அதம்பார் கோதண்டராமர் கோவில்
பெருமாள், Perumal Alaya Thuligal பெருமாள், Perumal Alaya Thuligal

அதம்பார் கோதண்டராமர் கோவில்

ராமாயண நிகழ்வுகளுடன் தொடர்புடைய அதம்பார் தலம்

அதம்பார் கோதண்டராமர் கோவில், திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவில் உள்ளது.

பஞ்ச ராம க்ஷேத்திரங்களில் இத்தலமும் ஒன்றாகும். மற்ற நான்கு பஞ்ச ராம க்ஷேத்திரங்கள் தில்லை விளாகம் (வீர கோதண்ட ராமர்) , வடுவூர் கோதண்ட ராமர் (வில்லேந்திய அழகிய ராமன்), பருத்தியூர்(ஸ்ரீ ராமர்), முடிகொண்டான்(ராமர் கிரீடத்துடன் காணப்படுவதால் முடி கொண்டான்) ஆகியவை ஆகும்.

பொதுவாக ராம, சீதா, லட்சுமண விக்ரகங்கள் தனித்தனியாக ஒரு பீடத்தில் அமர்த்தப்பட்டிருக்கும். இங்கு மூவர் உருவமும் ஒன்றாக ஒரே பீடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

இடதுகையில் வில்லும், வலதுகையில் அம்பும் கொண்டு ராமர் நிற்கும் தோரணை நம்மை பரவசத்தில் ஆழ்த்தும். வேறு எங்கும் இப்படியான வடிவில் நாம் ராமனைப் பார்க்க முடியாது.

பக்கத்தில் சீதையும், லட்சுமணரும் இருக்க, ராமர் திருவடி கீழ் வாய் பொத்தி உத்தரவு கேட்கும் பணிவான தோற்றத்தில் தாச ஆஞ்சநேயர்.

ராமர் சம்பந்தப்பட்ட ராமாயண நிகழ்வுகள் நடந்த ஊர்கள் இத்தலத்திற்கு அருகே இருக்கின்றன. சீதையிடமிருந்து ராமனைப் பிரிக்க, மாரீசன் பொன்மான் உருவில் பொய்மானாக வந்தான். அந்த மாயத் தோற்றத்தில் மயங்கிய சீதா, அதைப் பிடித்துத் தரும்படி கேட்டாள். 'வேண்டாம் இதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது' என்று ராமன் மறுத்தான். சீதையின் முகம் வாடிவிட்டது. 'அவள் ஆசையைக் கெடுப்பானேன்' என்று மனைவியின் மீதுள்ள அன்பின் பொருட்டு, மானைப் பிடிக்கச் சென்றான் ராமன். ஆனால், 'அது மானல்ல! மாரீசன்' என்று தெரிந்ததும், 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என்று அதைத் துரத்தினான். மான் பலவகையிலும் மறைந்து மறைந்து ஓடியது. இறுதியில் மானை நோக்கி ராமன் அம்பை எய்த இடம்தான் இந்த 'அதம்பார்' தலம்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டில்'ராமர் வில்லின் நாணை ஏற்றி இத்தலத்திலிருந்து மானை நோக்கி 'தம் ஹந்தும் கிருத நிச்சய; ஹதம் பார்' என்று உரைத்து அம்பை எய்தார் என்றும், "ஹதம் பார்"என்பதே பின்னர் திரிந்து "அதம்பார்" ஆயிற்று' எனவும் செய்தி உள்ளது.

அந்த அம்பு, பாய்ந்த சென்று மானைத் தைத்த இடம் இத்தலத்தை அடுத்துள்ள 'மாந்தை' (மான்+தை).

மான் அடிபட்டு ஓடிப்போய் உயிர்நீத்த இடம், மாந்தையை அடுத்துள்ள 'கொல்லுமாங்குடி'.

சீதைக்கு மாரீசன் பொன் மானாக வந்தது ''ஆஹா இந்த நல்ல மான் என்று சீதை மயங்கிய இடம் 'நல்ல மான் குடி' என்ற நல்லமாங்குடி.

ராமன் தன்னை பிடிக்க வருகிறான் என்று மாரீசன் வலப்பக்கமாக ஓடியது 'வலம் கை மான்'என்ற வலங்கை மான்.

தன் பாத அணிகலன்களை சீதை கழட்டிய அடையாளம் காட்டிய இடம்

ராவணன் சீதையை கடத்திச் சென்றபோது சீதை தனது ஆபரணமாகிய பாதகத்தை (பாத அணிகலன்) கீழே எறிந்தது 'பாடகச்சேரி'.

ராமன், லக்ஷ்மணனிடமிருந்து தாடகை தப்பி ஓடி ஒளிந்த இந்த இடம் தாடகாந்தபுரம்.

Read More