உழக்கரிசி பிள்ளையார் கோவில்
விநாயகர், Vinayagar Alaya Thuligal விநாயகர், Vinayagar Alaya Thuligal

உழக்கரிசி பிள்ளையார் கோவில்

ஆங்கிலேயர் பிள்ளையாருக்கு கொடுத்த உழக்கரிசி மானியம்

திருநெல்வேலியில் இருந்து சுமார் 42 கி. மீ தொலைவில் உள்ள அம்பலவாணபுரம் என்ற ஊரில் உழக்கரிசி பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. கருவறையில் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் நான்கு கரங்களுடன் கருணை ததும்பும் திருமுகத்துடன் அழகாக காட்சி அளிக்கிறார்.

முற்காலத்தில் சிவபெருமான் பார்வதி திருமணத்தின் போது தாழ்ந்த தென் பகுதியை சமன் செய்ய அகத்திய முனிவர் பொதிகை மலை பகுதிக்கு வந்தார். அப்போது இந்த பகுதியில் பல தெய்வங்களை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

அப்போது அகத்தியர் பிரதிஷ்டை செய்து வணங்கிய பிள்ளையார்தான் இந்த உழக்கரிசி பிள்ளையார். ஆனால், காலப் போக்கில் இந்தப் பிள்ளையார் இருந்த இடத்தினை யாரும் கவனிக்காமல் விட்டு விட்டனர். இதனால் அவர் இருக்கும் இடம் தெரியாமல் போய் விட்டார்.

18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய ஆட்சியின் போது இந்த பகுதியில் ஒரு ஆங்கிலேய துரை வேட்டையாட வந்தார். அவர் இந்த வழியாக வரும் போது வெள்ளைக்கார துரையின் குதிரை கால் பட்டு மீண்டும் வெளிப்பட்டார் உழக்கரிசி பிள்ளையார். அப்போது குதிரையில் குளம்படி பட்டு பிள்ளையார் மீது ரத்தம் பீரிட்டது. இதை கண்ட வெள்ளைகாரர் அரண்டு போய் விட்டார். அந்த பிள்ளையாரின் ஆற்றலை உணர்ந்த அவர் உடனே அங்கிருந்த மக்களிடம் இந்த பிள்ளையாரை நீங்கள் முறைப்படி வைத்து வணங்குங்கள். நான் அதற்கு உதவி புரிகிறேன் என்று கூறினார். மக்கள் அந்த பிள்ளையாரை மீண்டும் பிரதிஷ்டை செய்து வணங்க ஆரம்பித்தனர்.

அந்த வெள்ளைக்கார துரை இந்த பிள்ளையாருக்கு மானியமாக தினமும் உழக்கு அரிசி கொடுக்க உத்தரவு பிறப்பித்தார். ஆகவே இந்த பிள்ளையாருக்கு'உழக்கரிசி பிள்ளையார்' என்று பெயர் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இவரை வணங்கும் பக்தர்களுக்கு கருணைக் கடலாய் அருள்புரிவாராம் . ஆகவே இவருக்கு கருணை பிள்ளையார் என்ற பெயரும் வந்தது.

Read More