கணபதி அக்ரஹாரம் மகா கணபதி கோவில்

மயிலை வாகனமாகக் கொண்ட கணபதி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறிலிருந்து 9 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது கணபதி அக்ரஹாரம். ஒரு சமயம் இந்நாட்டில் ஏற்பட்ட கடும் பஞ்சம் நீங்க, கௌதம மகரிஷியால் பூஜிக்கப்பட்டு பஞ்சம் நீங்கிய காரணத்தால் இவ்விடத்தை 'அண்ணகோஷஸ்தலம்' என்று புராணங்கள் குறிப்பிட்டு இருக்கின்றன. இங்குள்ள மகா கணபதி ஆலயத்தில், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அளித்துக் காத்தருள்கிறார் மகா கணபதி. இந்த கிராமத்தில் பல குடும்பங்களுக்கு குல தெய்வமாகவும் விளங்குகிறார்.

பொதுவாக, முருகனின் வாகனமாகத்தான் மயில் கருதப்படுகிறது. ஆனால், இக்கோயிலில் உள்ள கணபதிக்கும் மயில்தான் வாகனமாய்த் திகழ்கிறது. எனவே, இந்தக் கணபதியை மயூரிவாகனன் என்றும் அழைக்கிறார்கள்.

ஒரு சமயம், அகத்திய முனிவர் தவத்திற்கு இடையூறாக இருந்த காவேரியின் 'சல சல' என்று நீர்கட்டத்தின் ஆரவார சப்தம், அவரை கோபம் அடைய செய்தது. அவருடைய தவவலிமையால் காவேரியை தனது கமண்டலத்தில் அடக்கிவிட, சோழ தேசமானது வளம் குன்றி, பஞ்சம் ஏற்பட்டு தேவ பூஜைகள் நின்று விட, தேவர்கள் எல்லாம் விநாயகப் பெருமானிடம் முறையிட விநாயகப்பெருமானும் காக்கை உருவம் ஏற்று கமண்டலத்தை தனது அலகால் தட்டிவிட காவேரியும் பெருக்கு எடுத்து சென்று எல்லா இடங்களிலும் பாய்ந்து மீண்டும் சோழ வளநாடு வளம் பெற்றது. அகத்திய மாமுனி தட்டி விட்ட காக்கையை பின்தொடர, அக்காக்கையே இவ்விடத் தில் விநாயகப்பெருமானாய் அவருக்கும், காவேரி தாய்க்கும் காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

வினோதமான விநாயக சதுர்த்தி பூஜை

இவ்வூரில் விநாயக சதுர்த்தியை கொண்டாடுவது சற்று வினோதமான வழக்கமாக உள்ளது. விநாயகர் சதுர்த்தியன்று இந்த ஊர் மக்கள், களிமண்ணில் பிள்ளையார் செய்து வீட்டில் வைத்து பூஜிப்பது கிடையாது. தங்கள் வீட்டில் செய்த கொழுக்கட்டை போன்ற நிவேதனப் பொருள்களை எடுத்துக் கொண்டு அனைவருமே மகா கணபதி ஆலயத்திற்கு வருகின்றனர். கோவிலில் தான் விநாயகர் சதுர்த்தி பூஜை, நிவேதனம் எல்லாம் செய்கின்றார்கள்.

 
Previous
Previous

திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோயில்

Next
Next

காங்கயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோவில்