காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்

பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அபூர்வக் கோலத்தில் காட்சி தரும் முருகப்பெருமான்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள தலம் காங்கயம்பாளையம். இத்தலத்தில் காவேரி ஆற்றின் காவிரியின் நடுவில், நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்திருக்கிறது. பாவம் நீக்கும் புண்ணியம்பதியாம் ராமேஸ்வரத்துக்கு இணையான சிறப்பு இந்தத் தலத்துக்கும் உண்டு என்கிறார்கள் பக்தர்கள். நீர் சூழ்ந்த ராமேஸ்வரம் தீவைப் போன்றே, இங்கும் சிவபெருமான் காவேரி ஆறு சூழ்ந்த பகுதியில் கோயில் கொண்டிருக்கிறார்.

ஒரு சமயம், கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான் - பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன் செய்ய சிவபெருமான் அகத்தியரை தென்புலம் அனுப்பினார். அத்துடன், வேறு சில அரும் பணிகளையும் அவரிடம் ஒப்படைத்தார். அப்பணிகள் ஐந்து என்றும், அவற்றில் இரண்டாவது, நட்டாற்றீஸ்வரர் திருத்தலத்தை உருவாக்குவது என்றும் தெரிவிக்கின்றன புராணங்கள்.

தென்புலம் வந்த அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள, காவிரி நதி நீர் ஓடும் பாதையின் மையப்புள்ளியில் மணல் லிங்கம் அமைத்து,சிவ பூஜை செய்தால் தன்னுடைய பாவங்கள் நீங்கும் என எண்ணினார். காவிரி நதி நீர் பாதையின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகப்பெருமான் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து நடு இடத்தைத் சுட்டிக் காட்டினார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் வகையில்தான், இக்கோவிலில் முருகப்பெருமான், தெற்கு நோக்கிய பிரமச்சாரியாக வலது காலை முன்வைத்தும் இடக்காலை பின் வைத்தும் நடப்பது போன்ற பாவனையில் பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் அருட்கோலத்தில் காட்சி தருகிறார். முருகப்பெருமானின் இந்தக் கோலம் , வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம் ஆகும்.

கிளி ஏந்திய முருகப்பெருமான்

மேலும் முருகப் பெருமான் தனது இடக்கரத்தில் கிளி ஒன்றை வைத்திருக்கிறார். பொதுவாக நாம் ஒருவரைச் சந்திக்கும்போது மங்கலப் பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். அந்த வகையில்தான் முருகப் பெருமான் அகத்தியரை சந்திக்கும் போது தன்னுடன் கிளியை எடுத்துக் கொண்டு சென்றார் என்று குறிப்பிடுகிறார்கள்.

Read More
காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர்  கோவில்

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்

ஆருத்ரா தரிசனத்திற்கு, காவிரியாற்றில் பரிசலில் பவனி வரும் நடராஜப்பெருமான்

மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர நாளில், எல்லா சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறும். திருவாதிரை நட்சத்திர தினத்தில் செய்யப்படும் மகா அபிஷேகத்தையும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தையும் காண பக்தர்கள் குவிவார்கள்.

ஆருத்ரா தரிசனம் கண்டால், எல்லா பாவங்களும் நீங்கி, நீங்கா புண்ணியம் பெற்றிடலாம். பொதுவாக எல்லா சிவாலயங்களிலும், நடராஜப் பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்கு வீதியுலா வருவது வழக்கம். ஆனால்,ஈரோடு மாவட்டம், காங்கயம்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள நட்டாற்றீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் சற்று வித்தியாசமாக நடைபெறுகிறது. இக்கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜப்பெருமான், பக்தர்களின் ஆருத்ரா தரிசனத்திற்காக, ஒரு பரிசலில் எழுந்தருளியும், அவருக்கு முன்னால் மற்றொரு பரிசலில் மேள வாத்தியங்கள் இசை முழங்கிக் கொண்டு செல்ல, காவிரி நதியில் கோவிலைச் சுற்றி வருவார்.

இரண்டு நிலைகளாக அமைந்திருக்கும் கோவில்

ஈரோட்டிலிருந்து கொடுமுடி வழியாக கரூர் செல்லும் வழியில் காங்கயம்பாளையம் அமைந்துள்ளது. இங்குதான் காவிரியின் நடுவில் நட்டாற்றீஸ்வரர் கோவில் கொண்டிருக்கிறார். கோவிலின் இருபுறமும் காவிரி ஆறு சுழித்துக்கொண்டு ஓடுகிறது. கோயிலுக்குச் செல்பவர்கள் வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் ஆற்றை பரிசலில் கடந்து சென்றுதான் தரிசனம் செய்து வர வேண்டும். இக்கோவில் இரண்டு நிலைகளாக அமைந்துள்ளது. மேல் தளத்தில் நட்டாற்றீஸ்வரரும், கீழ் தளத்தில் நல்லநாயகி அம்பாளும் அருள்கிறார்கள். இருவரும் விவாக கோலத்தில் அருள்வது விசேஷ அம்சம்.

கயிலையில் நிகழ்ந்த சிவபெருமான்-பார்வதி திருக்கல்யாணத்தைத் தரிசிப்பதற்காக எல்லோரும் கயிலையில் குவிந்துவிட, உலகின் வடபுலம் தாழ்ந்து தென்புலம் உயர்ந்தது. அதைச் சமன்செய்ய அகத்தியரை, சிவபெருமான்தென்புலம் அனுப்பினார். அந்தத் திருமணத்தைப் பார்க்க முடியாத அகத்தியருக்கு, சிவபெருமான் அவர் வேண்டிய தலங்கள்தோறும் திருமணக் காட்சி தந்து அருளினார். ஒரு சமயம், அகத்தியருக்கு அசுரஹத்தி தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க, காவிரியின் உற்பத்தி ஸ்தானம் முதல் கடலில் கலக்கும் முகத்துவாரம் வரையுள்ள காவிரி ஆற்றின் மையப்புள்ளியாக உள்ள இடத்தில் மணலில் லிங்கம் செய்து சிவ பூஜை செய்ய, பாவம் போகும் என அகத்தியர் உணர்ந்தார். காவிரி ஆற்றின் நடுவில் பூஜை செய்ய இடம் தேர்ந்தெடுக்க காவிரி ஆற்றங்கரையோரம் அகத்தியர் சென்ற போது முருகன் முன் வந்து அகத்தியரை அழைத்து வந்து காவிரியில் நடு இடத்தைத் தேர்ந்தெடுத்து காட்டினார். காவிரி ஆற்றின் நடுவில் இருந்த அந்தக் குன்றில் மணலில் லிங்கம் ஒன்றைப் பிடித்து வைத்து அகத்தியர் பூஜை செய்தார். காட்டில் விளைந்திருந்த கம்பை எடுத்து கையால் திரித்து மாவாக்கி, நீர் விட்டுக் காய்ச்சி இறைவனுக்குப் படைத்தார். அகத்தியரால் வணங்கப்பட்ட அந்த சிவலிங்கம் நடு ஆற்றில் குடி கொண்டதால், 'நட்டாற்றீஸ்வரர்' எனவும் அகத்தியரால் மண்ணால் பிடித்து வைத்து வணங்கப்பட்டதால், அகத்தீஸ்வரர் எனவும் அழைக்கப்பட்டார்.

பிராத்தனை

நட்டாற்றீஸ்வரரின் நல்லருளால், தம்பதிகளின் வாழ்வில் பிணக்குகள், பிரச்னைகள் நீங்கி தாம்பத்தியம் சிறந்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடல், வயிறு தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் வந்து வழிபட்டுச் செல்லும் தலமாக இது உள்ளது.

Read More