
நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில்
அமர்ந்த நிலையில் காட்சி தரும் நவக்கிரகங்களின் வித்தியாசமான தோற்றம்
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நகரின் ஒரு பகுதியாக விளங்கும் கோவில்பட்டியில் அமைந்துள்ளது கைலாசநாதர் கோவில். இறைவியின் திருநாமம் செண்பகவல்லி அம்மன். இத்தலத்தில், இறைவனும் இறைவியும் மேற்கு நோக்கி எழுந்தருளி இருப்பது ஒரு தனிச்சிறப்பாகும். இக்கோவில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
பொதுவாக சிவன் கோவில்களில் நவக்கிரகங்கள் நின்ற நிலையில் தான் காட்சி அளிப்பார்கள். ஆனால் இக்கோவிலில் நவகிரகங்கள் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார்கள். நவக்கிரகங்களின் இந்த வித்தியாசமான தோற்றத்தை, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாது.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
பிரதோஷ நாயகர் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருக்கும் அபூர்வத் தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
பிரதோஷ காலங்களில் கோவில் பிராகாரத்தில் வலம் வருவதற்காக அமைந்துள்ள உற்சவமூர்த்தியே பிரதோஷ நாயகர் என்று அழைக்கப்படுகின்றார். ஏறத்தாழ ஒன்றரை அடி உயரம் உடைய இந்த மூர்த்தி சந்திரசேகரரைப் போன்ற தோற்றமுடையவர்.பன்னிரு கரங்களில் மான்,மழுவும், முன்னிரு கைகளில் அபய,வரத முத்திரையும் தாங்கியவராய் நின்ற நிலையில் விளங்குகின்றார்.தலையில் ஜடாமகுடம் விளங்க,அதில் வெண்பறை,கங்கை,ஊமத்தை மலர் தரித்தவராய் மூன்று கண்களும் கருத்த கண்டமுடையவராய் எல்லையில்லா மகிழ்ச்சி பொங்கும் முகத்துடன் அமைந்துள்ளார்.அவரது இடப்புறத்தில் அம்பிகை தனது வலக் கரத்தில் நீலோற்பல மலர் ஏந்தி,இடது கரத்தைத் தொங்கவிட்ட நிலையில் நின்றவாறு காட்சியளிக்கின்றாள். பிரதோஷ தினத்தின் மாலையில் இந்தப் பிரதோஷ மூர்த்தியை இடப வாகனத்தில் வைத்து அலங்கரித்துக் கோவிலின் உட்பிராகாரத்தில் வலம் வருகின்றனர்.
இந்தத் தலத்தில் பிரதோஷ நாயகர் அம்பிகையை தனது இடது கையால் அணைத்திற்கும் தோற்றமானது ஒரு அரிய காட்சியாகும்.இதற்கு பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமான் ஆலகால விஷத்தை அருந்த முற்பட்ட போது, பார்வதி தேவி அஞ்சினாள். அவளுடைய பயத்தைப் போக்கும் வகையில், சிவபெருமான் அவளை அணைத்துக் கொண்டார். இந்த அடிப்படையில் சிவபெருமான் அம்பிகையைத் தனது இடக்கரத்தால் அணைத்துக் கொண்டிருப்பது போன்ற பிரதோஷ நாயகர் உருவம் அமைக்கப் பெற்றது.இந்த மூர்த்தியை உமா ஆலிங்கன மூர்த்தியென்றும், அணைத்தெழுந்த நாதர் என்றும் அழைக்கின்றனர்.
காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு, பிரதோஷ நாயகருடன் வலம் வரும் திருமண தடை நீக்கும் வழிபாடு
உமா ஆலிங்கனராய் உள்ள இந்தத் தலத்து பிரதோஷ மூர்த்தியை, பிரதோஷ காலத்தில் வழிபட்டு பிரதோஷ சுவாமி புறப்பாட்டின் போது சுவாமிக்கு சுண்டல் நிவேதனம் செய்து முல்லை, நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்து, திருமணம் ஆகவேண்டிய பெண்கள் கையில் காமாட்சி விளக்கினை ஏற்றி வைத்துக்கொண்டு சுவாமியுடன் மூன்று வலம் வருகையில் திருமணம் கைகூடும். இம்மாதிரி 5 பிரதோஷங்கள் செய்ய வேண்டும். திருமணமாகாத ஆண்களின் தாய், இம்மாதிரி பிரார்த்தனை செய்து வலம் வரும்போது அவர்களின் பிள்ளைகளுக்கு திருமணம் கை கூடும்.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
தலை சடை விரித்த கோலத்தில் இருக்கும் அபூர்வ தட்சிணாமூர்த்தி
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
இக்கோவிலில் இறைவன் கருவறையின் சுற்று சுவரில் எழுந்தருளி இருக்கும் தட்சிணாமூர்த்தி, தன் தலை சடையை விரித்த கோலத்தில் காட்சி அளிப்பது நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும். இதற்கு பின்னணியில் உள்ள சம்பவம் என்னவென்றால், தேவர்கள் சிவபெருமானிடம் தாட்சாயணியின் மறைவுக்குப் பின் தங்களுக்கு சக்தி இல்லையே என்று வினவியபோது, சிவபெருமான் என்னிடம் கங்கா சக்தி உள்ளது என்று சடா முடியிலிருந்து கங்கையை விடுவித்து, கங்கையின் பிரவாக சக்தியைக் தேவர்களுக்கு காட்டினார். அந்தக் கோலத்தில் தான் நாம் அவரை இக்கோவிலில் தரிசிக்கிறோம்.

நத்தம் வாலீஸ்வரர் கோவில்
நெற்றியில் மூன்றாவது கண் அமைந்த அம்பிகை
காலில் பாதச்சலங்கையுடன், பரத நாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் அம்பிகையின் அபூர்வ தோற்றம்
சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பஞ்செட்டி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம் வாலீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் ஆனந்தவல்லி.
அம்பிகை ஆனந்தவல்லிக்கு, நெற்றியில் மூன்றாவது கண் அமைந்திருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை அபய, வரத முத்திரையுடனும், கைகளில் அங்குசம் பாசம் ஏந்தி, காலில் பாதச்சலங்கையுடன், பரதநாட்டிய உடையுடன், நாட்டிய கோலத்தில் காட்சி தருவது, நாம் வேறு எந்த தலத்திலும் காண முடியாத அரிய காட்சியாகும்.
இத்தலத்தில் சிவராத்திரி அன்று மூன்றாம் காலத்தில், அதாவது லிங்கோத்பவர் காலத்தில், சிவபெருமானும் பார்வதி தேவியும் நாட்டியமாடியதாக ஐதீகம், அதனால் தான் அம்பிகைக்கு ஆனந்தவல்லி என்று பெயர்.
அன்னப்பாவாடை நெய்க்குள தரிசனம்
தை மாதம் ரேவதி நட்சத்திர தினத்தன்று, அம்மனுக்கு அன்னப் பாவாடை வைபவம் நடைபெறும். சர்க்கரைப் பொங்கல் முதலிய அன்ன வகைகள், பட்சணங்கள், பழவகைகள் ஆகியவை அம்பிகைக்கு முன் படையலிடப்படும். சர்க்கரை பொங்கல் முதலில் அன்ன வகைகள் பாத்தி போல் கட்டப்பட்டு அதில் நெய் ஊற்றப்படும். நெய்க்குளத்தில் அம்மன் உருவம் தோற்றமளிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும்.
ராகு, கேது தோஷ நிவர்த்தி தலம்
ஒரு சமயம் அம்பிகைக்கு ஏற்பட்ட சர்ப்ப தோஷத்தை, இத்தலத்து இறைவன் வாலீசுவரர் நிவர்த்தி செய்தார். அதனால் இத்தலம் ராகு கேது தோஷம், காலசர்ப்ப தோஷம் முதலியவற்றுக்கு சிறந்த பரிகார தலமாக விளங்குகிறது.
பிரார்த்தனை
கலைகளில் சிறந்து விளங்க இந்த அம்பிகை அருள் புரிகிறாள். வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு தேனாபிஷேகம் செய்து, சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், கலைகளில் உன்னத நிலையை அடைய முடியும்.

நத்தம் மாரியம்மன் கோவில்
மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் மாரியம்மனின் அபூர்வ தோற்றம்
திண்டுக்கல்லிருந்து 36 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது நத்தம். இங்கு, 400 ஆண்டுகளுக்கு மேல் பழமையான, சுயம்புவாக எழுந்தருளி உள்ள மாரியம்மன் கோவில் இருக்கின்றது.
கருவறையில் மாரியம்மன், எட்டு திருக்கரங்களில் ஆயுதங்கள் ஏந்தி, வலது காலை மடித்து இடது காலை தொங்கவிட்டுக் கொண்டு மயில் மேல் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகின்றாள். இப்படி மயில் மேல் அமர்ந்து மாரியம்மன் காட்சி தருவது இத்தலத்தின் தனிச்சிறப்பாகும். வேறு எந்த தலத்திலும் நாம் அம்மனை இப்படி மயில் மீது அமர்ந்த கோலத்தில் தரிசிக்க முடியாது.
பிரார்த்தனை
குழந்தைவரம், அம்மைநோய், உடல் ரீதியான பிரச்சினைகள் தீர பக்தர்கள் இங்கு அம்மனை வேண்டுகின்றனர். குழந்தை இல்லாதவர்கள் இங்கு வந்து வேண்டி,மூலிகை பச்சிலை உண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். டாக்டர்களால் கைவிடப்பட்ட பல நோய்கள் இங்கு தீர்க்கப்படுகின்றன. வயிற்று வலி உட்பட நிறைய நோய்கள் குணமாக்கப்படுகின்றன.
நேர்த்திக் கடன்
தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல்,கரும்பு தொட்டில் கட்டுதல், கழுகு மரம் ஏறுதல் முதலானவற்றை பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்களாக செய்கின்றனர்.
சற்று கடினமான உயரமான யூகலிப்டஸ் மரத்தை வழுவழுவென செதுக்கி, அந்த மரத்தின் மேல் விளக்கெண்ணெய், மிளகு, கடுகு ஆகிய எளிதில் வழுக்கும் பொருட்களை பூசுவார்கள். அந்த மரத்தில் பக்தர்கள் விடாப்பிடியுடன் மேலே ஏறுவார்கள். இந்த நேர்த்திக் கடனுக்கு கழுகு மரம் ஏறுதல் என்று பெயர்.
இக்கோவிலில் மாசி மாதம் நடைபெறும் பூக்குழித் திருவிழா, தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூக்குழிக்கு ஒரு ஆள் உயரத்திற்கு பள்ளம் வெட்டப்படும். அதற்கு மேல் ஒரு ஆள் அடி உயரத்திற்கு கட்டைகள் அடுக்கப்பட்டு பூக்குழி அமைக்கப்படும். சுமார் 45,000 பேர் தங்கள் நேர்த்திக் கடனுக்காக பூக்குழியில் இறங்குவார்கள்.
கொங்குநாடு பண்ணாரி அம்மன் குண்டம் திருவிழாவுக்கு அடுத்து, இக்கோவிலில் தான் அதிக அளவில் மக்கள் பூக்குழி இறங்குவார்கள்.

வாலீஸ்வரர் கோவில்
காரிய தடையை நீக்கும் கணபதி
சென்னை செங்குன்றம் அடுத்த பஞ்செட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் நத்தம் அமைந்துள்ளது. இங்குள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் அமைந்துள்ள ஶ்ரீ காரிய சித்தி கணபதி, தொந்தியில்லா கணபதியாகக் காட்சித் தருகிறார். பிரம்மனுக்கு அருளிய இவர், முக்கண்ணணாக ருத்திராட்ச மாலை,பரசு ஏந்தி ஓங்காரவடிவில் தாமரை மொட்டில் அமர்ந்துள்ளார். இவரை வணங்குவதால் நாம் எடுத்த காரியம் நல்லபடியாக முடியும். திருமணத்தடை, உத்தியோகத்தடை, பிள்ளைப்பேறு, போன்ற தடைகளுக்கு பரிகார ஸ்தலமாக திகழ்கிறது.