தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்
அம்மன், Amman Alaya Thuligal அம்மன், Amman Alaya Thuligal

தேக்கம்பட்டி வனபத்ர காளியம்மன் கோவில்

பாண்டவர்கள் வழிபட்ட வனபத்ரகாளியம்மன்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு மேற்கே 5 கி.மீ. தொலைவிலுள்ள தேக்கம்பட்டி தேவி கோட்டத்தில் மிகவும் பழமை வாய்ந்த வனபத்ர காளியம்மன் கோவில் உள்ளது.

தல வரலாறு

சாகாவரம் பெற்ற மகிசாசூரனை அழிக்க அம்பாள் சிவனை நினைத்து வழிபட்டுப் பூஜை செய்து சூரனை அழித்தாள். அம்பாள் சிவனை நினைத்து இந்த வனத்தில் தியானம் செய்ததால் இங்குள்ள அம்மன் வனபத்ரகாளியம்மன் என்று பெயர் பெற்றாள். இது தவிர ஆரவல்லி, சூரவல்லி சகோதரிகள் கதையோடும் இக்கோவில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

மந்திரம், சூன்யம் ஆகியவற்றால் கொடிய ஆட்சி செய்த ஆரவல்லி, சூரவல்லி, வீரவல்லி என்ற ஏழு சகோதரிகளை அடக்க பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் சென்று சிறைப்பட்டு பின்னர் கிருஷ்ணன் அவனைக் காப்பாற்றினார். பின்பு பாண்டவர்கள் அப்பெண்களை அடக்க தங்களின் தங்கை சங்கவதியின் மகன் அல்லிமுத்துவை அனுப்பி வைத்தனர்.

அவன் இங்குள்ள வனபத்ரகாளி அம்மனை வழிபட்டுச் சென்று ஆரவல்லியின் பெண்கள் சாம்ராஜ்ஜியத்தைத் தவிடு பொடியாக்க அவர்கள் பயந்து போய் ஆரவல்லியின் மகளை அல்லி முத்துவுக்கு திருமணம் செய்து கொடுத்து அவள் மூலம் நஞ்சு கொடுத்துக் கொன்றனர். இதையறிந்த அபிமன்யு வானுலகம் சென்று அல்லிமுத்துவின் உயிரை மீட்டு வந்தான். நடந்த விஷயங்களைக் கேள்விபட்ட அல்லிமுத்து வெகுண்டெழுந்து ஆரவல்லியை அடக்கப் புறப்பட்டுச் சென்றான். வழியில் வனபத்ரகாளியம்மனை வழிபட்டு அவள் அருள் பெற்று ஆரவல்லியின் சாம்ராஜ்ஜியத்தை அழித்தான்.

பிரார்த்தனை

அம்மனிடம் குழந்தை வரம் வேண்டி வணங்கி தொரத்தி மரத்தில் கல்லை கட்டிவிட்டு வழிபட்டால் தங்கள் பிரார்த்தனை நிறைவேறுகிறது. செய்வினை, பில்லிசூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக்கோயிலுக்கு ஒருமுறை வந்து அம்மனை மனமுருக வேண்டிக்கொண்டால் அத்தகைய கோளாறுகள் நீங்குகிறது என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டிய காரியம் நன்றாக முடிந்தால், பெண்கள் தாலியை உண்டியலில் போட்டு விடுவர்.

Read More