தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

தென்பொன்பரப்பி சொர்ணபுரீசுவரர் கோவில்

இளம் கன்றாகத் தோற்றமளிக்கும் பால நந்தீசுவரர்

பால நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும் போது பால் நீல நிறமாகும் அதிசயம்

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலத்தில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது தென்பொன்பரப்பி என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் சொர்ணபுரீசுவரர். இறைவியின் திருநாமம் சொர்ணாம்பிகை. இத்தலத்து இறைவன் ஸ்ரீகாகஜண்ட சித்தரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். ஸ்ரீகாகபுஜண்ட சித்தருக்கு பிரதோஷ காலத்தில் இறைவன் காட்சி கொடுத்ததால், இவ்வாலயம் பிரதோஷ ஆலயமாக அமையப் பெற்றுள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள நந்தியானவர், மிகவும் இளைய கன்றுக்குட்டியின் தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். பெரும்பாலான சிவாலயங்களில் உள்ள நந்தி வயது முதிர்ந்தது போலவும், முகமோ அல்லது தலையோ ஏதேனும் ஒரு பக்கமாக சாய்ந்தது போலவும் காணப்படுவது இயல்பு. ஆனால் இங்குள்ள நந்தியானது, இளங்கன்றாக இருப்பதால் இவருக்கு பால நந்தி என்று பெயர். இவர் பால நந்தியாக இருப்பதால், பிரதோஷ காலங்களில் கொம்புகள் இடையூறின்றி நேரடியாக நாம் சொர்ணபுரீசுவரரை தரிசிக்க முடியும்.

ஆவணி பவுர்ணமி மற்றும் பங்குளி உத்திரத்தில் காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள், பாலநந்தியின் இரு கொம்புகளின் வழியே சூரிய ஒளி இரு கோடுகளாக இறங்கி கரப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தில் படிவது ஒரு அற்புதமான காட்சியாகும்.

இங்குள்ள பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்யும்போது பால், நீலநிறமாக மாறிக் காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பிரார்த்தனை:

விவசாயம் செழிக்கவும், கடன் தொல்லை நீங்கவும், திருமணத்தடை நீங்கவும், ராகு கேது உள்ளவர்கள், களத்திரதோஷம், கால சர்ப்பதோஷம் உள்ளவர்கள், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அவரவர் பிறந்த நட்சத்திர தினத்தன்று ராகு கால வேளையில் பாலநந்தீஸ்வரருக்கு அபிஷேகம் செய்தால் தடைகள் நீங்கி நற்பலன்கள் கிடைக்கும்.

Read More
திருநந்திக்கரை நந்தீசுவரர் கோவில்

திருநந்திக்கரை நந்தீசுவரர் கோவில்

சிவபெருமானே நந்தியை பிரதிஷ்டை செய்த, பிரதோஷ கோவில்

நாகர்கோவிலில் இருந்து 32 கி.மீ. தொகையில் உள்ள நந்திக் கரைதிருநந்திக்கரை என்னும் ஊரில், நந்தியாறு கரையோரப் பகுதியில் அமையப் பெற்ற சிவத்தலம் நந்தீசுவரர் கோவில். 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற 12 சிவன் கோயில்களில் ஒன்றாகும். இக்கோவிலின் கருவறை மண்டபம் வட்ட வடிவில் காணப்படுகிறது. இக்கோவிலின் மூலவர் நந்தீசுவரர் ஆவார். சிவபெருமான் பார்வதியுடன், விநாயகரை மடியில் அமர்த்தியவாறு அருள்புரிகிறார். இந்தக் கருவறையை ஒருமுறை வலம் வந்தால், 52 வாரங்கள் அதாவது ஒருவருடம் கோவிலை வலம் வந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஒரு காலத்தில் காளை ஒன்று இந்த பகுதியில் அட்டகாசம் செய்து கொண்டிருந்தது. இதை அடக்க யாராலும் முடியவில்லை. ஊர்மக்கள் சிவன் சுயம்புலிங்கமாய் எழுந்தருளியிருந்த இக்கோவிலுக்கு வந்து காளையை அடக்கும்படி வேண்டினர். சிவபெருமான் அந்த காளையை இழுத்து வந்து ஒரு இடத்தில் இருத்திவைத்தார். காளையை சிவபெருமான் அடக்கி இழுத்துவந்தபோது அருகிலிருந்த ஒரு குன்றில் காளை தகராறு செய்தது. காளையின் கால் தடம் பதித்த இடம், கயிறு தடம் ஆகியவற்றை அந்த குன்றில் இப்போதும் காணலாம். காளை அமர்ந்த இடம் பள்ளமாகிவிட்டது. பள்ளத்தைவிட்டு எழ முடியாத அளவுக்கு காளையின் நிலைமை ஆகிவிட்டது. காளை அமர்ந்துள்ள இடம் ரிஷப மண்டபம் என அழைக்கப்படுகிறது. காலப்போக்கில் இதுவே நந்தியாக வணங்கப்பட்டது. இந்த நந்தி ஒரு பள்ளத்திற்குள் இருப்பதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரதோஷ நாட்களில் வழிபட சிறந்த கோவில்

சிவனே நந்தியை பிரதிஷ்டை செய்த இடம் என்பதால், திருநந்தீஸ்வரம் என இவ்வூருக்கு பெயர் வந்தது. சிவனே பிரதிஷ்டை செய்த நந்தி என்பதால், பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்ய, இந்தக் கோவிலை விட ஏற்ற கோயில் எதுவுமே இல்லை எனலாம். அறிந்தோ, அறியாமலோ கொலைப்பழி பாவம் ஏற்பட்டவர்கள் நந்தீஸ்வரரை வணங்கி மனம் திருந்தப் பெறலாம்.

இந்த கோயிலின் விசேஷமே நட்சத்திர மண்டபம் ஆகும். அசுபதி முதல் ரேவதி வரை உள்ள 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில், 27 கண துவாரங்கள் இம்மண்டபத்தில் உள்ளன. இந்த மண்டபத்தில் ஆண்டிற்கு 52 வாரங்கள் என்பதைக் குறிக்கும் வகையில் மண்டபத்தைச் சுற்றி 52 மரக்கட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கட்டைகளில் நட்சத்திரங்களின் அதிதேவதை உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தை 27 நட்சத்திரத்தை சேர்ந்தவர்களும் ஒரு தடவை சுற்றிவந்தால் ஒரு ஆண்டுகாலம் சிவன் கோயிலை சுற்றி வந்த பலன் கிடைக்கிறது.

சிவாலய ஓட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 12 சிவாலயங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றன. இவற்றை சிவாலய ஓட்ட கோயில்கள் என்கின்றனர். சிவராத்திரி திருநாளின்போது இந்த 12 கோயில்களுக்கும் ஓடியே சென்று வழிபடுவது பக்தர்களின் வழக்கமாக இருக்கிறது. இவற்றிற்கு இடையேயான தூரம் 100 கி.மீ., இப்போதும் பக்தர்கள் ஓடிச்செல்லும் வழக்கத்தை கைவிடாமல் வைத்திருக்கிறார்கள். இவற்றில் திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவிலும் ஒன்று.

சனி பிரதோஷம்

சனிக்கிழமையில் வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால் ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்று வந்த புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சாதாரண பிரதோஷ வழிபாடு தரும் பலன்கள் போன்று ஆயிரம் மடங்கு பலன் தரக்கூடியது இந்த சனி பிரதோஷம்.

Read More