நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

நாதன் கோவில் ஜெகநாதப் பெருமாள் கோவில் (நந்திபுர விண்ணகரம்)

மூலஸ்தானத்தில், பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தரும் நந்தியும், பிரம்மாவும்

தட்சிண ஜகந்நாதம் என்று போற்றப்படும் திவ்யதேசம்

கும்பகோணத்திற்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திவ்ய தேசம் நாதன் கோவில். பெருமாள் திருநாமம் ஜெகந்நாதன். தாயாரின் திருநாமம் செண்பகவல்லி. இத் திவ்ய தேசம் 'தட்சிண ஜகந்நாதம்' என்று அழைக்கப்படுகிறது.

இத்தல பெருமாள் கையில் வாள், வில், சக்கரம், தண்டாயுதம், சங்கு ஆகிய ஆயுதங்களுடன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சேர்ந்து அருள்பாலிக்கிறார். மூலஸ்தானத்தில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தியும், பிரம்மாவும் பெருமாளை வணங்கிய நிலையில் காட்சி தருவது இக்கோவிலின் தனிச்சிறப்பாகும்.

நந்தி சாப விமோசனம் பெற்ற தலம்

ஒரு சமயம் நந்தி தேவர் திருவைகுண்டம் வந்த பொழுது, அங்கு காவலாக இருந்த துவாரபாலகர்களின் அனுமதி பெறாமல் உள்ளே நுழைய முயன்றார். அவர்கள் தடுத்தபோது அதை பொருட்படுத்தாமல் உள்ளே சென்றார். இதனால் கோபமடைந்த துவாரபாலகர்கள், நந்தி தேவரின் உடல் முழுதும் வெப்பம் ஏறி சூட்டினால் துன்பமுறுவாய் என்று சாபமிட்டனர். சாப விமோசனத்திற்காக சிவபெருமானிடம் தீர்வு கேட்டார். அதற்கு சிவபெருமான், 'சகல விதமான பாவங்களையும் போக்கும் செண்பகாரண்யம் எனும் தலம் கும்பகோணத்திற்குத் தெற்கே அமைந்துள்ளது. அங்கு போய் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்து விமோசனம் பெற்றுக்கொள்' என்றார். அதன்படி நந்தி தேவர் இத்தலத்திற்கு வந்து தவம் செய்து, சாப நிவர்த்தி பெற்றார். அத்துடன், தான் இங்கு வந்து தவம் செய்து பேறு பெற்றமையால், தன் பெயராலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்று அருள் பெற்றார். அதன் பிறகு இத்தலம், நந்திபுரம் என்றும், நந்திபுர விண்ணகரம் என்றும் பெயர் பெற்றது. நந்தி சாப விமோசனம் பெற்ற தலம் என்பதால் சன்னதி, ஊர், தீர்த்தம் என அனைத்தும் நந்தியை முதன்மைப்படுத்தியே அமைந்திருக்கின்றது. இந்த தலத்தின் குளத்திற்கு நந்தி தீர்த்தம் என்றும், விமானத்திற்கு நந்தி விமானம் என்றும் அழைக்கப்படுகின்றன.

சிபிச் சக்கரவர்த்திக்குப் பெருமாள் காட்சி தந்து அருளிய தலமாகும். தன்னிடம் வந்து அடைக்கலமான புறாவின் எடைக்குச் சமமாக, தானே தராசின் மறு தட்டில் அமர்ந்து தன்னை காணிக்கை ஆக்கிய சிபிச் சக்கரவர்த்தியைக் காண பெருமாள் அவருக்கு காட்சி அளித்தார். இதற்காக கிழக்கு நோக்கி இருந்த பெருமாள் மேற்கு நோக்கி திரும்பினார். காளமேகப் புலவர் இவ்வூரில் அவதரித்தவர்.

சந்திர தோஷ பரிகார தலம்

நந்தி சாபம் விலகி தலம் என்பதுடன், சந்திர தோஷ பரிகார தலமாகவும் இக்கோவில் உள்ளது. சந்திர தோஷம் நீங்க, வேண்டியது நிறைவேற, திருமணத் தடை நீங்க, வழக்குகளில் வெற்றி பெற, குழந்தை வரம் கிடைக்க, பிரிந்த தம்பதி ஒன்று சேர, நரம்பு நோய் நீங்க பக்தர்கள் இப்ப பெருமாளிடம் வேண்டிக் கொள்கின்றனர்.

Read More