கூறைநாடு புனுகீஸ்வரர் கோவில்

புனுகுப் பூனையாக பிறந்த இந்திரனுக்கு, சிவபெருமான் சாப விமோசனம் கொடுத்த தலம்

மயிலாடுதுறையின் ஒரு பகுதியாகத் திகழ்கிறது கூறைநாடு. முற்காலத்தில் இந்தப் பகுதி தனியூர் என்று அழைக்கப்பட்டது. இந்தப் பகுதியில் அமைந்துள்ளது புனுகீஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் சாந்த நாயகி. அறுபத்துமூன்று நாயனார்களில் ஒருவரான, சிவனடியார்களுக்கு ஆடைகள் தந்த தொண்டினை செய்த நேசநாயனார் அவதரித்த தலம் இது. 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.

அந்தக் காலத்தில் மயிலாடுதுறைக்கு மேற்கே அமைந்திருந்த இந்த வனத்தில் எண்ணற்ற புனுகுப் பூனைகள் வாழ்ந்து வந்தன. அங்கு வசித்த புனுகுப்பூனைகளில் ஒன்றிற்கு தன் முற்பிறவி ஞாபகம் வந்தது. அந்த புனுகுப்பூனை முற்பிறவியில் இந்திரனாக இருந்தது. அப்போது நடந்த தட்சனின் யாகத்தில் கலந்து கொண்டதால், புனுகுப்பூனையாக மாறும்படி சபிக்கப்பட்டான் இந்திரன். பின்னர் அவன் தன் தவறை உணர்ந்து இறைவனிடம் சாப விமோசனம் வேண்டினான்.

சிவபெருமான் விமோசனமாக இத்தலத்திற்கு சென்று வழிபடுமாறு கூறினார். புனுகுப்பூனையாக இங்கு பிறந்த இந்திரன், சிவன் அருளியபடி அந்த வனத்தில் உள்ள பவளமல்லி விருட்சத்தின் கீழ் சுயம்புவாக எழுந்தருளியிருந்த இறைவனை வழிபட்டான்.

தினமும் சிவலிங்கத் திருமேனி முழுவதும் நறுமணம் கமழும் புனுகினைப் பூசி வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக்கொண்டு வந்து இறைவனுக்குச் சமர்ப்பித்து வலம் வந்து வழிபட்டது. நெடுங்காலம் தொடர்ந்தது இந்த வழிபாடு புனுகுப்பூனையின் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் அதற்குத் தேவ வடிவம் கொடுத்து ஆட்கொண்டார்.

வில்வ தளங்களை வாயினால் கவ்வி எடுத்துக் கொண்டு வந்து சிவ பூஜை செய்யும் புனுகுப் பூனை

 
Previous
Previous

ஊட்டி சந்தைக்கடை மாரியம்மன் கோவில்

Next
Next

மணப்பாறை வேப்பிலை மாரியம்மன் கோவில்