அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்
முருகன், Murugan Alaya Thuligal முருகன், Murugan Alaya Thuligal

அழகாபுத்தூர் படிக்காசுநாதர் கோவில்

சங்கு சக்கரம் ஏந்திய முருகப்பெருமானின் அபூர்வத் தோற்றம்

கும்பகோணம் திருவாரூர் சாலையில் சுமார் ஏழு கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவாரத்தலம் அழகாபுத்தூர். இத்தலத்து இறைவன் திருநாமம் படிக்காசுநாதர். இறைவியின் திருநாமம் அழகம்மை. முருகப்பெருமான் இத்தலத்தில் சங்கு சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

ஒருசமயம் அசுரர்களின் தொல்லை அதிகரிக்கவே, தேவர்கள் தங்களை காக்கும்படி சிவனிடம் வேண்டினர். சிவன், அசுரர்களை அழிக்க முருகனை அனுப்பினார். அப்போது சிவனும், தேவர்களும் அவருக்கு பல ஆயுதங்களை கொடுத்தனர். திருமால் முருகனுக்கு தனது சங்கு, சக்கரத்தை கொடுத்தார். ஆயுதங்களுடன் சென்ற முருகன், அசுரர்களை சம்ஹாரம் செய்தார். இந்த நிகழ்வின் அடிப்படையில் இங்குள்ள முருகன் கேடயம், வில், அம்பு, சாட்டை, கத்தி, சூலாயுதம், வஜ்ரம் மற்றும் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். சங்கு, சக்கரமே இவரது பிரதான ஆயுதமாக இருக்கிறது. இந்திர மயில் மீது அமர்ந்த கோலத்தில் இருக்கும் இவரை, கல்யாணசுந்தர சண்முக சுப்பிரமணியர் என்று அழைக்கிறார்கள். இவரது திருவாசி ஓம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. வள்ளி தெய்வானை உடனிருக்கின்றனர். அருகில் மகாலட்சுமி சன்னதி இருக்கிறது. திருமாலின் ஆயுதங்களுடன் முருகனையும், அருகில் மகாலட்சுமியையும் ஒரே சமயத்தில் தரிசிப்பது அபூர்வம்.

திருமண, புத்திர தோஷம் உடையவர்கள் இத்தல முருகனுக்கு பால் பாயாசம் நைவேத்யம் படைத்து, பூஜை செய்து வழிபடுகிறார்கள். இதனால் இந்த தோஷங்கள் நீங்குவதாக ஐதீகம்.

Read More