கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில்

நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ள விஸ்வரூப லட்சுமி நரசிம்மர்

காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில், விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் பெருமாள் ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம்,யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல், பதினாறு அடி உயர திருமேனியுடன், லட்சுமி தாயாரை தன் மடியில் இருத்தி வீற்றிருக்கிறார். அவரின் மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் அருள்பாலிக்கிறார். பெருமாளின் வடிவமைப்பானது ஆறு அவதாரங்களையும், அவர் தாங்கி இருக்கும் ஆயுதங்கள் நான்கு அவதாரங்களையும் குறிப்பிடுகின்றது. கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது.

இந்த நரசிம்மருக்கு நெற்றியில் மூன்றாவது கண் அமைந்துள்ளது. மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் காட்சியளிக்கிறார்.

நவக்கிரக பரிகார தலம்

இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மருக்கு பன்னிரண்டு பற்கள் அமைந்திருக்கின்றன. இது இருபத்தி ஏழு நட்சத்திரங்கள் அடங்கிய பன்னிரண்டு ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால், இது ஒரு நவக்கிரக பரிகார தலமாக விளங்குகிறது.

 
Previous
Previous

முறப்பநாடு கைலாசநாதர் கோவில்

Next
Next

நாகப்பட்டினம் குமரன் கோவில்