அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில்

அந்தியூர் செல்லீஸ்வரர் கோவில்

இடதுபுறம் நாய் வாகனம் உள்ள அபூர்வ வீர காலபைரவர்

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அமைந்துள்ளது செல்லீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் செல்வாம்பிகை. மூலவர் செல்லீஸ்வரர் பராசரமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இக்கோவிலில் சோமாஸ்கந்த மூர்த்தம் வடிவில் அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் இடையில் முருகன் அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்ததாகும்.

இங்கு எழுந்தருளி இருக்கும் வீர கால பைரவர் மிகவும் பிரசித்தி பெற்றவர். பொதுவாக பைரவர், தன் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும் நாய் வாகனத்துடன் காட்சி அளிப்பார். ஆனால் இத்தலத்தில் வீர காலபைரவரின் நாய் வாகனம் இடதுபுறம் நோக்கி இருப்பது தனிச்சிறப்பாகும். கொங்கு மண்டலத்தில் மிகவும் பழமைவாய்ந்த, பிரசித்தி பெற்ற பைரவ தலங்களில் இக்கோவிலும் ஒன்றாகும். இக்கோவிலில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர், பைரவி திருவுருவம் உற்சவ மூர்த்தியாக அமைந்துள்ளது. ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் அன்னை பைரவிக்கும் வருடாவருடம் வட்சார்ச்சனை நடந்து வருகிறது.

பிரார்த்தனை

சக்தி வாய்ந்த வீர காலபைரவர், மனிதனுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான துஷ்ட சக்திகளை போக்ககூடியவர். எதிரிகளை அழிக்ககூடியவர். பைரவரைக் காலை நேரத்தில் வழிபட்டால் நோய், நொடிகள் நீங்கும். பகல் வேளையில் தொழுதால் நாம் விரும்பியது கிடைக்கும். அந்திசாயும் நேரத்தில் வழிபாடு செய்தால், பாவங்கள் விலகும். அர்த்த சாமத்தில் வழிபட்டால் மனசாந்தியும், கல்வி கேள்விகளில் தேர்ச்சியும், வளமான வாழ்வும் அமையும்.

Read More