ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

ஒரக்காட்டுப்பேட்டை குணம் தந்த நாதா் கோவில்

உன்னத குணநலன்களை அருளும் இறைவன்

செங்கல்பட்டிலிருந்து சுமார் 8 கி.மீ.தூரத்தில் உள்ளது ஒரக்காட்டுப் பேட்டை குணம் தந்த நாதா் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இத்தலத்து இறைவனின் திருநாமம் தனிச் சிறப்புக்குரியது. இந்தத் திருநாமம், இறைவனுக்கு வேறு எந்த தலத்திலும் கிடையாது. இத்தலத்தின் முந்தைய பெயர்உறைகாடு. உறைகாடு என்றால் உறைவதற்கு அல்லது வாழ்வதற்கு வளமான பூமி என்பது பொருளாகும். இதுவே பின்னர் உறைக்காட்டுப்பேட்டை என்றாகி பின்னர் மருவி, ஒரக்காட்டுப்பேட்டை என்றானது.

இத்தலத்து இறைவன் தன் மீது உண்மை யான பக்தி கொண்டு வழிபடும் அன்பா்களுக்கு எட்டு வகையான குணநலன்களை அளித்து அவா்களை இறைநிலையான பேரின்ப நிலைக்கு உயர்த்துகிறார். இவரை வழிபட்டால், மனமது செம்மையாகும். சிந்தை தெளிவுறும். நல் வழியைத் தேர்ந்தெடுப்பதில் தடுமாற்றம் இருக்காது. மது, புகை முதலான தவறான பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அதன் காரணமாக பாதிப்புக்கு ஆளானோர், தொடர்ந்து 11 பிரதோஷ தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று, நெய் தீபம் ஏற்றி வேண்டிக்கொண்டு, ஈசனின் சந்நிதியில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டால், விரைவில் கொடுமையான தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவார்கள். தீய பழக்கங்களிலிருந்து விடுபடக்கூடிய மன உறுதியை அவா்களுக்கு அளிப்பார் குணம் தந்த நாதா் என்பது நம்பிக்கை. கருவுற்றிருக்கும் பெண்கள், தன் கணவருடன் சென்று ஒரக்காட்டுப்பேட்டைத் தலத்தில் அருளும் குணம்தந்த நாதரை தரிசித்து வழிபட்டால், நல்ல குணநலன்கள் கொண்ட மகவினை ஈன்றெடுப்பா் என்பது ஆன்றோர் வாக்காகும்.

பௌர்ணமியன்று கோவில் பிரகார வலம் - திருவண்ணாமலை கிரிவலம் செய்த புண்ணிய தரும்

திருவண்ணாமலை தலத்தில் மலையைச் சுற்றி அஷ்டலிங்கங்கள் அருள்பாலிப்பது போல், இத்தலத்திலும் எட்டு திசைகளிலும் திசைக்கு ஒன்றாக அஷ்ட லிங்கங்கள் அருள் பாலிப்பது சிறப்பான ஒன்றாகும். உடல்நிலை, வயோதிகம் மற்றும் இதரச் சூழல்களின் காரணமாக திருவண்ணாமலைக்குச் சென்று கிரிவலம் செல்ல இயலாத நிலையில் இருப்பவர்கள், 21 பெளர்ணமி தினங்கள் இந்தத் தலத்துக்குச் சென்று வலம் வந்து, குணம் தந்த நாதரையும், அம்பிகை திரிபுரசுந்தரியையும் வழிபட்டால், கிரிவலம் செய்த புண்ணியம் கிட்டும். பிறவியிலேயே பேச முடியாத நிலையிலிருந்த அன்பர் ஒருவர், 21 பெளர்ணமி தினங்கள் தொடர்ந்து வந்து குணம் தந்த நாதரை வழிபடுவது என்று தீர்மானித்து வழிபாட்டைத் தொடங்கினார். 7 பெளர்ணமி தினங்கள் வழிபாடு செய்த நிலையிலேயே அவருக்குப் பேச்சுத் திறன் வந்தது என்பது சமீப காலத்தில், இத்தலத்தில் நிகழ்ந்த அற்புதமாகும்.

Read More