கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

மூன்று கொம்புகள் முளைத்த அதிசயத் தேங்காய்

திருநெல்வேலி - திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 35 கி. மீ தொலைவில் உள்ளது தென்திருப்பேரை. சுவாமி கைலாசநாதர். இறைவி அழகிய பொன்னம்மை. சோழ தேசத்தில் திருச்சி அருகில் திருப்பேரை என்ற தலம் உள்ளது. அதே போல் தெற்கே பாண்டியநாட்டில் இருந்த இந்தத் தலமான திருப்பேரை 'தென்திருப்பேரை' என்று அழைக்கப்பட்டது. இத்தலம் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும்.

மூன்று கொம்புகள் முளைத்த தேங்காய்

அம்பாள் சன்னிதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. முற்காலத்தில் ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை என்பவர் ஒரு சமயம், இந்தத் தென்திருப்பேரை பகுதிக்கு வந்தார். தனக்கு குடிக்க இளநீர் கொண்டு வரச் சொல்லித் தன் சேவகர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். கலெக்டரின் உத்தரவை ஏற்றச் சேவகர், அருகில் உள்ள ஒரு தென்னந்தோப்பிற்கு சென்று இளநீர் பறிக்க முற்பட்டார். அங்கிருந்த விவசாயியோ அந்தத் தோப்பில் விளையும் இளநீர் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக்கூடியது என்று சொல்லி இளநீரை பறிக்க விடாமல் தடுத்தார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு வந்து, 'இந்தத் தோப்பிலுள்ள இளநீருக்கு என்ன கொம்பா முளைச்சிருக்கு? இப்போ பறிச்சு போடப்போறியா இல்லையா' என்று விவசாயியை அதட்டினார். கலெக்டரின் உத்தரவைத் தட்ட முடியாத விவசாயி, ஒரு இளநீரை பறித்துப் போட்டார். என்ன ஆச்சர்யம்! அந்த இளநீரில் மூன்று கொம்புகள் முளைத்திருந்தன. அதனை கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டதோடு மட்டும் அல்லாமல், தினசரி பூஜைக்காக, ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்த முக்கொம்பு தேங்காய், ஒரு கொம்பு ஒடிந்து, தற்போது இரண்டு கொம்புகளுடன் மட்டுமே காட்சித் தருகிறது.

சுவாமி கைலாசநாதரை வணங்கினால் நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் பெற்று வாழலாம்.

கிழக்கு நோக்கிய தனி கருவறையில் அழகிய பொன்னம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும், மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்டபடியும் நின்ற கோலத்தில் காட்சித் தருகிறாள். இந்த அம்மையை வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

Read More
கைலாசநாதர் கோவில்

கைலாசநாதர் கோவில்

சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன் குதிரை வாகனத்தில் காட்சி தரும் அபூர்வக் கோலம்

தென்திருப்பேரை கைலாசநாதர் கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் கைலாசநாதர் என்றும், அம்மன் அழகிய பொன்னம்மை என்றும் அழைக்கப்படுகின்றார். இச்சிவாலயம் தமிழகத்தின் நவ கைலாயங்களுள் ஏழாவது தலமாகும். நவக்கிரகங்களில் புதன் வழிபட்டத் தலமாகும்.

தமிழகத்தின் நவ கைலாயங்கள் என்பவை தமிழ்நாட்டின் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் உள்ள ஊரைக் குறிப்பதாகும்.இந்த தலங்களைத் தரிசித்தால் செய்த பாவங்களிலிருந்து விடுபட்டு முக்தி அடையலாம் என்று கூறப்படுகிறது. இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

குதிரை வாகனத்தில் சூரியன்,சந்திரன், குரு பகவான், சுக்கிரன்

நவகிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரை ஆகும்.. ஆனால் இங்குள்ள நவக்கிரக சந்நிதியில் காட்சி தரும் சூரியன், சந்திரன், குரு பகவான், சுக்கிரன் ஆகிய நான்கு கிரகங்களுமே குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பம்சம் ஆகும். சூரியன் ஏழு குதிரைகள் பூட்டிய தேரிலும், குரு பகவானும், சுக்கிர பகவானும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும், சந்திர பகவான் பத்து குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இது வேறு எந்தத் தலத்திலும் காணமுடியாத சிறப்பம்சம் ஆகும்.

ஆறு கரங்களுடன் காட்சி தரும் பைரவர்

இங்குள்ள பைரவருக்கு ஆறு கரங்களுடன் காட்சி தருவது மற்றுமொரு சிறப்பம்சம் ஆகும். இவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தியும், நாய் வாகனம் இல்லாமலும் காட்சி தருகிறார்.சிறப்பு வாய்ந்த இந்தப் பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி திதியில் பூஜை செய்தால் தொழில் விருத்தி ஆகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

புதன் தோஷ நிவர்த்தித் தலம்

தங்கள் ஜாதகத்தில் புதன் தோஷம் உள்ளவர்களும், கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று விரும்புவர்களும் சுவாமிக்கு பச்சை நிற வஸ்திரம் சாத்தி வழிபடுகின்றனர்.

Read More