தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில்

முருகனின் பாதச்சுவடுகள் பதிந்த மலை

வேலூரில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள புதுவசூர் என்ற கிராமத்தில் மலை மீது அமைந்துள்ளது தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில். இந்தக் கோவில் 2000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த மலைக்கோயிலுக்கு நடந்து செல்ல 220 படிக்கட்டுகளும், வாகனங்கள் செல்ல சாலை வசதியும் இருக்கின்றது. கருவறையில் முருகன், வள்ளி தெய்வானை சமேதராக காட்சி அளிக்கிறார். இந்தக் கோவிலில் முருகப்பெருமானும் வள்ளியம்மையும் சம உயரத்தில் காட்சி அளிப்பது வேறு எந்த தலத்திலும் நாம் தரிசிக்க முடியாத காட்சியாகும். தெய்வானை முருகனை விட சற்று குறைவான உயரத்தில் காட்சி அளிக்கிறார்.

வள்ளிமலையில் நம்பிராஜன் மகளாக வளர்ந்து வந்த வள்ளியைத் திருமணம் செய்து கொள்வதற்காக, முருகன் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலை நோக்கிச் சென்றபோது, இந்த மலையில் சிறிது நேரம் இளைப்பாறி பாதம் பதித்துச் சென்றார். இதற்கு ஆதாரமாக முருகப்பெருமானின் பாதச்சுவடுகள் இன்றும் இந்த ஆலயத்திற்கு படியேறிச் செல்லும் பாதையில், பத்துப் படிகள் ஏறியதுமே வலதுபுறம் காட்சி தருகின்றன.

இந்த மலைப்பகுதிக்கு ஒளவையார் வந்தபோது அவரிடம் விளையாட விரும்பிய முருகன், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று வார்த்தை விளையாட்டு நிகழ்த்தியது இந்த மலையில்தான்.

பிரார்த்தனை

இந்த மலையில் முருகப்பெருமான் தன் திருவடிகளைப் பதித்து இளைப்பாறியதால், இந்த கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களின் மனத் துன்பங்கள் விலகி, முருகனின் அருளால் இளைப்பாறுதல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Read More