குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில்

குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில் வைகாசி சிரசு திருவிழா

வேலூர் மாவட்டம், குடியாத்தம் என்னும் ஊரில் கௌவுண்டன்ய மகா நதியின் கரையில் அமைந்துள்ளது கெங்கைஅம்மன் கோவில். இக்கோவிலில் வைகாசி முதல் தேதி நடைபெறும் சிரசு திருவிழா, வேலூர் மாவட்டத்திலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மிகவும் பிரசித்தம். பல லட்சம் மக்கள் இந்த திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

சிரசு திருவிழாவின் பின்னணி வரலாறு

முன்னொரு காலத்தில் ஜமதக்கினி என்கிற முனிவர் தனது மனைவி ரேணுகாதேவி (கெங்கையம்மன்) மற்றும் மகன்களுடன் வாழ்ந்து வந்தார். தனது மனைவி கற்பு நெறியில் தவறிவிட்டாள் என்ற சந்தேகத்தின் பேரில் ஜமதக்கினி முனிவர் தனது மகன் பரசுராமனிடம் உனது தாயின் தலையை வெட்டி கொண்டு வா என ஆணையிட்டார். அப்போது ரேணுகாதேவி வெட்டியான் ஒருவரது வீட்டில் பதுங்கி கொண்டார். இதனை அறிந்த பரசுராமன் அங்குவந்து தனது தாயின் தலையை வெட்ட முயன்றார். அதனை தடுத்த வெட்டியானின் மனைவி சண்டாளச்சியின் தலையை வெட்டினார். பின்னர் தனது தாயின் தலையை வெட்டினார். பின்பு தனது தந்தையிடம் சென்ற பரசுராமன், உங்கள் கட்டளையை நிறைவேற்றி விட்டேன் என கூறினார். அப்போது ஜமதக்கினி முனிவர் தனது மகனிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். அதனை தருகிறேன் என கூறினார். அப்போது பரசுராமன் தனது தாயை உயிர்பித்து தருமாறு வேண்டினார். அப்போது ஜமதக்கினி முனிவர் ஒரு பாத்திரத்தில் புளித நீரை கொடுத்து இந்த தண்ணீரை கொண்டு வெட்டப்பட்டு கிடக்கும் உடலுடன் தலையை சேர்த்து வைத்து உயிர்ப்பித்து கொள் என்றார். இதனையடுத்து மகிழ்ச்சியில் திளைத்த பரசுராமன். வேகமாக சென்று உயிர்ப்பிக்கும்போது அவசரத்தில் சண்டாளச்சியின் உடலில் ரெணுகாதேவியின் தலையையும். ரேணுகாதேவியின் உடலில் சண்டாளச்சியின் தலையையும் வைத்து புளிதநீரை தெளித்தார். இதன்பின்னர் ரேணுகாதேவியும், சண்டாளச்சியும் உயிர் பெற்றனர். தனது மகனால் வெட்டப்பட்டு மீண்டும் உயிரபெற்ற கெங்கையம்மன், பிற்காலத்தில் உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் தாயாக இருந்து காத்து வருவதோடு, அவர்களுக்கு வேண்டிய வரங்களை தந்து அருள்புரிந்து வருகிறார்.

லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து பக்தர்கள் செலுத்தும் நேர்த்திக்கடன்

இந்த புராணத்தை கொண்டுதான் குடியாத்தம் கெங்கையம்மன் கோவியில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் ஒன்றாம் தேதி சிரசு திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அப்போது கெங்கையம்மன் கோவிலில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் உள்ள சண்டாளச்சியின் உடலில் பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடத்தப்படும்.

குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவினையொட்டி அம்மனுக்கு காப்பு கட்டிய நாள் முதல் பக்தர்கள் கோவிலில் கூழ் ஊற்றியும், மா விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்கள் நிறைவேறினால் அம்மனுக்கு தங்களால் இயன்ற அளவு தேங்காய் உடைப்பதாக வேண்டி கொள்வர். அதேபோல் அம்மன் சிரசு ஊர்வலம் தொடங்கியது முதல் சிரசு செல்லும் வழிநெடுகிலும் பக்தர்கள் மூட்டை மூட்டையாக தேங்காய்களை உடைத்து வேண்டுதல்களை நிறைவேற்றுவர். அதேபோல் கோவில் மண்டபத்தில் அம்மன் வீற்றிருக்கும்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் லட்சக்கணக்கான தேங்காய்களை உடைத்து வழிபடுவர். லட்சக்கணக்கான தேங்காய்களை பக்தர்கள் உடைத்து வழிபடுவதில் இருந்தே கேட்ட வரம் அருள்பவள் கெங்கையம்மன் என்பது நிரூபணமாகிறது.

இத்திருவிழா இன்று (14.05.2024) நடைபெறுகின்றது.

குடியாத்தம் கெங்கைஅம்மன் கோவில் வைகாசி சிரசு திருவிழா (2023)

 
Previous
Previous

திருப்பாச்சேத்தி திருநோக்கிய அழகியநாதர் கோவில்

Next
Next

தீர்த்தகிரி வடிவேல் சுப்ரமணியர் கோவில்