நின்ற நாராயணன் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நின்ற நாராயணன் கோவில்

ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரன் திருமணம் நடந்த திவ்யதேசம்

திருத்தங்கல் திவ்ய தேசம், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்தலத்தில் நின்ற நாராயணன் பெருமாள் கோவில் 'தங்காலமலை மீது அமைந்துள்ளது. மலைக்கோயிலான இதில் இரண்டு நிலைகள் உள்ளன. மூலவரான 'நின்ற நாராயணப்பெருமாள்' மேல் நிலையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என்ற திருநாமங்கள் உண்டு. இரண்டாவது நிலையில் செங்கமலத்தாயார் தனி சன்னதியில் அருளுகிறாள். இவளுக்கு கமல மகாலட்சுமி, அன்னநாயகி, ஆனந்தநாயகி, அமிர்தநாயகி என்ற திருநாமங்கள் உண்டு.

மகாபலி சக்கரவர்த்தியின் மகன் வாணாசுரனுக்கு உஷை என்ற மகள் இருந்தாள். ஒருமுறை தன் கனவில் அழகிய ராஜகுமாரனைக் கண்டாள். தனது தோழி சித்ரலேகையிடம் அவனைப் பற்றி கூறி ஓவியமாக வரையக் கூறினாள். ஓவியம் வரைந்த பிறகு தான், அந்த வாலிபன் பகவான் கிருஷ்ணரின் பேரனான அநிருத்தன் என்பது தெரிய வந்தது. அவனையே திருமணம் செய்ய வேண்டுமென அடம்பிடித்தாள். சித்ரலேகை துவாரகாபுரி சென்று அங்கு உறங்கிகொண்டிருந்த அநிருத்தனை கட்டிலுடன் தூக்கிக் கொண்டு வாணாசுரனின் மாளிகைக்கு வந்தாள். விழித்து பார்த்த அநிருத்தன், தன் அருகே அழகி ஒருத்தி இருப்பதை கண்டான். நடந்தவற்றை அறிந்து, உஷையை காந்தர்வ மணம் புரிந்து கொண்டான். இதையறிந்த வாணாசுரன் அவர்களைக் கொல்ல முயன்றான். அப்போது அசரீரி தோன்றி,"வாணா! இத்தம்பதிகளை கொன்றால் நீயும் அழிந்து போவாய்," என ஒலித்தது. இதைக்கேட்ட வாணாசுரன் அநிருத்தனை சிறை வைத்தான். இதையறிந்த கிருஷ்ணர், வாணாசுரனுடன் போரிட்டு அவனை வென்றார். பின்பு முறைப்படி துவாரகையில் திருமணம் நடத்த முடிவு செய்தார். ஆனால் திருத்தங்கலில் தவமிருந்த புரூர சக்கரவர்த்தியின் விருப்பப்படி இத்தலத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்து, நின்ற நாராயணப்பெருமாளாக அருள்பாலித்து வருகிறார்.

Read More
நின்ற நாராயணன் கோயில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நின்ற நாராயணன் கோயில்

அமிர்த கலசத்துடனும் பாம்புடனும் காட்சி தரும் கருட ஆழ்வார்

108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் தலத்தில், கருடாழ்வாா் தனது வலது திருக்கையில் அமிா்தகலசத்துடனும், இடது திருக் கையில் வாசுகி நாகத்துடனும், இரண்டு கைகளைக் கூப்பியவாறு அஞ்சலி ஹஸ்தத்துடன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருவது மிக மிக அரிதான தரிசனமாகும். தனக்கு எதிரியான வாசுகி பாம்பை நண்பனாக ஏற்று, தன் கையில் ஏந்தியிருப்பது இத்தலத்தின் சிறப்பு. எதிரிகளால் துன்பப்படுபவர்கள் இவரை வழிபட்டால், அவர்கள் நண்பர்களாகி விடுவார்கள் என்பது நம்பிக்கை

இத்தலம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Read More