வானமாமலை பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வானமாமலை பெருமாள் கோவில்

கருவறையில் உள்ள மூர்த்தஙகள் அனைத்தும் சுயம்புவாகத் தோன்றிய திவ்ய தேசம்

திருநெல்வேலியிலிருந்து கன்னியாகுமரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 32 கி.மீ. தொலைவில் உள்ள திவ்ய தேசம் நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில்.

கோயிலின் கருவறையில் மூலவர் வானமாமலை என்கின்ற தோதாத்ரி நாதர், தனது இடது காலை மடித்துக்கொண்டும், வலதுகாலை தொங்கவிட்டு தரையில் படும்படியும் ஆதிசேஷன் குடைபிடிக்க , பூதேவி, ஸ்ரீதேவி சமேதராக ராஜதர்பார் கோலத்தில் அமர்ந்திருப்பது இந்த திவ்ய தேசத்தில் மட்டும்தான். அவ்வாறு வீற்றிருக்கின்ற காரணத்தினாலேயே, இக்கோவில் பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. ஊர்வசி, திலோத்தமா ஆகிய இருவரும் சாமரம் வீசிக் கொண்டும், சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி முதலானோர் மூலவர் தோதாத்ரி நாதரின் இருபுறமும் வீற்று இருக்கிறார்கள்.

இத்தலத்தில் பெருமாள் ஒரு கையை பாதத்தை நோக்கியபடியும், மற்றொரு கையை மடியில் வைத்தும் காட்சி அளிக்கிறார். யார் தன் பாதத்தை சரணடைகிறார்களோ அவர்களுக்குத் தன் மடியில் இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள். இத்தகைய பெருமாள் கோலத்தை வேறு எந்தத் தலத்திலும் காண முடியாது.

சில தலங்களில் மூலவர் மட்டும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பார். ஆனால் இத்தலத்தில் கருவறையிலுள்ள தோதாத்ரி நாதர், பூதேவி, ஸ்ரீதேவி, சூரியன், சந்திரன், பிருகரிஷி, மார்க்கண்டேய ரிஷி, ஊர்வசி, திலோத்தமா ஆகிய ஒன்பது பேரும், அர்த்த மண்டப்பத்திலுள்ள கருடாழ்வாரும், விஷ்வக்சேனரும் ஆக 11 மூர்த்தங்களும் சுயம்புவாக உருவானவர்கள். இப்படி கருவறையில் உள்ள அனைத்து மூர்த்தஙகளும் சுயம்புவாக எழுந்தருளியிருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

Read More
வானமாமலை பெருமாள் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

வானமாமலை பெருமாள் கோவில்

நல்லெண்ணெய் பிரசாதமாக வழங்கப்படும் திவ்ய தேசம்

திருநெல்வேலி - கன்னியாகுமரி தேசிய நான்குவழிச் சாலையில் சுமார் 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம், நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோவில். ஸ்ரீரங்கம், திருப்பதி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட 8 சுயம்புத் தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் விளங்குகிறது. மிகவும் பழைமைவாய்ந்த இத்தலத்தின் பெருமைகள் பற்றி நரசிம்ம புராணம், ஸ்கந்த புராணம், பிரம்ம புராணம் போன்றவற்றில் பாடப்பட்டுள்ளது.

இத்தலத்தில் பெருமாள் வானமாமலை என்கிற தோத்தாத்திரி நாதர் என்ற திருநாமத்துடன் பட்டாபிஷேகக் கோலத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஆதிசேஷன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு வீற்றிருப்பது போன்ற திருக்கோலத்தில், சுவாமியை இத்தலத்தில் தரிசிக்கலாம். அதனால் இந்தக் கோயில் பூகோல வைகுண்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தாயாரின் திருநாமம் ஸ்ரீவரமங்கை. தன் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை தருவதாக இவரை கொண்டாடுகின்றனர்.

பெருமாளுக்கு தினசரி நடைபெறும் நல்லெண்ணெய் அபிஷேகம்

இத்தலத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் வானமாமைலை பெருமாளுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யப்படும் எண்ணெய் திருக்கோவில் வளாகத்துக்குள் இருக்கும் 25 அடி நீளம், 15 அடி அகலமுள்ள கிணற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது. இப்படி பல ஆண்டுகளாகச் சேமிக்கப்பட்ட இந்த எண்ணெய், மழைக்கும், வெயிலுக்கும் திறந்த வெளியாக கிணற்றில் இருந்தாலும் கெட்டுப் போகாமல் இருப்பது விசேஷம் ஆகும். இந்த எண்ணெய் நாங்குநேரி வானமாமலை ஜீயர் மடத்தால் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

நோய்களைத் தீர்க்கும் எண்ணெய் பிரசாதம்

இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்தாகத் திகழ்கிறது. தீராத சருமநோயால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை வாங்கி நாள்தோறும் சிறிது பருகுவதுடன், கோயில் அருகிலுள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்திலிருந்து எடுக்கப்பட்ட மண்ணையும், எண்ணெயையும் கலந்து சருமத்தில் பூசி வந்தால் நாட்பட்ட சரும நோய்களும் பறந்து போகும் என்று நம்பப்படுகிறது.

இந்த எண்ணெய்க் கிணறு அருகே அகத்தியர் தனிச் சந்நிதியில் வீற்றிருக்கிறார். எண்ணெய் பிரசாதத்தின் மகிமை பற்றி அகத்தியர் தான் இயற்றிய 'அகத்தியம்' என்ற நூலில் புகழ்ந்து பேசியுள்ளார்.

Read More