கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்

அங்க குறைபாடுகளை நீக்கும் தலம்

'மானிடராய்ப் பிறத்தல் அரிது. அதனினும் அரிது கூன், செவிடு, குருடு இன்றிப் பிறத்தல்' என்று தமிழ் மூதாட்டி அவ்வையார் பாடியிருக்கிறார். அதாவது மனிதன் உடலில் ஏதாவது ஒரு குறை என்று இருப்பது தவிர்க்க முடியாதது என்று கூறியிருக்கிறார். உடலில் குறையோடு பிறந்தவர்களுக்கு அருளும் தலம் தான் கூனஞ்சேரி கயிலாசநாதர் கோவில்.கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை சென்றால், அங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கிறது கூனஞ்சேரி.

அஷ்டவக்ர கீதை

அஷ்டவக்ர கீதை, பகவத் கீதையைப் போல மகாபாரதத்தில் அமைந்திருக்கிறது.சுமார் முன்னூறு சுலோகங்கள் கொண்ட இந்த நூலை இயற்றியவர் அஷ்டவக்ர மகரிஷி. ரமண மகரிஷி, விவேகானந்தர் உட்பட பல மகான்கள், இந்நூலில் பொதிந்துள்ள நற் கருத்துக்களினால், இந்த நூலை ஞான பொக்கிஷமாக கருதுகிறார்கள்.

அஷ்டவக்ர மகரிஷியின் உடல் குறைபாட்டை நீக்கிய தலம்

முற்காலத்தில் தானவ மகரிஷி என்கிற முனிவர் இருந்தார். அவர் குழந்தை வரம் வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். சிவபெருமான் தானவ முனிவர்,தான் அறிந்த வேத மந்திரங்களைக் குழந்தைகளுக்குக் கற்பித்தால் மகப்பேறு வாய்க்கும் என்று அருளினார்.

அதன்படியே அவர், தன் வீட்டுத் திண்ணையில் குழந்தைகளுக்கு வேத மந்திரங்களைக் கற்பிக்கத் தொடங்கினார். அவருடைய மனைவியும் கருவுற்றார். தாயின் கருவில் இருந்தபடியே வேதங்களைக்கேட்டு, வேத ஞானத்தை அறிந்து கொண்டது குழந்தை. அதுதான் பின்னாளில் அஷ்டவக்ர மகரிஷியாக அவதரித்த திருக்குழந்தை. ஒருநாள், தானவ முனி வேதபாடம் நடத்திக் கொண்டிருந்தபோது, வகுப்பில் ஒரு மாணவன் தூங்குவதைக் கண்டு அவனை எழுப்பி, கடுஞ்சொற்களால் திட்டினார். அப்போது, அவருடைய மனைவியின் வயிற்றில் கருவிலிருந்த குழந்தை, 'இரவு பகல் என்று பாராமல் தொடர்ந்து இப்படி பாடம் நடத்திக்கொண்டிருந்தால், சிறு பாலகன் தூங்காமல் என்ன செய்வான்?' என்று கேள்வி கேட்டது. இதைக் கேட்ட முனிவர், அது தன் குழந்தை என்பதையும் மறந்து, 'பிறக்கும் முன்னரே, அதிகப் பிரசங்கித்தனமாக என்னைக் கேள்விகேட்ட நீ, கேள்விக்குறி போல வளைந்து, அஷ்ட கோணல்களுடன் பிறக்கக் கடவது!' என்று சாபமிட்டார். பின்னர் , தானவ முனிவரின் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தை, பன்னிரெண்டு வகை ஞானங்களையும் பெற்று, பிறவியிலேயே ஞானயோகியாகப் பிறந்தது. ஆனால், தந்தையின் சாபத்தால் உடலில் எட்டுவித கோணல்களுடன், முதுகில் கூன், கை கால்கள் வளைந்து நெளிந்து திகழப் பிறந்தது. எட்டு வளைவுகளுடன் அக்குழந்தையின் உடல் இருந்ததால், அக்குழந்தைக்கு அஷ்டவக்கிரன் என்ற பெயர் சூட்டினார்கள் அந்தக் குழந்தைதான் பிற்காலத்தில் அஷ்டவக்ர மகரிஷி என்ற பெயர் பெற்றது.

தான் கொடுத்த சாபத்தால் பாதிக்கப்பட்டு, தன் குழந்தை ஊனமாகப் பிறந்ததால் உண்டான வருத்தத்துடன் அரசவைக்குச் சென்ற தானவ மகரிஷி, அங்கே அரசவைப் புலவருடன் ஒரு வாதத்தில் தோற்க நேரிட்டது. இதனால் அவர் வீட்டுக்குத் திரும்ப முடியாமல் போனது.

சில வருடங்களில் நன்கு வளர்ந்த குழந்தை அஷ்டவக்ரன், தன் தந்தையைப் பற்றி தாயிடம் வினவினான். அவர், அரசவைப் புலவருடன் தன் கணவர் போட்டியிட்டுத் தோற்றுப் போன சம்பவத்தை மகனிடம் விவரித்தார். உடனே அரசவைக்குக் கிளம்பிப் போனான் அஷ்டவக்ரன். அங்குசென்று 'என் தந்தையுடன் யார் போட்டி போட்டது? அவரை என்னுடன் விவாதத்தில் பங்கேற்கச் சொல்லுங்கள்' என்று அந்த பாலகன் கூற, வியப்பின் உச்சிக்குப்போன அரசர், சிறுவனின் உறுதி கண்டு, விவாதப் போட்டி நடத்த சம்மதித்தார். பின்னர், ஆஸ்தான புலவருடன் போட்டி தொடங்கியது. அனைத்து விவாதங்களிலும்,அஷ்டவக்ரன் ஆஸ்தான புலவரை தோற்கடித்தான். அதிசயித்துப் போன மன்னர், பல பரிசுகள் வழங்கினார். பிறகு அஷ்டவக்ரன், தன் தந்தையை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினான். அவனின் கோணலான உடலமைப்பைக் கண்டு கண்ணீர் வடித்த தானவ மகரிஷி, 'தான் கொடுத்த சாபத்துக்கு விமோசனம் கிடையாதா?' என்று இறைவனிடம் முறையிட்டுப் பிரார்த்தனை செய்தார். சிவபெருமான், அவருக்கு 'கூனஞ்சேரி என்ற தலத்தில் இருக்கும் அஷ்ட பைரவ லிங்கங்களை பூஜை செய்து வந்தால், உன் மகனுடைய குறைகள் நீங்கும்' என்று அருள் வழங்கினார். இறைவன் அருளியபடி தந்தையும் மகனும் கூனஞ்சேரி வந்து, அஷ்ட லிங்கங்களைப் பூஜிக்க, அஷ்டவக்ரனின் கூனல் நிமிர்ந்தது; குறைபாடுகள் நீங்கியது. இதனால் இவ்வூருக்கு 'கூனல் நிமிர்ந்த புரம்' என்றும் பெயர் உண்டு'

அஷ்ட பைரவ லிங்க வழிபாடு

இக்கோவிலின் வெளிப்பிரகாரத்தில் அஷ்டாவக்கிரன் வழிபட்ட எட்டு லிங்கங்கள் உள்ளன. அவை பிருத்வி லிங்கம், அப்பு லிங்கம், அக்னி லிங்கம், வாயு லிங்கம், ஆகாச லிங்கம், சூரிய லிங்கம், சந்திர லிங்கம், ஆத்ம லிங்கம் ஆகியவை ஆகும். உடல் ஊனம், முதுகில் கூன் போன்ற குறைபாடுகளை உடையவர்கள், தேய்பிறை அஷ்டமி தினத்தில் இங்கே வந்து நல்லெண்ணெயால் அஷ்ட பைரவ லிங்கங்களுக்கு அபிஷேகம் செய்து, பின்பு விபூதியால் அபிஷேகம் செய்து எட்டு வகை மலர்களால் (மல்லி, முல்லை, வெள்ளை அரளி, சிகப்பு அரளி, பச்சை, மரிக்கொழுந்து, தாமரை, செவ்வந்தி) அர்ச்சனை செய்ய வேண்டும். இங்கே அபிஷேகம் செய்யப்படும் நல்லெண்ணெய் மற்றும் விபூதியை பக்தர்கள் வாங்கிச் சென்று, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊறவைத்துக் குளிக்க வேண்டும். பின்பு அபிஷேக விபூதியைப் பூசிக்கொள்ள வேண்டும்.. இதுபோல செய்துவந்தால், அவர்களின் உடல் குறைபாடு கொஞ்சம் கொஞ்சமாக நீங்கும் என்பது ஆதிகாலம் தொட்டுவரும் நம்பிக்கை. திருவண்ணாமலை சென்று கிரிவலம் வந்து, அங்கே இருக்கும் அஷ்ட திக்கு லிங்கங்களைத் தரிசிக்க முடியாதவர்கள், கூனஞ்சேரி வந்து இந்த அஷ்ட பைரவ லிங்கங்களை வழிபாடு செய்தால், அதே பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். உடல் குறைபாடு மட்டும் அல்லாது எந்தவித நோய்ப்பிணியும் இந்தக் கயிலாசநாதர் கோயிலுக்கு வந்தால் தீரும் என்பது நம்பிக்கை.

உடல் ஊனமுற்றோர், இளம்பிள்ளை வாதநோயால் பாதிக்கப்பட்டோர் இங்கு வழிபாடு செய்து பலனடைவது இத்தலத்தின் சிறப்பு.

அஷ்டவக்ர மகரிஷி

அஷ்ட பைரவ லிங்கங்கள்

 
Previous
Previous

தேப்பெருமாநல்லூர் விசுவநாத சுவாமி கோவில்

Next
Next

வழுவூர் வீரட்டேஸ்வர் கோவில்