சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர்  கோவில்

சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில்

பேரழகும், கம்பீரமும் மிக்க பிரம்மாண்டமான அதிகார நந்தி சேவை

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ளது ஆதிபுரீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. முற்காலத்தில் நெசவாளர்கள் இப்பகுதியில் அதிகம் இருந்ததால் 'சென்னை தறிப் பேட்டை' என்று அழைக்கப்பட்டு பின்னர் 'சிந்தாதிரிப்பேட்டை' ஆனது. 1743- இல் கிழக்கிந்திய கம்பெனியில் துபாஷாக பணியாற்றிய ஆதியப்ப நாராயண செட்டி என்பவரால் இங்கு ஆதிபுரீஸ்வரர், ஆதி கேசவ பெருமாள், ஆதி விநாயகர் ஆகிய ஆலயங்கள் கட்டப்பட்டன.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின்போது மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி சேவை உலகப் பிரசித்தி பெற்றது. அதுபோல சென்னை சிந்தாதிரிப்பேட்டை ஆதிபுரீஸ்வரர் கோவில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் நடைபெறும் அதிகார நந்தி வாகன ஊர்வலம் ஆசியாவிலேயே மிகப் பெரியது.

ஆதிபுரீஸ்வரர் கோவில் அதிகார நந்தி வாகனத்தின் பிரம்மாண்டமும், கம்பீரமும், அழகும் பார்ப்பவரை மயக்க வைக்கும். அழகிய வேலைப்பாடு மிளிரும் இந்த அதிகார நந்தி வாகனத்தை 1901 ஆம் ஆண்டு இக்கோவிலுக்குச் செய்தளித்தவர், தமிழ்ப் பேரறிஞர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனாரின் தந்தையான பொன்னுசாமி கிராமணி என்பவர். அதிகார நந்தி தேவர் மட்டும் 6 அடி உயரம், நந்தியின் பாதத்தின் கீழ் இருக்கும் திருக்கயிலாய மலை 3 அடி உயரம், அதன் கீழ் இருக்கும் சட்டம் 3 அடி உயரம் என, மொத்தம் 12 அடி இந்த வாகனத்தின் உயரமாக தற்போது உள்ளது. முன்பு இந்த வாகனம்.கீழ் சட்டத்திற்கும் கீழே வைப்பதற்கு, 3 அடி உயரமுள்ள மற்றொரு சட்டம் இருந்தது. அதையும் சேர்த்தால் மிக அதிக உயரமாக வாகனம் இருக்கும் என்பதால், அந்த உயரத்திற்கு இப்போது வீதியில் வாகனம் செல்ல முடியாத நிலை உள்ளதால், அந்த சட்டம் பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிக்கப்பட்டு, உயரம் குறைக்கப்பட்டு விட்டதாம்.

கலையழகு மிளிரும் நந்தி தேவரின் ஒவ்வொரு அங்கமும் பார்த்து பார்த்து செய்யப்பட்டிருக்கிறது. அவரது கைகளும், தொடைகளும், கால்களும் கட்டுமஸ்தாக உருவாக்கப்பட்டுள்ளன. இடை சுருங்கி, அடிவயிறு குவிந்திருப்பது ஒரு யோகியின் நிலையைக் காட்டுகிறது. முன்னிரு கரங்களும் இறைவனின் பாதங்களைத் தாங்கும் நிலையில் இருக்க, பின்னிரு கரங்களில், மானும், மழுவும் ஏந்தியுள்ளார். நேராக இல்லாமல் ஒயிலாக சாய்ந்திருப்பது போல இருப்பதே ஒரு தனி அழகு ஆகும் அவரது மேனி முழுவதும் ஆபரணங்கள் தனித் தனியாக தெரியும் படி அருமையாக செதுக்கப்பட்டுள்ளன. தலையலங்காரமும், தோளில் வாகுவளையங்களும், மார்பின் மாலைகளும், கரங்களில் கங்கணமும், காலில் சிலம்பும் மிகவும் கலை நயத்துடன் செதுக்கப்ப்பட்டுள்ளன. இவரது தாமரை மாலையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.

வாகனத்தின் உச்சி முதல் பாதம் வரை ஆங்காங்கே உள்ள கம்பிகளில், மொத்தம் 63 வகையான பொம்மைகள் பொருத்தப்படுகின்றன. மூன்று அடுக்குகளாக இந்த பொம்மைகளை அமைத்துள்ளனர். முழு முதற்க் கடவுள் விநாயகர், மும்மூர்த்திகளான பிரம்மா, ஸ்ரீ மஹா விஷ்ணு, சிவபெருமானின் ஆனந்தத் தாண்டவம் கண்டு களித்த பதஞ்சலி, புலிக்கால் முனிவர் இசைக்கு இலக்கணம் வகுத்த நாரத முனிவர், தும்புரு முனிவர் பொம்மைகளும்,, பிருங்கி முனிவர், சுக முனிவர் பொம்மைகளும் உள்ளன. கயிலாய மலையில் ஒரு காலில் நின்றபடி, யோக பட்டம் காட்டியபடி என, பல்வேறு நிலைகளில் தவம் புரியும் முனிவர்கள் பொம்மைகளும் உள்ளன. அனைத்து பொம்மைகளும் தாமரை பீடத்தில் நின்ற கோலத்தில் உள்ளது ஒரு தனி அழகு.

அதிகார நந்தி இசைக்கு தலைவர் என்பதால், அவரைச் சுற்றி இசையில் மூழ்கியிருக்கும் கந்தர்வ பொம்மைகள் உள்ளன. கீழே முதல் வரிசையில் எட்டுத் திசை பாதுகாவலர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் ஆகியோரது பொம்மைகள் வைக்கப்படுகின்றன. நான்கு பக்கமும் நான்கு துவார பாலகர்கள், கந்தருவி பொம்மைகள் அலங்கரிக்கின்றன,

Read More