களிலும் அமைந்துள்ள எல்லா தூண்களிலும் செதுக்கப்பட்ட சிற்பங்கள், அக்காலத்திய சிற்பக்கலையின் உன்னதத்தை நமக்கு விளக்குகின்றன. ஒவ்வொவொரு சிற்பத்தின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்று நம்மை எண்ண வைக்கிறது. குதிரை மீது அமர்ந்திருக்கிற போர் வீரர்களின் சிற்பங்கள் மண்டபத் தூண்களில் கம்பீரத்துடன் திகழ்கின்றன. குதிரைகளின் உடலும் வாளேந்திய வீரர்களின் ஆவேசம் கூடிய மிடுக்கும், இடையிடையே அமைந்த தெய்வத் திருமேனிகளும் விலங்குகளும் பறவைகளுமாக நுட்பத்துடன் வடிக்கப்பட்டிருக்கின்றன.

இந்தக் கோவிலின் மண்டப மேற்கூரையில் எட்டுக்கிளிகள் வட்டத்திற்கு வெளியே அமைந்தது போலவும், நடுவிலே ஒரு தேங்காய் சிற்பமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேங்காயை நாம் கைகளால் சுழற்ற முடியும். இதில் உள்ள கிளிகளின் மூக்கில் வளையம், காலில் வளையம், வால்களில் வளையம் என்று அமைத்து, இவை அனைத்துமே தனித்தனியாக சுற்றுவது போல அமைக்கப்பட்டுள்ளது, நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த சிற்பத்தில், மேலிருந்து தொங்கும் சங்கிலிகள்,தொங்கும் தாமரைப்பூ,அதன் இதழ்களில் அமர்ந்து,மகரந்தத்தை ருசிக்கும் எட்டு கிளிகள், கிளிகளுக்கு காவலாக வெளியில் நான்கு பாம்புகள் ஆகிய எல்லாமே ஒரே கல்லால் வடிக்கப்பட்டது என்று அறியும் போது நம்மை வியப்பின் உச்சத்துக்கே இட்டுச் செல்லும்.

இந்த கோவிலின் சிற்பங்களை பார்த்து ரசிப்பதற்கு ஒரு நாள் போதாது. சிற்பக் கலையின் உன்னதத்தை உணர்த்தும் எண்ணற்ற நம் கோவில்களில், இக்கோவில் தனக்கென்று தனி இடத்தை பெற்று திதழ்கின்றது

Read More
வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

வையப்பமலை சுப்ரமணியசுவாமி கோவில்

சின்னப் பழனி என்று போற்றப்படும் முருகன் தலம்

முருகப்பெருமானின் விசேஷமான திருக்கோலம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 8 கி.மீ. தொலைவில் உள்ள வையப்பமலை ன்னும் ஊரில், மலை மீது அமைந்துள்ளது சுப்ரமணியசுவாமி கோவில்.

கருவறையில் இரண்டு கரத்தினராக , இடையில் கையை ஊன்றியவராகக் காட்சி அளிக்கிறார் சுப்பிரமணியர். முருகனுக்கான விசேஷமாகச் சொல்லப்படும் 16 கோலங்களில், இந்த சுப்பிரமணியர் திருக்கோலமும் ஒன்று. குமாரதந்திரம் மற்றும் ஸ்ரீ தத்துவ நிதி ஆகிய நூல்கள் பெருமானின் இந்த திருக்கோலத்தை மிகச் சிறப்பானதாகக் குறிப்பிடுகின்றன.

இத்தலத்திற்கு முற்காலத்தில் வைகை பொன்மலை என்று பெயர். அதன் பின்னணியில் பழனி முருகன் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று உள்ளது.

இந்த மலைக்கு அருகில் ‘அலவாய்மலை’ என்று அழைக்கப்படும் உலைவாய்மலை அமைந்துள்ளது. இந்த உலைவாய் மலையின் ஒரு பகுதியான சித்தர்மலையிலே, சித்தர்கள் பலர் தங்கியிருந்து மூலிகைகள் பல கொண்டு ரச வாதத்தின் மூலம் பொன் செய்தார்கள். இவ்வாறு பல காலம் செய்த பொன்னை எல்லாம் அவர்கள் ஒன்று திரட்ட, அது ஒரு பொற் குன்றாக விளங்கியது.

பழனி ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி, சித்தர்களின் மதி எல்லாம் பொன்னின் பால் சென்றதால் அவர்களை தடுத்தாட்கொண்டு திருவிளையாடல் புரிய விரும்பினார். முருகப்பெருமான் அந்த சித்தர்களிடம், ஆடு மேய்க்கும் இடையனை போன்ற வடிவத்தில், அவர்களிடம் சீடனாக சேர்ந்து, அவர்கள் அயர்ந்த சமயத்தில் அந்த பொன் மலையை தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடிக்கலானார்.

அதைக் கண்ட சித்தர்கள் அவன் யார் என்று தெரியாமலேயே, ‘வை பொன்னை’, ‘வை பொன்னை’ எனக் கூவிக்கொண்டே துரத்தினர். ‘நீ தூக்கிச் செல்லும் பொன்மலை உனக்கு உதவாமல், கல் மலையாக போகக் கடவது’ என்று சித்தர்கள் சாபம் தந்தனர். அதனால் இந்த பொன்மலை, கலியுகத்தில் கல் மலையாக மாறியது.

சித்தர் மலையில் இருந்து முருகப்பெருமான் பொன்மலையை தூக்கிச் சென்ற போது ஒரு சிறு பகுதி உடைந்து விழுந்தது. அந்த இடம் தற்போது பொன்மலை என்று அழைக்கப்படுகின்றது.

முருகப்பெருமான் தற்போது உள்ள பொன்மலைக்கு வந்ததும், அங்கே தவம் செய்து கொண்டிருந்த ஔவையார் முருகனைக் கண்டு அடையாளம் கண்டு கொண்டு,’வைக,பொன் மலையை’ என்று வேண்டினார். அதற்குச் இசைந்த முருகன், இவ்விடத்தே பொற்குன்றை வைத்து விட்டு ஔவைக்கும் துரத்தி வந்த சித்தர்களுக்கும் மலை மீது காட்சி அளித்து, உபதேசம் செய்து அருளினார். அதுமுதல், வைகைப்பொன்மலை என்றும், பேச்சு வழக்கில் வையப்பமலை என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

பழனி மூலவர் பீடத்தில், மூலவர் தண்டாயுதபாணி இல்லாததைக் கண்ட போகர், தனது ஞான திருஷ்டியின் மூலமாக நடந்ததை அறிந்து நவ பாசனத்தால் மூலவர் சிலையை உருவாக்கி பீடத்தில் வைத்து விட்டார்.

அதுமுதல் பழனியில் நவபாஷான முருகனும், வைகைபொன்மலையில் மூலவரான பாலதண்டாயுதபாணியான முருகனும் மேற்கு நோக்கி அருள்புரிந்து வருகிறார்கள். இதனால் தான் இத்தலம் சின்னபழனி என்று போற்றப்படுகின்றது.

Read More
கோட்டைமேடு பத்ரகாளி கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

கோட்டைமேடு பத்ரகாளி கோவில்

சிங்கத்தின் வாயில் எலுமிச்சை வடிவில் சுழலும் கல் உடைய அபூர்வ சிற்பம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் - திருச்செங்கோடு செல்லும் வழியில் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கோட்டைமேடு பத்ரகாளி கோவில். 1500 ஆண்டுகள் பழமையான கோவில் இது. இந்த பத்ரகாளியம்மனுக்கு எலுமிச்சை மாலை அல்லது எலுமிச்சையில் விளக்கேற்றி வழிபட்டால் எல்லா பிரச்னைகளையும் தீர்ந்துவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கடையேழு வள்ளல்களில் ஒருவரான பாரி ஆண்டுகொண்டிருந்த நேரம் அது. ஒரு சமயம் மழை இல்லாமல் ஏரிகள் எல்லாம் வற்றிப் போய் விவசாயம் செய்ய முடியாமல் மக்கள் பஞ்சத்தில் இருந்துள்ளனர். ஒரு நாள் மன்னன் பாரியின் கனவில் தோன்றி, நான் பத்ரகாளி என்றும், நான் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை காக்க ஏரியின் வலது கரையில் மேடான பாறையின் மேல் குடிகொண்டுள்ளதாகவும், இனி ஏரியில் எப்போதும் தண்ணீர் வற்றாது எனவும் கூறி, எனக்கு உடனடியாக ஒரு ஆலயத்தை கட்டி உடனடியாக குடமுழுக்கு செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறாள், காளி. அகிலத்தையும் காக்கும் நான் மேடான பாறையில் இருப்பேன், இதனால் என்னை மீறி எந்த தவறும் நடக்காது எனவும், நான் தினமும் ஏரியில் குளிக்க வேண்டும் எனவும், அதனால் என்னை தினமும் ஏரிக்கு அழைத்து சென்று குளிப்பாட்ட வேண்டும் எனவும் கூறியிருக்கிறாள்.

மன்னன் உடனடியாக இந்த பகுதிக்கு வந்து பார்வையிட்ட போது எலுமிச்சை பழம் இருந்துள்ளதை கண்டு, கனவில் வந்தது காளிதான் என்று மக்களிடம் கூறி, உடனடியாக பாறையின் மீது ஒரு ஆலயத்தை கட்டியுள்ளார். இதனால் கருவறையானது பாறை மீது காளி அமர்ந்தவாறு மேடான பகுதியில் அமைந்துள்ளது. எனவே கோட்டை போன்ற வடிவமைப்புடன் மேட்டில் குடிகொண்டுள்ளதால், கோட்டை மேடு பத்ரகாளியம்மன் என அழைக்கப்படுகிறாள். மேலும், இந்த பகுதியில் பலவன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்தி, தொந்தரவு செய்து வந்துள்ளான். மக்கள் பத்ரகாளியிடம் முறையிட்டு அரக்கனிடம் இருந்து காப்பாற்ற வேண்டியுள்ளனர். இதனால் அரக்கனை, பல்வேறு ஆயுதங்களை கொண்டு வதம் செய்து அழித்ததால் பத்ரகாளி எட்டு கரங்களுடன், அரக்கனை உக்கிரமாக வதம் செய்யும் காட்சியுடன், கருவறையில் வீற்றிருக்கிறாள்.

காளியின் காவலான சிங்கமானது, அடிக்கடி வனவிலங்குகளையும் கால்நடைகளையும் வேட்டையாடி வந்துள்ளது. இதனை தடுக்க மக்கள் வேண்டியதை ஏற்று, சிங்கத்தின் சீற்றத்தை குறைக்க அதன் வாயில் ஒரு எலுமிச்சை பழத்தை வைத்ததாகவும், அதனை குறிக்கும் விதமாக ஆலயத்தில் பத்ரகாளியை பார்த்தவாறு பெரிய சிங்கமானது காட்சியளிக்கிறது. சிங்கத்தின் வாயில் பற்களுக்கு இடையில் கருங்கல்லால் செதுக்கப்பட்ட உருளும் எலுமிச்சை வடிவில், கல் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையானது மிகவும் அபூர்வமானது. தமிழகத்தில் வேறெங்கும் இது போன்ற சிலையை காண முடியாது. இது அந்த கால கலைநுட்பத்திற்கு சான்றாக விளங்குகின்றது.

மேலும் இந்த சிங்கத்தின் மீது தினமும் இரவு வேளையில் ஊரை காக்க சலங்கை அணிந்து வலம் வந்ததாகவும், அதனை மக்கள் பார்த்துள்ளதாகவும் பரவசமாக கூறுகின்றனர். இது தவிர காளியின் இரு புறத்திலும், பூதகணங்கள் எனப்படும் இரு காவல் தெய்வங்கள் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்னரே வைக்கப்பட்ட சிலைகளாகும். யானைகள் அடிக்கடி காளியை வணங்கியதாகவும், அதனை குறிக்கும் வகையில் ஆலயத்தின் இருபுறங்களிலும் யானை சிலைகள் நேர்த்தியாக செதுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

Read More
திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் கோவில்

அர்த்தநாரீசுவரர் மூலவராக இருக்கும் தேவாரத் தலம்

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகரின் தென் கிழக்குப் பகுதியில் மலை மீது அமைந்துள்ளது, அர்த்தநாரீசுவரர் கோவில். திருச்செங்கோடு என்பதற்கு 'அழகிய இறைத்தன்மை பொருந்திய செந்நிற மலை' என்றும், 'செங்குத்தான மலை' என்றும் பொருள். மலையின் பெயரே ஊருக்கு அமைந்து விட்டது. இம்மலை, ஒருபுறம் இருந்து பார்த்தால் ஆண் போன்ற தோற்றமும், வேறு ஒரு புறம் இருந்து பார்த்தால் பெண் போன்ற தோற்றமும் அளிப்பது சிறப்பாகும். 2000 ஆண்டுகள் பழமையான இம்மலை கோவிலுக்கு செல்ல 1200 படிக்கட்டுகள் உள்ளன. வாகனங்கள் செல்ல சாலை வசதியும் உண்டு. கொங்கு நாட்டின் தேவாரப் பாடல் பெற்ற ஏழு தலங்களுள் இத்தலமும் ஒன்றாகும்.

கருவறையில் மூலவராகிய அர்த்தநாரீசுவரர், ஆண்பாதி பெண்பாதி வடிவம் கொண்டு மாதொருபாகனாகக் காட்சியளிக்கிறார். இப்படி சிவனும் (வலதுபுறம்), சக்தியும் (இடதுபுறம்) சேர்ந்த ஒரே உருவாய், மாதொரு பாகனாய் அர்த்தநாரீசுவரர் எழுந்தருளி இருப்பது இக்கோவிலின் தனிச் சிறப்பாகும். இப்படி இறைவன் மூலவராக, அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் எழுந்தருளி இருப்பது ஒரு அரிய காட்சியாகும். இந்த விக்ரகம் ஒருவகை பாஷாணத்தால் உருவானது. வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீசுவரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், ‘தொன்மைக்கோலம்’ என்று அழைக்கிறார்.

வைகாசி விசாக திருக்கல்யாணம் - அர்த்தநாரீசுவரருக்கு அணிவிக்கப்படும் தாலி

அர்த்தநாரீசுவரர். மாதொரு பாகர் என்று அழைக்கப்படும் இத்தல மூலவர். சுமார் 6 அடி உயரம் உள்ள உளி படாத சுயம்புத் திருமேனியாக பாதி ஆணாகவும். பாதி பெண்ணாகவும் மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். தலையில் ஜடாமகுடம் தரித்து. பூரண சந்திரன் குடி, கழுத்தில் ருத்ராட்சம், தாலி அணிந்து, கையில் தண்டாயுதம் வைத்திருக்கிறார். அம்பிகையின் அம்சமாக உள்ள இடது பாக காலில் கொலுசு உள்ளது. சிவன். சக்தி சேர்ந்த வடிவம் என்பதால் வலதுபுறம் வேட்டியும். இடப்புறம் சேலையும் அணிவிக்கிறார்கள். மூலவரின் காலடியில் இருக்கும் தேவதீர்த்தம், எக்காலத்திலும் வற்றாமல் சுரந்து கொண்டே இருக்கும், மூலவரை தரிசிக்க வருபவர்களுக்கு இந்த தீர்த்தம் வழங்கப்படுகிறது. வைகாசி விசாகத்தன்று இவருக்கு திருக்கல்யாண வைபவம் நடக்கும். அப்போது அர்த்தநாரீசுவரருக்கு அர்ச்சகர்கள் தாலி அணிவிப்பார்கள். அம்பிகை தனியே இல்லாததால் இவ்வாறு செய்கிறார்கள்.

பிரார்த்தனை

அர்த்தநாரீசுவரர் திருவுருவப் படத்தை வைத்து வேண்டிக்கொண்டால்,. கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து, மனதார பிரார்த்தனை செய்துகொண்டால், மங்கல காரியங்கள் தடையின்றி நடந்தேறும்.

அர்த்தநாரீஸ்வர மந்திரம் :

ஓம் ஹும் ஜும் சஹ

அர்த்தநாரீஸ்வர ரூபே

ஹ்ரீம் ஸ்வாஹா

திங்கட்கிழமை, அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் வீட்டில் விளக்கேற்றி அர்த்தநாரீஸ்வர ஸ்லோகம் பாராயணம் செய்து வழிபட்டால் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கை. நாகதோஷம், ராகு-தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

Read More