அம்மன்

பார்வதிதேவி இந்து சமயத்தில் முப்பெரும் தேவியர் எனப் போற்றப்படும் பெண் தெய்வங்களில் ஒருவராவார்.இந்த மூன்று தெய்வங்களில்,சரஸ்வதி தேவி கல்வி கடவுளாகவும், லட்சுமி தேவி செல்வத்தை அருளுபவளாகவும்,பார்வதிதேவி வீரத்தை கொடுப்பவராகவும் போற்றப்படுகின்றனர்,பார்வதிதேவி,சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் துணைவியார் ஆவார்.விநாயகர்,முருகன் ஆகிய இருவரும் இவரின் பிள்ளைகளே ஆவார்கள்.
பார்வதிதேவி சிவபெருமானை அடைவதற்காக சிவபூஜை செய்த தலங்கள் பல உண்டு.அதுபோல சிவபெருமானிடம் மந்திரோபதேசம் பெற்ற தலங்களும்,தான் பெற்ற சாபத்திலிருந்து விமோசனம் பெற பசுவாகவும், மயிலாகவும் வடிவெடுத்து சிவ பூஜைசெய்த தலங்களும் இருக்கின்றன.பார்வதிதேவி மானிட ரூபமெடுத்து பாண்டியனின் மகளாக வளர்ந்து பின்னர் சிவபெருமானை கரம்பிடித்து ஸ்ரீமீனாட்சியாக அரசாண்ட தலம்தான் மதுரை..
இப்படி பல தலங்களில் பல கோலங்களில் காட்சி தரும் பார்வதி தேவியின் அருள் சிறப்பையும், அவர் காட்சிதரும் வடிவத்தின் சிறப்பம்சங்களையும் அறிய கீழே உள்ள ஆலய லிங்கைக் கிளிக் பண்ணவும்.
பனச்சிகாடு சரஸ்வதி தேவி
30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளுக்கு இடையே எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி
நவராத்திரியில் சரஸ்வதி தேவிக்கு குழந்தை வடிவ அலங்காரம்
கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில், கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையில், கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிக் காடு என்ற கிராமத்தில் அமைந்துள்ளது சரஸ்வதி கோவில். கேரளத்தின் மிகச் சிறந்த கோவில்களில் இது ஒன்றாகும். இக்கோவில் தட்சிண மூகாம்பிகை கோவில் என்று அழைக்கப்படுகிறது.
இங்கு எழுந்தருளி இருக்கும் சரஸ்வதி தேவி சுயம்புவாக தோன்றியவர். இந்த கோவிலில், சரஸ்வதி தேவிக்கு என்று தனி கருவறை கிடையாது. 30 அடி பள்ளத்தில், பசுமையான கொடிகளால் மூடப்பட்ட ஒரு சிறிய செவ்வக குளம் உள்ளது. சரஸ்வதி தேவியின் சிலை கொடிகளின் தோப்பிற்குள் அமைந்துள்ளது. குளத்தில் பாயும் புனித நீர் சிலையின் கால்களைக் கழுவுகிறது. இந்த நீரானது எப்போதும் வறண்டு போகாமல் பாய்ந்து கொண்டிருக்கிறது.
புகழ்பெற்ற நவராத்திரி திருவிழா இங்கு மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் ‘நவராத்திரி இசை’ விழாவைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். துர்காட்டமியில், சரசுவதி தேவியின் உருவத்திற்கு முன்பாக புத்தகங்கள் வைக்கப்படுகிறது. மேலும் விசயதசமியன்று காலையில், 'ஏசுதிரினிருத்து' அல்லது 'வித்யாரம்ப விழா' அதிகாலை 4 மணி முதல் முற்பகல் 11 மணி வரை சிறப்பாக நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான சிறு குழந்தைகள் அரிசியால் அவர்களின் நாக்கு அல்லது மணல் மேல், தங்க மோதிரத்துடன் 'அரிசிரீ' என்ற வார்த்தையை எழுதி, தங்களுடைய கல்வியினைத் தொடங்குகிறார்கள். குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு இங்கு பஞ்சாமிர்தம், பால்பாயாசம் செய்து படைத்து வழிபடுகிறார்கள்.
குழந்தை பிறக்கவும், அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுபவர்கள் குணமடைவதற்கும் இங்கு பிரார்த்திக்கிறார்கள். பாட்டு, இசை, நாட்டியம் போன்ற கலைகள் இங்கேயே கற்றுக் கொள்ள தொடங்கப்படுகின்றன. இங்கு வந்து வழிபட்டால் படிப்பில் மேலோங்கி நிற்கலாம் என்பது இங்கு வரும் பக்தர்களின் நம்பிக்கை.
சரஸ்வதி சூக்தம் விதி தவறாமல் ஜபம் செய்து உருவாக்கிய சுத்தமான நெய், இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. புத்திக்கும், படிப்பிற்கும் இந்த பிரசாத நெய், மிகவும் உன்னதமானது. நவராத்திரியின்போது, சரஸ்வதியை குழந்தையின் வடிவில் அலங்காரம் செய்து பூஜை செய்யப்படுகிறது.
தில்லை காளியம்மன்
வெள்ளை புடவை மட்டுமே அணியும் காளியம்மன்
சிதம்பர நடராஜர் கோயிலில் இருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது தில்லை காளி கோவில். தமிழகத்தில் இருக்கும் அஷ்ட காளி கோவில்களில் தில்லை காளி கோவிலும் ஒன்றாகும். சிதம்பரத்தின் காவல் தெய்வமாக தில்லை காளியம்மனே திகழ்கிறார். சிவபெருமானை பிரிந்து, காளி தில்லை நகரத்தின் எல்லைக்குச் சென்று அமர்ந்ததன் பின்னணியில் ஒரு புராண நிகழ்ச்சி உள்ளது.
ஒரு சமயம் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் வந்தது. அப்போது பார்வதி தேவி, 'சக்தியில்லையேல் சிவனில்லை' என வாதாட, கோபமுற்ற சிவபெருமான் உக்கிர காளியாக உருமாறும்படி அவரை சபித்து விட்டார். இதனால் சாப விமோசனம் கேட்ட பார்வதி தேவியிடம், 'அசுரர்களை அழிக்கவே உன்னை உக்கிரகாளியாக மாற்றினேன். காளி உருவில் போரிட்டு அசுரர்களை அழிப்பாய். உன் கடமைகள் முடிந்த பிறகு தில்லை மரங்கள் சூழ்ந்த இடத்திலிருந்து என்னை நோக்கித் தவம் புரிவாயாக. தக்க தருணம் வரும்போது மீண்டும் என்னுடன் வந்து இணைவாய்' என்று உரைத்தார்.
காலங்கள் ஓடின. காளி தேவி அரக்கர்களை போரில் அழித்து வெற்றி பெற்றார். சிவபெருமானை அடையும் பொருட்டு கடுமையாக தவம் புரிந்தார். அதே நேரத்தில் சிதம்பரத்தில் பதஞ்சலி மற்றும் வியாக்ரபாத முனிவர்களுக்கு சிவபெருமான் ஆனந்தத் தாண்டவத்தை காட்டிக்கொண்டிருந்தார். இதனால் கோபம் கொண்ட காளி, 'இத்தனை காலமாக நான் தவம் புரிகிறேன். எனக்கு முதலில் காட்சி தராமல் உங்கள் பக்தர்களுக்குக் காட்சி தருவது என்ன நியாயம்? நானும் உங்களுடன் சேர்ந்து ஆடுகிறேன். யார் முதலில் ஆட்டத்தை நிறுத்துகிறார்களோ அவர்கள் தோல்வியுற்றவர்கள். அவர்கள் ஊர் எல்லையில் போய் அமர வேண்டும் என்று கூறி ஆடத் தொடங்கினர். தாண்டவத்தின்போது சிவபெருமானின் குண்டலம் கீழே விழ, அதை அவர் தனது கால்களில் எடுத்து தனது காதுகளில் மாட்டி ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார்.
பெண் என்பதால் சக்தியால் இந்த நடனத்தை ஆட முடியவில்லை. அதனால் தோல்வியுற்று, உக்கிரமாக ஊர் எல்லையில் போய் அமர்ந்தார். அப்போது அனைத்து தேவர்களும் திருமாலும், பிரம்மாவும் அவரை சாந்தம் அடையும்படி கேட்டுக்கொண்டனர். பிரம்மா அவரை நான்கு வேதங்களை குறிக்கும் வகையில் நான்கு முகத்துடன் உருமாறிக்கொள்ள வேண்டினார். அதைப்போலவே காளி பிரம்மசாமுண்டேஸ்வரியாக பிரம்மனை போலவே நான்கு முகங்களுடன் காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் ஒரு சன்னிதியில் உக்கிரமாக எட்டு கைகளோடு காட்சியளிக்கிறார். இன்னொரு சன்னிதியில் சாந்தமாக பிரம்ம சாமுண்டீஸ்வரியாகவும் காட்சியளிக்கிறார்.
தில்லை காளியம்மனுக்கு வெள்ளை புடவை மட்டுமே அணிவிக்கப்படுகிறது. தில்லை காளியன்னைக்கு தினமும் நல்லெண்ணையால் மட்டுமே அபிஷேகம் செய்கிறார்கள். வேறு அபிஷேகம் செய்தால் காளி குளிர்ந்து விடுவாளோ, அவள் குளிர்ந்தால் தீயவர்கள் பெருகிவிடுவார்களோ என்று அக்காலத்திலிருந்தே வேறெந்த அபிஷேகமும் செய்வதில்லை.உடம்பு முழுவதும் குங்குமம் காப்பிடுதல் செய்யப்படுகிறது. கண்கள் மட்டும் கருமை தீட்டப்பட்டுக் காட்சியளிக்கிறார். இந்த அம்மனை வழிபட்டால், நோய் நொடி தீரும், பிள்ளை வரம் கிட்டும், திருமணத்தடை விலகும். இத்தலத்திற்கு வந்து வழிபட்டால் செய்வினை, பில்லி சூனியத்தால் அவதிப்படுபவர்கள் அதிலிருந்து விடுபடுவார்கள், கடன் தொல்லையிலிருந்து மீள்வார்கள், எதிரிகள் தரும் இன்னல்களிலிருந்து விடுபட வழி தெரியாமல் தவிப்பவர்களுக்கு விடுதலை கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருநாகேஸ்வரம் கிரிகுஜாம்பிகை அம்மன்
தினமும் குழந்தை, இளம்பெண், பெண் என மூன்று வித தோற்றங்களில் காட்சி தரும் அம்பிகை
சரஸ்வதியுடனும், லட்சுமி தேவியுடனும் காட்சி அளிக்கும் அம்பிகை
கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருநாகேஸ்வரம். இறைவன் திருநாமம் நாகநாதசுவாமி. இத்தலத்தில் கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணிவாள் நுதல் அம்மை என இரண்டு அம்மன்கள் அருள்பாலிக்கிறார்கள்.
கிரிகுஜாம்பாள் அம்பிகை தனிச் சன்னதியில் தவக்கோலத்தில் காட்சியளிக்கின்றாள். கிரிகுஜாம்பிகையின் வலதுபுறம் வீணையைக் கையில் தாங்கி சரஸ்வதியும், இடதுபுறம் கரங்களில் தாமரை மலரைத் தாங்கி லட்சுமிதேவியும் இருக்கின்றனர் . கிரிகுஜாம்பிகை காலையில் சிறுமியாகவும், மதியத்தில் இளம் பெண்ணாகவும், மாலையில் தேவியாக, பெண்ணாகவும் அலங்கரிங்கப்படுகிறார்.
கிரிகுஜாம்பிகையின் திருவடிவம் சுதையால் ஆனது என்பதால் அபிஷேகம் செய்வதில்லை. புனுகுச் சட்டம் மட்டுமே சார்த்துகிறார்கள். மார்கழி மாதத்தில் 48 நாட்கள் புனுகு சட்டம் மட்டுமே சாற்றுவது வழக்கம். அந்நாட்களில் அம்பிகையை தரிசிக்க முடியாது. இந்நாட்களில் அம்பிகையின் சன்னதி முன்புள்ள திரைச்சீலைக்கே பூஜை நடக்கிறது. தை மாதத்தில் அம்பாளுக்கு, புனுகு காப்புத் திருவிழா நடைபெறும். தை கடைசி வெள்ளியன்று அம்மனது சன்னதி முன்மண்டபத்தில் அன்னம், காய்கறி, பழங்கள் போன்றவற்றை படைத்து சிறப்பு பூஜை நடைபெறும்.
இங்கு முத்தேவியரை வணங்கி, இவர்களை வழிபட குடும்பத்தில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது நம்பிக்கை. இத்தலம் ராகுவிற்கான பரிகார தலமாகவும் விளங்குகிறது.
திருப்புவனம் மின்னனையாள்
மின்னல் வேகத்தில் பக்தர்களுக்கு அருளும் அம்பிகை
மதுரை - மானாமதுரை சாலையில் 20 கி.மீ. தொலைவில், வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள தேவார தலம் திருப்புவனம். இறைவன் திருநாமம் புஷ்பவனேசுவரர். இறைவியின் திருநாமம் சௌந்தர நாயகி. பாண்டிய நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில், தேவார மூவராலும் பாடல் பெற்ற ஒரே பாண்டிய நாட்டு தலம் இதுவாகும். மோட்ச தீபம் ஏற்றி பித்ருக்களுக்கு முக்தி அளிக்கும் தலமாகப் போற்றப்படும் இத்தலம், தமிழகத்தில் காசியை விட வீசம் (பதினாறு பங்கு) அதிகம் புண்ணியம் கிடைக்கும் ஒரே தலம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இத்தலம், புஷ்பவன காசி, பிதுர் மோட்சபுரம், பாஸ்கரபுரம், லட்சுமிபுரம், பிரம்மபுரம், ரசவாதபுரம் எனவும் அழைக்கப்படுகிறது.
இத்தலத்து அம்பிகைக்கு ஸ்ரீ சௌந்தரநாயகி, மின்னனையாள், அழகிய மீனாள் என பல பெயர்கள் உண்டு. இந்த அம்பிகையின் சன்னதி, இறைவன் சன்னதிக்கு இணையாக, இறைவனுக்கு வலது புறம் அமைந்துள்ளது. அம்பாள் சன்னதிக்கு, கோவிலுக்கு வெளிப்பகுதியிலிருந்தே நேரடியாக வருவதற்கு வழியுண்டு. கருவறையில் அம்பிகை மின்னனையாள் நின்ற கோலத்தில் அபயமும், வரதமும் காட்டி நின்ற கோலத்தில் அருள்கிறாள். அம்மன் சந்நிதி கோஷ்டங்களில், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகியோரும் எழுந்தருளி இருக்கிறார்கள். தனது திருநாமத்திற்கு ஏற்ப, இத்தலத்து அம்பிகை மின்னனையாள், மின்னலைப் போல ஒரு கணத்தில் கேட்பவர்க்கு அருள் வழங்குகின்றாள்.
திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன்
வெங்கடாஜலபதியாகக் காட்சி தரும் திரிபுரசுந்தரி அம்மன்
திருக்கோடிக்காவல் எனும் தேவாரத்தலம் கும்பகோணம், ஆடுதுறைக்கு அருகேயுள்ள சூரியனார் கோவிலிலிருந்து 5 கி.மீ.தொலைவில் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் கோடீசுவரர். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி அம்மன்.
ஒரு சமயம், ஆழ்வார்கள், வெங்கடாஜலபதியின் தரிசனத்திற்காக, திருப்பதி சென்றார்கள். அங்கு வெங்கடாஜலபதி, அவர்களுக்கு காட்சி தரவில்லை, மாறாக, திருக்கோடிக்காவில் திரிபுரசுந்தரி அம்மன், நீங்கள் விரும்பும் தரிசனம் கொடுப்பாள், அங்கே செல்லுங்கள்' என்று அசரீரியாக உத்தரவு பிறந்தது. ஆழ்வார்களும், ஆவலுடன் புறப்பட்டு, திருக்கோடிக்காவை அடைந்தனர். ஊரை நெருங்கியபோது, காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அதைக்கடந்து வரமுடியாமல் ஆழ்வாராதிகள் சிரமப்பட்டபோது, அகத்திய முனிவர், அவர்கள் முன் தோன்றி, ஆலயத்திலுள்ள கரையேற்று விநாயகரை, மனதில் பிரார்த்தித்துக் கொள்ளும் படி கோரினார். அவர்களும் அவ்வாறே செய்ய, காவிரியில் வெள்ளம் குறைந்தது. ஆழ்வாராதிகள், கரையைக் கடந்து ஆலயத்தினுள் வர, அங்கு அம்பாள் அவர்களுக்கு வெங்கடாஜலபதியாக தரிசனம் தந்தருளினாள்.
அப்போது திருக்கோடிக்காவல் திரிபுரசுந்தரி அம்மன் கைகளில் இருந்த பாசமும் அங்குசமும் மறைந்து, சங்கும் சக்கரமும் இருந்தது. திருமாங்கல்யம் மறைந்து போய் கவுஸ்துப மணியாக மாறிப் போனது. மார்பினில் திருமகளும் நிலமகளும் குடி கொண்டு விட்டார்கள். செந்நிற பட்டாடை மறைந்து போய் பீதாம்பரம் மிளிறியது. அம்மன் நெற்றியில் மின்னும் குங்குமப் பொட்டுக்கு மாறாக கஸ்தூரி திலகம் பளிச்சிட்டது. மொத்தத்தில் பக்தனுக்காக அம்மன் திருப்பதி பெருமாளாக மாறி விட்டாள்.
இந்த வைபவம் இன்றும் திருக்கோடிக்காவலில் ஒவ்வொரு புரட்டாசி சனிக்கிழமையிலும் நடக்கிறது. அன்று நம் அனைவருக்கும் திரிபுரசுந்தரி வெங்கடாஜலபதியாகக் காட்சி தருகிறாள்.
மகாலட்சுமி ஈசனை வழிபட்ட அபூர்வமான தலம்
மகாலட்சுமியின் அம்சமாக எழுந்தருளி இருக்கும் சௌந்தரநாயகி அம்பிகை
சென்னையில் இருந்து புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கல்பாக்கத்தில் இருந்து தென்மேற்கில் 10 கி.மீ. தொலைவில், கல்பாக்கத்திற்கு அடுத்துள்ள பாலாற்றின் தென்கரையில் அமைந்துள்ள தலம் நத்தம் பரமேஸ்வரமங்கலம்.இத்தலத்து இறைவன் திருநாமம் செண்பகேஸ்வரர். இறைவியின் திருநாமம் சௌந்தரநாயகி. சுமார் ஆயிரத்து எழுநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது இக்கோவில்.
பாற்கடலில் தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் எடுப்பதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகிப் பாம்பைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது கடலுக்குள் இருந்து அதிக சக்திமிக்க ஆலகால விஷம் தோன்ற, அதை அருந்தி சிவபெருமான் அனைவரையும் காப்பாற்றினார். மேலும் ஆமை வடிவில் தாங்கி இருந்த மகாவிஷ்ணுவின் உடல் விஷத்தினால் நீலமானது. இதை அறிந்த மகாலட்சுமி சிவபெருமானிடம் முறையிட அவரோ "நீ பூலோகத்தில் பாலாற்றின் கரையில் உள்ள செண்பகவனம் என்ற பகுதிக்குச் சென்று தவம் இயற்றுக. யாம் பார்வதி பரமேஸ்வரனாய் காட்சி தந்து அருளுவோம்" என்றுரைத்தார். இதன்படி லட்சுமிதேவி பூலோகத்தில் இப்பகுதிக்கு வந்து ஒரு செண்பக மரத்தின் அடியில் இருந்த லிங்கத்தை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டாள். அதனால் மகாவிஷ்ணுவின் உடலில் இருந்த விஷம் அகன்றது.
இக்கோவிலில், ஒரு தனிசன்னிதியில் தெற்கு திசைநோக்கி அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகி சதுர்புஜநாயகியாக தாமரைப் பீடத்தின் மீது நின்ற திருக்கோலத்தில், மகாலட்சுமியின் அம்சமாக இங்கு எழுந்தருளி இருக்கிறாள். வழக்கமாக தனது திருக்கரங்களில் பாசம் அங்குசத்தை ஏந்தி காட்சி தரும் அம்பாள் இத்தலத்தில் மகாலட்சுமியைப் போல தனது திருக்கரங்களில் தாமரை மற்றும் நீலோத்பவ மலர்களை ஏந்தியவாறு காட்சி தருகிறாள். அம்பாளின் பாதத்தில் ஸ்ரீசக்கரத்தை தரிசிக்கலாம். இவ்வாலயத்தில் அம்பாள் ஸ்ரீசௌந்தர்யநாயகிக்கு முதல் ஆரத்தி முடிந்த பின்னரே இறைவனுக்கு ஆரத்தி நடைபெறுகிறது.
திருக்கருக்காவூர் கர்ப்பரட்சாம்பிகை
கருவை பாதுகாத்து சுகப்பிரசவம் அருளும் அம்பிகை
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள பாபநாசம் என்ற ஊரில் இருந்து 5 கி.மீ. தொலைவில் (தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் ஆகிய இரு இடங்களிலிருந்தும் 20 கிலோமீட்டர்) அமைந்துள்ள தேவார தலம் திருக்கருக்காவூர். இறைவன் திருநாமம் முல்லைவனநாதர். இறைவியின் திருநாமம் கர்ப்பரட்சாம்பிகை. இத்தலத்து அம்பிகையை வணங்கினால் வயிற்றில் இருக்கும் கருவுக்கு பாதுகாப்பாக இருந்து கருசிதைவு ஏற்படாமல் காத்திடுவாள். அதுமட்டுமல்ல பல வருடம் குழந்தை செல்வம் இல்லாத ,டாக்டர்கள் கைவிரித்த தம்பதிகளுக்கும் குழந்தை செல்வம் அருளுபவள் இத்தல அம்பிகை. எனவே இந்த அம்பிகைக்கு 'கரு காத்த நாயகி' என்று பெயர். வடமொழியில் 'கர்ப்பரட்சாம்பிகை' எனப் பெயர். சுருங்கச் சொன்னால், இத்தலம் கரு,கருகாத ஊர் ஆகும்.
நிருத்துருவமுனிவரின் பத்தினி வேதிகை, கர்ப்பகாலத்தில் நேர்ந்த அயர்ச்சியால், அங்கு வந்த ஊர்த்துவபாத முனிவரை உபசரிக்க இயலாமல் போகவே, கோபம் கொண்ட முனிவர், அவளது கர்ப்பம் சிதையுமாறு சபித்தார். அதனால் துயரமுற்ற தம்பதியர்,இத்தலத்து இறைவனையும் இறைவியையும் சரணடைந்து துதிக்கவே, வேதிகையின் கரு சிதையாமல் அம்பாள் காத்து ரட்சித்தபடியால் கர்ப்பரட்சாம்பிகை என்று அழைக்கப்படுகிறாள். கருச்சிதைவுற்று மகப்பேறின்றி இருப்போர் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு மகப்பேறு அடைகின்றனர். அம்பாள் கர்ப்பரட்சாம்பிகையிடம் திருமணம் கூடிவர, குழந்தைப் பாக்கியம் உண்டாக, சுகப்பிரசவம் ஏற்பட பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.
குழந்தைப் பாக்கியம் கிடைக்க செய்யப்படும் பிரார்த்தனை
இத்திருக்கோவில் அம்பாள் சன்னதியில், நெய்யினால் படிமெழுகி கோலமிட்டு மீதமுள்ள நெய்யை அம்பாள் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து கொடுப்பார்கள். இந்த நெய் பிரசாதத்தை 1/2 கிலோ நெய்யுடன் கலந்து தம்பதியர் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். இக்கோயில் சோமாஸ்கந்தர் அமைப்பில் உள்ளதால், இத்திருக்கோயில் பிரகாரத்தை ஒரு சேர மூன்று முறை வலம் வரும் தம்பதிகளுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது வரலாறு.
சுகப்பிரசவம் ஏற்பட
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் அடைவதற்காக அம்பாள் திருவடியில் வைத்து, மந்திரித்து விளக்கெண்ணெய் தரப்படுகிறது. பிரசவ வலியேற்படும் காலத்தில் இதை வயிற்றில் தடவிவர, எந்தவிதமான கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவமாகும். கர்ப்பம் அடைந்தவர்களுக்கு எப்போதாவது அசாதாரண வலி தோன்றினால், அப்போது மந்திரித்த விளக்கெண்ணெய்யை வயிற்றில் தடவினால் வலி நின்று நிவாரணம் கிடைக்கும்.
தங்கத் தொட்டில் பிரார்த்தனை
குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கும், குழந்தைப் பேறு பெற்றவர்களுக்கும் நாட்டிலேயே முதல் முறையாக தங்கத் தொட்டில் பிரார்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள் நெய் மந்திரிக்கும்போது அம்பாள் பாதத்தில் உள்ள ஸ்கந்தரை தம்பதியர் பெற்றுத் தங்கத் தொட்டிலில் இடுவதும், குழந்தை வரம் பெற்றவர்கள் தங்கள் குழந்தையைத் தங்கத் தொட்டிலில் இடுவதும் இங்கு முக்கிய பிரார்த்தனையாகும்.
சிதம்பரம் சிவகாம சுந்தரி அம்மன்
முப்பெரும் சக்தியாக விளங்கும் சிவகாமசுந்தரி அம்மன்
சிவ பக்தர்களுக்கு கோவில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் கோவில் தான். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலமாக விளங்கும் இக்கோவிலின் மூன்றாவது பிரகாரத்தில், சிவகாம கோட்டம் என்று அழைக்கப்படும் தனி கோவிலில் அன்னை சிவகாம சுந்தரி அம்மன் அருள் பாலிக்கின்றாள். சிவகாம சுந்தரி அம்மன் என்றால், 'சிவனது அழகிய காதலியானவள்' என்று பொருள்படும்.
சிவகாம சுந்தரி அம்மன், இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளின் மகா சக்தியாகக் காட்சி அளிக்கிறாள். இச்சா சக்தி (விருப்ப சக்தி): இது விருப்பங்களையும், ஆசைகளையும், படைப்பாற்றலையும் குறிக்கும் சக்தி ஆகும். ஞான சக்தி (அறிவு சக்தி): இது அறிவையும், ஞானத்தையும், விவேகத்தையும் குறிக்கும் சக்தி ஆகும். கிரியா சக்தி (செயல் சக்தி): இது செயல்களையும், இயக்கத்தையும், படைத்தலையும், அழித்தலையும் குறிக்கும் சக்தி ஆகும்.
இக்கோவில் கருவறையில், பேரழகுத் தோற்றத்தில், சமபங்கம் எனும் சிற்ப நிலையில், சுமார் ஆறடி உயரத்தில், திருமுடி தாங்கும் கிரீடத்துடன், என்றும் வற்றாத அருட்கடல் போன்ற இமைக்காத ஈடிணையற்ற திருக்கண்களும், எள் பூ போன்ற நாசியில் (மூக்கில்) நத்து, புல்லாக்கு, மூக்குத்தி ஆபரணங்கள் மின்ன, முக மண்டலமே முழு நிறைவு தந்திடும் வகையில் அமைந்திட, வலது மேல் கையில் ஜபமாலை, வலது கீழ் கையில் செங்கழுநீர்ப்பூ, இடது மேல் கையில் கிளி கொஞ்சிட, இடது கீழ்க்கை ஒய்யாரமாக தொடையின் மீது படும்படியாக அமைய, தேவர்களும், முனிவர்களும் தஞ்சமடைய வேண்டுகிற - பாடகமும், கொலுசும் அலங்கரிக்கும் திருப்பாதங்களும் கொண்டு சிவகாம சுந்தரி அம்பிகை, பக்தர்களுக்கு நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
சிவகாம சுந்தரி அம்பிகையை வழிபட்டால் பதினாறு பேறுகள் கிடைக்கப் பெறலாம் என்பதை உணர்த்தும் வகையில் அம்பிகையின் கோவிலில் பதினாறு படிகள் அமைந்துள்ளன. அம்பிகையை மனதிற்குள் நினைத்து, குங்குமம், மஞ்சள், வளையல் அணிவித்து வழிபட்டு வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
பக்தனுக்காக மடப்பள்ளியில் சமையல் செய்த மீனாட்சி அம்மன்
அம்மனின் சக்தி பீடங்களில் முதன்மையானது என போற்றப்படுவது மதுரை மீனாட்சி அம்மன் கோவில். இந்த பீடத்திற்கு 'ராஜமாதங்கி சியாமள பீடம்' என்று பெயர். மீனாட்சி அம்மன் சிலை மரகதக்கல்லால் ஆனது.
மிகவும் பழைமை வாய்ந்த மதுரை மாநகரில், இறைவன் சொக்கநாதரும் அன்னை மீனாட்சியும் எழுந்தருளியிருக்கும் ஆலயம் குறித்த செய்திகள் பலவும், புராணங்களிலும் வரலாற்றிலும் காணப்படுகின்றன. மதுரை நகரைப் பற்றி 3000 ஆண்டுகளுக்கு முன் படைக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில் குறிப்பு உள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மகாவம்சம் என்ற நூலிலும் மதுரை பற்றிய தகவல் உள்ளது. மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் ரோமாபுரியை ஆண்ட அகஸ்டசிடம் தம் தூதரை அனுப்பிய வரலாறு உள்ளது.
அன்னை மீனாட்சியால் நடந்த அற்புதங்கள் ஏராளம். அந்த அற்புத நிகழ்வுகளுக்குச் சான்றாக இப்போதும் பல பொருள்கள், இடங்கள் உள்ளன. அனைவருக்கும் நம்பிக்கைக்குரிய நலமளிக்கும் தெய்வமாகவே அன்னை மீனாட்சி அருள்பாலிக்கிறார். தன் பக்தனுக்காக மீனாட்சி அம்மன் மடப்பள்ளியில் சமையல் செய்த அற்புத நிகழ்வை இப்பதிவில் காணலாம்.
ஒருகாலத்தில், மீனாட்சியம்மன் கோயில் மடப்பள்ளியில் ஸ்ரீநிவாசன் என்பவர் பணி புரிந்தார். மீனாட்சி அம்மன் மேல் தீவிர பக்தி கொண்டவர். அம்பிகைக்கு சமர்பிக்கப்படும் தினசரி நைவேத்திய உணவுகளை தயாரிப்பது அவர் வழக்கம். அன்னையின் அருளால், நைவேத்தியம் சமைப்பதைப் போலவே, அருந்தமிழில் கவிதை சமைக்கவும் திறன் பெற்றிருந்தார். அங்கயற்கண்ணியின் மீது அருந்தமிழில் பாடல்கள் இயற்றினார். ஒருநாள் இரவு உறங்கப் போவதற்கு முன் அவர், மறுநாள் அதிகாலையில் சமைக்க வேண்டியிருந்ததால், மீனாட்சி அம்மனை நோக்கி , 'என்னை சீக்கிரம் எழுப்பி விடம்மா' என்று சொல்லிவிட்டுப் படுக்கச் சென்றார். அயர்ந்து உறங்கிவிட்டார். உழைத்த களைப்பில் உறங்கும் குழந்தையை எழுப்ப எந்த அன்னைக்கு மனம் வரும்? ஸ்ரீநிவாசனை எழுப்பாமல், மீனாட்சி அம்மனே நைவேத்தியங்களை அவருக்கு பதிலாகச் சமைத்து வைத்தார். இரவில் சமைக்க வெளிச்சம் வேண்டுமல்லவா, அதற்காகத் தன் மூக்குத்தியை, கழற்றிவைத்தவள், உலகத்தவருக்கு ஸ்ரீநிவாசனின் பக்தியின் பெருமையை உணர்த்த அந்த மூக்குத்தியை தடயமாக அதை மடப்பள்ளியில் விட்டுப் போனாள்.
மறுநாள் காலையில் கோவில் சிப்பந்திகள் எழுப்பி விட்ட பிறகுதான் ஸ்ரீநிவாசன் எழுந்தார். தாம் பிரசாதங்கள் தயாரிக்காமல் உறங்கி விட்டோமே என்று பதைப்புடன் எழுந்தவருக்கு அங்கு பிரசாதங்கள் தயார் நிலையில் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் குழப்பமும் அடைந்தார்.
பின்னர் நைவேத்திய உணவு பொருட்கள் மீனாட்சி அம்மன் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு நைவேத்தியம் ஆனது. அதன் பின்னர் கற்பூர ஆரத்தி நடக்கும் போதுதான் அம்மனின் முகத்தில் மாணிக்க மூக்குத்தி இல்லாததைக் கண்டு கவலையும் பதட்டமும் அடைந்தார்கள். தொலைந்த மூக்குத்தியை தேடத் தொடங்கினார்கள். அப்போது அம்மன் சன்னதியில் ஒரு அசரீரி கேட்டது. 'யாரும் கவலைப்பட வேண்டாம். என் மகன் ஸ்ரீநிவாசன் உடல் அசதியால் என்னை எழுப்பச் சொல்லி விட்டு உறங்கச் சென்றான். அவனை காலையில் எழுப்பி விட நானே சென்றேன். அவன் அயர்ந்து உறங்குவதை கண்டு, அவனை எழுப்ப மனமில்லாமல் நான் மடப்பள்ளிக்குச் சென்றேன். மடப்பள்ளியில் வெளிச்சம் இல்லாததால் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்துவிட்டு அதன் வெளிச்சத்தில் எனது நைவேத்தியங்களை நானே சமைத்தேன். குழந்தை உறங்குவதை கண்ட தாய் அவனை எழுப்புவாளோ? அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது. மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள். அங்கு எனது மூக்குத்தி இருக்கும்' என்று அசரீரி ஒலித்தது. மீனாட்சி அம்மனின் திருவிளையாடலை நினைத்து அங்கிருந்த அனைவரும் பரவசம் அடைந்தனர்.
விஷ்ணு சொரூபமாக எழுந்தருளி விளங்கும் திருவையாறு தர்மசம்வர்த்தினி
வெள்ளிக்கிழமை இரவுகளில் மகாலட்சுமி தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்கும் வித்தியாசமான சம்பிரதாயம்
தஞ்சாவூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் திருவையாறு ஐயாறப்பர் கோவில். இத்தலத்து இறைவிக்கு தர்மசம்வர்த்தனி என்று பெயர். மேலும் இந்த அம்பிகைக்கு, அறம்வளர்த்தநாயகி, தர்மாம்பிகை, காமக்கோட்டத்து ஆளுடைநாயகி, உலகுடைய நாச்சியார், திரிபுரசுந்தரி என்றெல்லாம் பெயர்கள் உண்டு. அம்பிகையின் சக்தி பீடங்களில் இத்தலம், தர்ம சக்தி பீடமாகப் போற்றப்படுகிறது.
இத்தலத்து அம்பிகை அறம்வளர்த்தநாயகி, தனி கோவிலில் கிழக்கு நோக்கி எழுந்தருளி இருக்கிறாள். நின்ற கோலத்தில் இருக்கும் அம்பாள், இங்கே விஷ்ணு சொரூபிணி. நான்கு திருக்கைகள் கொண்ட அம்பிகை தனது மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், வலக் கீழ்க்கரம் அபய ஹஸ்தம் காட்டியும் இருக்கின்றாள். இடக் கீழ்க்கரம் தொடையைத் தொட்டு ஊன்றியபடி, மஹாவிஷ்ணு ஊன்றியிருப்பாரே, அதேபோல வைத்தபடி தரிசனம் காட்டுகிறாள். திருமாலின் அம்சமாக, அம்பிகை தனது கோலத்தை இங்கே நின்று காட்சி தருகிறாள். அதனால், திருவையாறு எல்லைக்கு உட்பட்ட இடங்களில் திருமாலுக்குக் கோவில்கள் இல்லை.
அம்பாள், விஷ்ணு சொரூபம் என்பதால், இக்கோவிலில் இன்று அளவும் ஒரு வித்தியாசமான சம்பிரதாயத்தை கடைப்பிடித்து வருகிறார்கள். வெள்ளிக்கிழமை இரவுகளில், மகாலட்சுமி வந்து தர்மசம்வர்த்தனி சன்னதியில் நிற்க, தீபாராதனை நடைபெறும். அதாவது விஷ்ணுவைச் சந்திக்க,மகாலட்சுமி வந்திருக்கிறார் என்று ஐதீகம்.
அனைத்து நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் விதமாக இங்கே அஷ்டமி திதியில் அம்பாளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறது.
இத்தலத்தில் பெண்கள் தர்மம் செய்தால் அது இரட்டிப்பு பலன் தரும் என்பது நம்பிக்கை. ஒரு குடும்பத்தில் பெண்கள் செய்யும், தர்மமும், அறச்செயல்களுமே அக்குடும்பத்தைப் பல விதங்களில் கவசமாக நின்று காக்கிறது. எனவே அதன் அவசியத்தை பெண்களுக்கு உணர்த்தவே அம்பிகை இங்கு தர்ம சம்வர்த்தினியாகக் காட்சி அளிக்கிறாள்.
கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தரும் துர்க்கையின் அபூர்வ தோற்றம்
மயிலாடுதுறையிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள தேவார தலம் புஞ்சை(திருநனிபள்ளி) நற்றுணையப்பர் கோவில். இத்தலத்தில் மலையான் மடந்தை மற்றும் பர்வத புத்திரி என்ற இரண்டு அம்பிகைகள் அருள் பாலிக்கின்றனர். காவிரிநதி இங்கு,கிழக்கு முகமாக வந்து மேற்கு முகமாக திரும்பி செல்கிறது. இதனை பஸ்வமாங்கினி என்பர்.
பொதுவாக சிவாலயங்களில் சுற்றுச்சுவரில் எழுந்தருளி இருக்கும் துர்க்கை அம்மன் எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சி தருவாள். ஆனால் இத்தலத்தில் துர்க்கை அம்மன் கையில் மான் மற்றும் சிங்கத்துடனும் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். இந்த துர்க்கையின் காலடியில் அரிக்கண்டன், நவக்கண்டன் என்னும் இரண்டு வீரர்கள் தங்கள் சிரசை துர்க்கைக்கு காணிக்கையாக செலுத்தும் நிலையில் காணப்படுகிறார்கள். இதனால் இந்த துர்க்கைக்கு பலி துர்க்கை என்ற பெயரும் உண்டு.
திருமணத் தடை நீங்க ஆவணி மூலம் அன்று வளையல் கட்டி அம்பாளுக்கு பிரார்த்தனை
மயிலாடுதுறையில் இருந்து (மயிலாடுதுறை -மணல்மேடு சாலையில்) 8 கி.மீ. தொலைவில், காவிரி நதியின் வடகரையில் அமைந்துள்ள தேவார தலம் பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோவில். இறைவியின் திருநாமம் பெரியநாயகி. முற்காலத்தில் இத்தலத்தின் பெயர் திருஅன்னியூர்.
ஆடிப்பூரம், ஆவணி மூலம் நட்சத்திரத்தன்று திருமணத்தடை உள்ள பெண்கள், பெரியநாயகி அம்பாளுக்கு வளையல் கட்டி பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இதனால், விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
ரதிதேவி சிவனால் எரிக்கப்பட்ட தன் கணவன் மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக இத்தலத்தில் சிவனை எண்ணி தவமிருந்து வழிபட்டாள். மன்மதன் மீண்டும் உயிர்பெற்ற பிறகு இங்கு ரதியுடன் சேர்ந்து வழிபட்டான். எனவே பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க, மனக்குறைகள் நீங்க இத்தலத்தில் வேண்டிக் கொள்கிறார்கள்.
மூக்குத்தி, காது தோடு ஆகியவற்றை திருகாணியோடு அணிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட அம்பிகையின் திருமேனி
காஞ்சிபுரம் மாவட்டத்தில், திருக்கழுக்குன்றம் வட்டத்தில், செங்கல்பட்டில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது திருவானைக்கோயில் என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் வாலீஸ்வரர். இறைவியின் திருநாமம் பன்மொழியம்மை. பல நூற்றாண்டுகள் பழமையானது இக்கோவில். வானரங்களின் அரசனான வாலி வழிபட்டதால் இத்தலத்து இறைவனுக்கு வாலீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
இத்தலத்து அம்பிகை பன்மொழியம்மையின் திருமேனி, பெண்கள் அணியும் அணிகலன்கள் அனைத்தையும் அணிவிக்கும் வகையில் அமைந்துள்ளது ஒரு தனி சிறப்பாகும். அம்பிகையின் காதுகளில், காது தோடை திருகாணியோடு அணிவிக்கும் வகையில் காதுகளில் துவாரங்கள் அமைந்துள்ளன. அதுபோல் மூக்குத்தியும் திருகாணியோடு அணிவிக்கும் வகையில், அம்மனின் நாசியில் துவாரம் இருக்கின்றது. மேலும் அம்மனின் கால்களில் திருகாணியோடு கூடிய கொலுசும், இரு கைகளில் வளையல்களும் அணிவிக்க முடியும். இத்தகையே திருமேனி வடிவமைப்புடைய அம்பிகையை நாம் தரிசிப்பது அரிது.
காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் துர்க்கை அம்மன்
காசியில் நீராடிய பலன் அளிக்கும் தலம்
மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ளது பூந்தோட்டம் என்ற ஊரில் இருந்து இரண்டு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது ருத்ரகங்கை என்னும் கிராமம். இத்தலத்து இறைவன் திருநாமம் ஆபத்சகாயேஸ்வரர். இறைவியின் திருநாமம் பரிமளநாயகி. வேத காலத்தில் சிவன் ருத்ரன் என பெயர் பெற்றிருந்தபோது, ருத்ரனின் கங்கை இங்கு தங்கியதால் இவ்வூருக்கு ருத்ர கங்கை எனப் பெயர். இக்கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. கோச்செங்கட சோழனால் கட்டப்பட்ட மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று. இவ்வூரின் தென்புறம் உள்ள அரசலாற்றில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டால், காசியில் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கருவறையில் மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் பின்புறம் முருகப்பெருமானுடன் சிவபெருமானும், பார்வதியும் திருமண கோலத்தில் காட்சியளிக்கும் சிற்பம் உள்ளது. இந்த வடிவம் சோமாஸ்கந்தர் என்று அழைக்கப்படுகிறது. இந்த சிவபெருமானின் தலையில் கங்கையை காணலாம்.
கருவறை கோட்டத்தில் காளியின் ரூபத்தில் துர்க்கை எழுந்தருளி இருக்கிறாள். பொதுவாக மகிஷன் தலையில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் துர்க்கை அம்மன், இங்கு காளியின் வடிவில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருவது ஒரு தனிச்சிறப்பாகும். இந்த காளியானவள் தனது கரங்களில் உடுக்கை, பாசாங்குசம், திரிசூலம், கபாலம் ஆகியவற்றை தாங்கி இருக்கின்றாள்.
பக்தர்கள் நேர்த்திக்கடனாக தங்கள் புகைப்படங்களை காணிக்கையாக செலுத்தும் வினோத நடைமுறை
மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம்
இராணிப்பேட்டையிலிருந்து 23 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கலவை அங்காளபரமேஸ்வரி கோவில். மேல்மலையனூரை அடுத்து மயானக் கொள்ளைக்குப் புகழ்பெற்ற தலம் இது. அங்காளபரமேஸ்வரி குடிக்கொண்டிருக்கும் கருவறைக்கு முன் சயன கோலத்தில் அம்மன் உருவம் ஒன்று உள்ளது. இக்கோவிலில் பூசாரிகள் கிடையாது. அர்ச்சனை, அபிஷேகம் எதுவும் செய்யப்படுவதில்லை. இக்கோவிலில் சேவை செய்ய பிரார்த்தனை செய்த பக்தர்களே பிரசாதம் தருகிறார்கள். பிரசாதமாக பெருமாள் கோவில்களில் கொடுப்பது மாதிரி துளசி தீர்த்தம் கொடுத்து சடாரி வைக்கிறார்கள்.
இக்கோவிலின் தனிச்சிறப்பு வேறு எந்த கோவிலிலும் காணப்படாத ஒன்றாகும். திருமணப்பேறு, குழந்தைப்பேறு, கல்வி, தொழில் என பல்வேறு கோரிக்கைகளுக்காக வேண்டி செல்லும் பக்தர்கள், தங்கள் குறை நீங்கிய பிறகு, அதற்கு நன்றிக் கடனாக, காணிக்கையாக தட்டில் பழம், பூ மாலைகள் வைத்து அதில் தங்களின் படத்தினை சட்டமிட்டு ஆலயத்தினைச் சுற்றி வந்து ஆலய சுவரில் மாட்டி வைக்கின்றனர். இதுவே பக்தர்கள் அம்மனுக்குச் செலுத்தும் காணிக்கையாகும்.
இப்படி காணிக்கையாக செலுத்தப்பட்ட படங்கள் பல்லாயிரக் கணக்கில், இக்கோவிலில் இருக்கின்றது. கோட் போட்ட அங்கிள், கல்யாண கோலத்தில் தம்பதி, நடைவண்டி ஓட்டும் குழந்தை, சார்ட்சோடு விமானத்தில் எடுத்த செல்பி, பிளாக் அண்ட் வொயிட், லேமினேசன், பாஸ்போர்ட் சைஸ்ன்னு கோவில் வாசலில், சுவரில், கூரையில், ஸ்விட்ச் போர்ட் மேல் என்று இந்த கோவில் முழுக்க போட்டோக்கள் உள்ளன.
திருமேனியில் தாலிச் சரடுடன் காட்சிதரும் அம்மன்
திருச்சி நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது காளிகா பரமேஸ்வரி கோவில். இந்த அம்மன் அமர்ந்த நிலையில் தன் நான்கு கரங்களில் டமருகம், பாசம், சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தி காட்சி தருகிறாள். அம்மனின் கழுத்தில் திருமாங்கல்யம் துலங்குவது மிகவும் சிறப்பான அம்சமாகும். விக்கிரகத்தின் அமைப்பிலேயே தாலிச் சரடு இருப்பது வேறு எங்கும் காண இயலாத அற்புத அமைப்பாகும்.
இந்த அம்மனிடம் வேண்டிக்கொள்ளும் பெண்களுக்கு திருமணப்பேறு விரைவில் கிடைக்கிறது. திருமணம் நிச்சயம் ஆனதும் மணமகளின் தாலியை அன்னையின் பாதத்தில் வைத்து, அர்ச்சனை செய்து பெற்றுக் கொள்ளும் வழக்கம் இங்கு உள்ளது.
காளி தேவி சொரூபத்துடன் பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருக்கும் மாரியம்மன்
சமயபுரம் மாரியம்மனின் தங்கை
புதுக்கோட்டையில் இருந்து அண்டகுளம் எனும் ஊருக்குச் செல்லும் வழியில் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வைத்திகோவில் முத்து மாரியம்மன் கோவில். மக்களின் வழக்கில் கொன்னையூர் அம்மன், விராடபுரம் அம்மன், கண்ணப்புரம் அம்மன், சமயபுரம் மாரியம்மன், நார்த்தாமலை அம்மன், தென்னக்குடி அம்மன், வைத்திகோவில் முத்துமாரி அம்மன் ஆகிய ஏழு பேரும் சகோதரிகள் என்கிறார்கள். இவர்களில் கடைக்குட்டி வைத்திகோவில் முத்துமாரியம்மன்.
இங்கு அம்மன் காளி தேவி சொரூபத்துடன், பஞ்ச பூதங்களின்மீது அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த அம்மன் கன்னிப் பருவத்துடன் திகழ்வதாக ஐதீகம்.
குழந்தைப் பேறு இல்லாதவர்கள் முத்துமாரியின் சன்னிதிக்கு வந்து அர்ச்சனை செய்து, கரும்புத் தொட்டில் எடுப்பதாக வேண்டிக் கொண்டால் விரைவில் குழந்தை வரம் வாய்க்கும். திருமணத் தடை உள்ளவர்கள் அம்மனுக்குக் காப்பரிசி, பால், பட்டுப் பாவாடை மற்றும் தங்கத்திலோ வெள்ளியிலோ பொட்டு செய்து சமர்ப்பித்து வழிபட்டால், விரைவில் கல்யாணம் கைகூடும் என்பது ஐதீகம்.
ஆடிச் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகள் இங்கே விசேஷம். இந்த நாட்களில் அம்மனுக்குப் பாலபிஷேகம் செய்வதால், நமது இல்லத்தில் சகல சுபிட்சங்களும் பெருகும். இந்தத் தினங்களில் மஞ்சள், குங்குமம் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்ய மாங்கல்ய பலம் பெருகும்.இந்தக் கோவிலின் பங்குனித் திருவிழாவும், பூச்சொரிதல் வைபவமும் வெகு பிரசித்தம். விழாவின் 13 நாட்களும் அரிசியும் வெல்லமும் சேர்ந்த காப்பரிசிதான் அம்மனுக்கு நைவேத்தியம். மேலும் விழாவை யொட்டி, பழைமை மாறாமல் மண் சட்டியில் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றுவது இந்தக் கோவிலின் சிறப்பம்சம்.
காவேரி அன்னைக்கு நன்றி செலுத்தும் ஆடிப்பெருக்கு விழா
ஆடி மாதம் 18ம் தேதியை ஆடிப் பதினெட்டாம் பெருக்கு என்று தமிழக மக்கள் விமரிசையாக கொண்டாடுகிறார்கள்.பதினெட்டு என்ற எண் வெற்றியைக் குறிக்கும். மகாபாரதத்தில் 18 பர்வங்கள், பகவத்கீதையில் 18 அத்தியாயங்கள், சபரிமலையில் 18 படிகள் முதலானவை எல்லாம் இந்த அடிப்படையிலேயே அமைந்தன.
தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வரும் விழாக்களில், காவிரிக்கென பிரத்யேகமான விழாவாக ஆடிப்பெருக்கு விழா உள்ளது. பயிர் செழிக்க வளம் அருளும் காவேரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில்தான் இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை ஆற்றங்கரை மற்றும் நீர்நிலைகளின் கரைகளில் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
ஆடிப்பெருக்கன்று காவேரிக்கரையில் இளம் பெண்களும், புதுமண தம்பதிகள் மற்றும் திருமணமான பெண்கள் புத்தாடை உடுத்திக் கொண்டு பழங்கள், அவல், ஊறவைத்த இனிப்பு கலந்த அரிசி, புதிய மாங்கல்ய மற்றும் மஞ்சள் கயிறு, காதோலை கருகமணி ஆகியவற்றை வைத்து மஞ்சள் மற்றும் மணலால் உருவாக்கப்பட்ட பிள்ளையார் முன் படையல் செய்து வழிபடுவார்கள். தாலி பாக்கியம் நிலைக்க சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கு அன்று புது தாலி மாற்றிக் கொள்வர். இந்த நன்னாளில் புதுமண பெண்ணிற்கு தாலி பிரித்து கோர்ப்பர் . எந்த ஒரு புது மற்றும் நல்ல காரியங்களை ஆடிப்பெருக்கு அன்று ஆரம்பித்தால் , அந்த காரியம் மேலும் மேலும் பெருகும் என்பது ஐதீகம்.
காவேரித் தாயாருக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அளிக்கும் சீர்வரிசைகள்
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் அமைந்துள்ளது காவேரி அம்மன் கோவில். இங்குதான் கீழ் இரு கரங்களில் புனித கலசம் தாங்கி, மேலிரு கரங்களில் அக்கமாலையும் மலர்ச் செண்டும் தாங்கி நின்ற கோலத்தில் அருளுகிறாள் காவேரி அன்னை.
காவேரி அன்னை, ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் தங்கையாக கருதப்படுகிறாள். ஆடியில் காவேரித்தாய் கருவுற்றிருப்பதாக ஐதீகம். எனவேதான் தனது தங்கையான காவேரி யை காண ஸ்ரீரங்கம் ரங்கநாதர், சீர்வரிசையுடன் ஆடிப்பெருக்கு அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் உள்ள படித்துறைக்கு எழுந்தருள்வார். அன்று ஸ்ரீரங்கம் கோவிலிலிருந்து காவேரித் தாயாருக்கு சீர்வரிசைகளை யானைமீது கொண்டு வருவார்கள். அந்தச் சீர்வரிசைகளில் விதவிதமான மங்கலப் பொருட் கள், மாலைகள், புதிய ஆடைகள் ஆகியவற்றுடன் தாலிப்பொட்டு ஒன்றும் இருக்கும். இதனை அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் முன்னிலையில் அங்குள்ள காவேரித் தாயாருக்குப் படைத்து, காவேரி நதியில் சமர்ப்பிப்பார்கள்.
காவேரிக்கு பெருமாள் சீர்வரிசை அளிக்கும் காட்சியைக் கண்டால் `கோடி புண்ணியம்' கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்பின், பெருமாள் பல்லக்கில் ஏறி கோவிலை நோக்கிச் செல்வது வழக்கம். அன்று அம்மா மண்டபம் காவேரிப் படித்துறை விழாக்கோலம் காணும். பெருமாள் கோவிலில் நுழையும்போது, வெளியில் உள்ள ஆண்டாள் சந்நிதிக்கு முன் எழுந்தருள்வார். அங்கே ஸ்ரீஆண்டாளும் பெருமாளும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். இந்த அற்புதமான காட்சியை ஆடிப் பதினெட்டு அன்று ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும்பொழுது, தம்பதியர் தரிசித்தால் வாழ்வில் வசந்தம் வீசும். கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
ராமபிரான் அசுரர்களை வதம் செய்த பாவம் நீங்க, காவேரியில் நீராடிய நாள் ‘ஆடிப்பெருக்கு' என்று புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடிப்பெருக்கு விழா
தென்னிந்தியாவில் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படுகிறது, பவானி கூடுதுறை. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் ஆடிப்பெருக்கு அன்று அதிகாலையில் திறக்கப்படும். கூடுதுறையில் நீராடிவிட்டு பக்தர்கள், இறைவனை வழிபடுவார்கள். அம்மனுக்கு தேங்காய், பழம், பூ, காதோலை கருகமணி படைத்து ஆராதனை செய்வார்கள். பூஜையில் வைத்த மஞ்சள் சரடினை பெண்கள் கழுத்திலும், ஆண்கள் வலது கை மணிக்கட்டிலும் அணிந்து கொள்வர். இதனால் வீட்டில் மங்கள காரியங்கள் தடையின்றி நடைபெறும் என்பது நம்பிக்கை.
அட்சய திரிதியை தினத்தை விட, ஆடிப்பெருக்கு சிறப்பான நன்னாளாகும். இந்நாளில் நகை மட்டுமின்றி பிற பொருட்களும் வாங்கலாம். ஒருவர் செய்யும் நற்செயல்களால், எவ்வாறு புண்ணியம் பெருகுகிறதோ, அதுபோல் இந்த நாளில் தொடங்கும் எந்தக் காரியமும் நன்மை அளிக்கும் வகையிலேயே நிறைவு பெறும் என்பது நம்பிக்கை.
விவசாயம் செழிக்க நடைபெறும் மீனாட்சி அம்மன் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா
அர்த்தநாரீஸ்வரராக காட்சி தரும் மீனாட்சி அம்மன்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறும். இதனாலேயே 'ஏறிய சிவிகை இறங்காத பெருமாட்டி' என்று மீனாட்சி அம்மனை பெருமைப்படுத்தி சொல்லுவர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், மீனாட்சி அம்மனுக்கு மட்டும் உரிய திருவிழாக்கள் ஆடி முளைக்கொட்டு திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலை விழா, மார்கழி எண்ணெய் காப்பு ஆகியவை ஆகும்.
இந்த ஆண்டின் ஆடி முளைக்கொட்டுத் திருவிழா 27.7.2025 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 05.08.2025 (செவ்வாய்க்கிழமை) வரை நடக்கின்றது. ஆடி முளைக்கொட்டு விழா, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் முக்கியமான விழாக்களில் ஒன்றாகும். விவசாயிகள் ஆடி மாதம் விதை விதைத்து நாற்று நட்டு விவசாய பணிகளை மேற்கொள்வர். தங்கள் நிலங்களில் பயிர்கள் அமோக விளைச்சல் வேண்டி முளைக்கட்டு வைத்து இறைவனை வழிபாடு செய்வர். விவசாயம் செழிக்கவும், நாடு வளம் பெறவும் வகை செய்யும் ஐதீகத்தில் அமைந்ததே ஆடி முளைக்கொட்டுத் திருவிழாவாகும்.
10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நாட்களில், மீனாட்சி அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை, மாலை ஆகிய இருவேளை ஆடி வீதியில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிபார். திருவிழாவின் 6ஆம் நாளில், மீனாட்சி அம்மன் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வெள்ளி கிளி வாகனத்தில் எழுந்தருள்வது விசேஷமான ஒன்று.ஆடி முளைக்கொட்டு உற்சவத்தின் ஒன்பதாம் நாள் இரவு மீனாட்சி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தில் வலம் வருவார். மீனாட்சி அம்மன், சுவாமியின் ஜடாமகுட கீரிடம், திருமடல், அபய அஸ்தம் அணிந்து, வலது புறம் சிவனின் அம்சமாக வேட்டியும், இடது புறம் சக்தியின் அம்சமாக சேலையும் அணிந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி தருவது, இத்திருவிழாவின் தனிச்சிறப்பாகும்.
நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு நடத்தப்படும் தனித்துவமான ஆடிப்பூரத் திருவிழா
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தலைநகரான நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள தேவார தலம் காயாரோகணேசுவரர் கோவில் ஆகும். இறைவியின் திருநாமம் நீலாய தாட்சி. அம்பிகையை, பெண்ணின் ஐந்து பருவ நிலைகளில் சித்தரித்து வணங்கப்படும் ஐந்து அக்ஷித் தலங்களுள், இத்தலமும் ஒன்றாகும். இத்தலத்தில், நீலாயதாக்ஷி பூப்படைந்த கன்னியாக இருந்து அருள் பாலிக்கிறார். அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றான இத்தலம், நேத்திர (அம்பிகையின் கண் விழுந்த) பீடம் ஆகும்.
ஆடித் திங்களில் வரும் பூரம் நன்னாளில் தான் உமாதேவி அவதரித்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த உலகை படைத்தும், காத்தும் வரும் உமாதேவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதும் ஆடிப்பூரம் அன்றுதான்.
எல்லா கோவில்களிலும் ஆடிப்பூரத்தன்று அம்பிகைக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவது போல், நாகை நீலாயதாக்ஷி அம்மனுக்கு வளைகாப்பு நடத்தப்படுவதில்லை. அதற்கு காரணம் இந்த தலத்தில் தான் அம்பிகை கன்னிப் பருவம் எய்தினாள். அதனால் இந்தக் கோவிலில் ஆடிப்பூர நிகழ்ச்சிகள் சற்று தனித்துவமான முறையில் நடைபெறுகின்றது. இக்கோவிலில் ஆடிப்பூரத் திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். பத்தாம் நாளான ஆடிப்பூரத்தன்று திருவிழா நிறைவு பெறும்.
ஆடிப்பூரத்தன்று காலையில் முளை கட்டின பச்சைப் பயிறுக்கு, சூர்ணோற்சவம் செய்து, அதை மூலவர் நீலாயதாக்ஷி அம்பிகையின் புடவைத் தலைப்பில் முடிச்சிட்டு அம்பிகையின் இடுப்பில் கட்டி விடுவார்கள். பின்னர் நீலாயதாக்ஷி அம்மனுக்கு வெள்ளை புடவை சார்த்தி வீதி புறப்பாடு நடைபெறும். இந்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு பிரசாதம், குழந்தைப் பேறின்மை, கர்ப்பப்பை பிரச்சனை, வயதாகியும் பூப்படையாமல் இருத்தல் போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்தாகும் என்பது ஐதீகம்.
ஆடிப்பூரத்தன்று மாலையில் நீலாயதாக்ஷி அம்மனுக்கு ஆடிப்பூரம் கழித்தல் என்னும் சடங்கு நடத்தப்படும். இச்சடங்கு பெண்கள் பருவம் அடைந்த போது செய்யப்படும் சடங்கு முறைகளை ஒத்ததாக இருக்கும்.
ஆடிப்பூரத்தன்று இரவு நீலாயதக்ஷி அம்மன் சிறப்பான ஆடை அலங்காரத்துடன், பின்னால் அழகிய ஜடை தரித்து ஜெகஜோதியாய் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பீங்கான் ரதத்தில் வீதி உலா வருவார்.
நித்திய சுமங்கலி என்னும் சிறப்பு பெயர் கொண்ட மாரியம்மன்
பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க அருளும் அம்மன்
ராசிபுரத்திலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் அமைந்துள்ளது நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில். கொல்லிமலை, அலவாய் மலை, நைனாமலை, போத மலை என்னும் நான்கு மலைகளுக்கு மத்தியில் அமைந்த கோவில் இது. அம்மனுக்கு இத்தகைய சிறப்பு பெயர் கொண்ட தலம் வேறு எங்கும் கிடையாது. கருவறையில் நித்திய சுமங்கலி மாரியம்மன் சதுர வடிவ ஆவுடையாரில் அமர்ந்திருக்கின்றாள். நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு முன்பு, முதலில் இத்தலத்தில் சுயம்புவாக தோன்றிய மாரியம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறாள். அம்மனுக்கு எதிரே யாளி வாகனம் இருக்கிறது.
பொதுவாக மாரியம்மன் கோயில்களில் விழாக்காலங்களில் மட்டும் அம்பிகைக்கு எதிரே கம்பம் நடப்படும். இந்த கம்பத்தை அம்பிகையின், கணவனாக கருதி பூஜை செய்வர். ஆனால், இத்தலத்தில் அனைத்து நாட்களிலும் அம்பிகை எதிரே கம்பம் இருக்கிறது. அம்பிகை, தனது கணவனாக கருதப்படும் கம்பத்தை நேரே பார்த்துக் கொண்டிருப்பதால் இவளிடம் வேண்டிக்கொள்ள, பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பர் என்பது ஐதீகம். எனவே இந்த அம்மனை, 'நித்ய சுமங்கலி மாரியம்மன்' என்று அழைக்கிறார்கள்.
குழந்தைவரம் வேண்டுவோர் இங்கு ஒரு வித்தியாசமான பிரார்த்தனை செய்கின்றனர். ஐப்பசி விழாவின்போது அம்மனுக்கு எதிரேயுள்ள பழைய கம்பத்தை எடுத்துவிட்டு, புதிய கம்பம் நடுகின்றனர். பழைய கம்பத்தை இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள தீர்த்தக் கிணற்றிற்கு கொண்டு செல்கின்றனர். அப்போது கம்பத்திற்கு தயிர் சாத நைவேத்யம் படைத்து பூஜை நடக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் கம்பத்தை வணங்கி, எலுமிச்சை தீபமேற்றி, தயிர் சாத பிரசாதம் வாங்கி சாப்பிடுகின்றனர். இதனால் குழந்தை பாக்கியம் கிடைப்பதாக நம்புகிறார்கள். மேலும் ஒவ்வொரு மாதத்திலும் மகம் நட்சத்திரத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. அம்மனுக்கு எதிரே ஊஞ்சல் மண்டபம் உள்ளது. இங்குள்ள ஊஞ்சலில் அம்பிகையின் பாதம் பொறிக்கப்பட்டிருக்கிறது. புத்திரத்தடை உள்ள பெண்கள் இந்த ஊஞ்சலை ஆட்டி, அம்பிகையிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதனால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
சமயபுரம் மாரியம்மனின் மூத்த சகோதரி
கண் நோய்களை தீர்க்கும் பச்சிலை மூலிகை சாறு
திருச்சி மாவட்டம் லால்குடியில் இருந்து எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது அன்பில் மாரியம்மன் கோவில். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு உட்பட்ட உபகோவில் ஆகும். 700 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது இக்கோவில்.
பிரசித்தி பெற்ற ஏழு மாரியம்மன் கோவில்களில் இக்கோவில் ஒன்றாகும். சமயபுரம், நார்த்தா மலை, வீரசிங்க பேட்டை, கண்ணனூர், புன்ணை நல்லூர், திருவேற்காடு, அன்பில் மாரியம்மன் ஆகிய சிறப்பு மிக்க மாரியம்மன் தலங்களில் அன்பில் மாரியம்மன் மற்ற அனைத்து மாரியம்மன்களுக்கும் மூத்த சகோதரியாக விளங்குகின்றாள். அன்பில் மாரியம்மனுக்கு ஏழு குழந்தைகள் உள்ளன. சமயபுரம் மாகாளிகுடி கோயில் அருகில் வலது புறத்தில் ஓர் தெய்வீக வீட்டில் புற்றோடு, தன் குழந்தையோடு தங்கை மகமாயி அனுமதியோடு அமர்ந்திருக்கிறாள், மற்ற கோவில்களில் மாரியம்மனுக்கு குழந்தை கிடையாது.
குழந்தை வேண்டி அம்மனை வழிபட்டால் பலன் கிடைக்கும். கண் சம்பந்தமான நோய்கள் தீர இந்த அம்மனை வழிபடலாம். நண்பகல் 12.00 மணியளவில் கண் குறைபாடு உள்ளவர்களுக்கு பூசாரியால் பச்சிலை மூலிகைகளால் ஆன சாறு கண்களில் பிழிந்து விடப்படுகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் கண் நோயில் இருந்து குனமடைவதாக நம்பப்படுகிறது. அம்மை இருக்கும் காலத்தில் இந்த கோவிலில் வந்து தங்கி பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.
சந்திர ரூபமாக காட்சியளிக்கும் திரிபுரசுந்தரி அம்மன்
அம்மன் உச்சிக்காலப் பூஜையின் போது வழங்கப்படும் ஈஸ்வர தீர்த்தப் பிரசாதம்
திருச்சியிலிருந்து சேலம் செல்லும் வழியில், 53 கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியம் என்ற நகரில் அமைந்திருக்கின்றது அனலாடீசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் திரிபுரசுந்தரி. இக்கோவிலில் அனலாடீஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி சன்னிதிகள் கிழக்கு திசை நோக்கி, அருகருகே அமைந்து சக்தியும் சிவமுமாக காட்சியளிப்பது, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.
சிவபெருமான் திரிபுரசம்ஹாரத்திற்கு புறப்பட்டு வந்த போது, இத்தலத்தில் பிரம்மன் யாகம் ஒன்றை செய்து கொண்டிருந்தார். அந்த யாக குண்டத்தில் சிவ பெருமான் நர்த்தனம் செய்த காரணத்தால், இத்தலத்து இறைவன் வட மொழியில் 'அக்னி நர்த்தீஸ்வரர்' என்று அழைக்கப்பட்டார். அதுவே தற்போது அனலாடீசுவரர் என்ற திருநாமத்தோடு விளங்குகிறது.
சிவபெருமான் நர்த்தனம் புரிந்த யாககுண்டம், தற்போது 'ஈசுவரத் தீர்த்தம்' என்றழைக்கப்படுகிறது. இந்த தீர்த்தம் அம்மன் திரிபுரசுந்தரி சன்னிதிக்கு நேர் எதிரில் அமைந்துள்ளது. நாள்தோறும் அம்மனுக்கு நடைபெறும் உச்சிக்காலப் பூஜையின் போது, பக்தர்களுக்கு ஈசுவரத் தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் இங்குள்ள திரிபுரசுந்தரி அம்பாளை வணங்குவதால் உடலுக்கும், உள்ளத்திற்கும் வலிமை சேர்ப்பதுடன், குளிர்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.
திரிபுரசுந்தரி என்றால் தமிழில் அழகு உடையவர் என்று பொருள். அதாவது அழகுடையவராக எழுந்தருளி, தன்னை நாடி வரும் பக்தர்களின் தேவையை அறிந்து அதைத் தீர்த்து வைக்கும் இறைவியாக அம்மன் திகழ்கிறார். பொதுவாக சிவாலயங்களில் பரிவார தெய்வங்களாக சூரியனும் சந்திரனும் அருகருகே எழுந்தருளி இருப்பார்கள். இத்தலத்தில் சந்திர ரூபமாக அம்மன் காட்சியளிப்பதால், இக்கோவிலில் சந்திரன் கிடையாது. சூரியன் மட்டுமே எழுந்தருளியுள்ளார்.
சிவபெருமான் அம்பிகைக்கு குருவாக இருந்து உபதேசம் செய்த தலம்
இறைவன் திருக்கல்யாணம் நடைபெறாத தலம்
திருச்சி நகரில் அமைந்துள்ள தேவார தலம் திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் அகிலாண்டேசுவரி.
அகிலாண்டேசுவரி என்பதற்கு உலகத்தை ஆள்பவள் என்று பொருள். இத்தலத்தில் இருக்கும் ஜம்பு லிங்கம் அம்பிகையால் செய்யப்பட்டது. ஒரு முறை இத்தலத்திற்கு வந்த அம்பிகை, காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் அமைத்து சிவபெருமானை வழிபட்டார். நீரால் செய்யப்பட்டதால் அந்த லிங்கம் ஜம்புகேசுவரர் எனப் பெயர் பெற்றது. திருவானைக்காவல் பஞ்சபூதத் தலங்களில் அப்புத்(நீர்) தலமாகும்
அகிலாண்டேசுவரி அம்மன் காலையில் லட்சுமியாக, உச்சிக் காலத்தில் பார்வதியாக, மாலையில் சரஸ்வதியாகத் திகழ்வதால், அம்பிகைக்கு மூன்று வண்ண உடை அலங்காரங்கள் மூன்று வேளைகளிலும் செய்யப்படுகிறது. சிவபெருமான், அம்பாளுக்கு இத்தலத்தில் குருவாக இருந்து உபதேசம் செய்ய, அம்பாள் மாணவியாக இருந்து கற்றறிந்தாள். எனவே மாணவர்கள் இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். சிவபெருமான் குருவாக இருந்து பார்வதிக்கு உபதேசித்த தலம் என்பதால் இங்கு திருக்கல்யாணம் நடப்பதில்லை. திருமணமும் நடைபெறுவதில்லை.
காதில் தோடாக ராகு - கேதுக்களை அணிந்திருக்கும் அம்மன்
ஆயிரம், ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் தேரில் வரும் அற்புதக் காட்சி
ஈரோட்டில் இருந்து 28 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிவகிரி அருகே அமைந்திருக்கிறது தலையநல்லூர் பொன்காளியம்மன் கோவில். இக்கோவில் மிகவும் பழமையானது.
கோவில் கருவறையில் வீற்றிருக்கும் பொன்காளி அம்மன், ருத்ர காளியாகத் தோன்றுகிறாள். தன் தலையில் கிரீடமாக அக்னி ஜுவாலையையும், காதில் தோடாக ராகு - கேதுக்களையும் அணிந்திருக்கிறாள். மேலும் தன்னுடைய எட்டு கரங்களிலும் சூலம், டமருகம், கட்கம், கேடயம், பட்சி, கிண்ணம், கண்டம், அக்னியை தாங்கியிருக்கிறாள். அதோடு அசுரன் ஒருவனை காலில் மிதித்த கோலமாகவும், உதட்டில் புன்னகையுடன் அன்னையின் திருக்காட்சி இருக்கிறது.
பொன்காளியம்மனை ராகுகாலம், அமாவாசை, பவுர்ணமி போன்ற தினங்களில் வழிபாடு செய்தால், இல்வாழ்க்கையில் எல்லாவித சிறப்பும் ஏற்படும். மேலும், இந்த அம்மன் திருமணம், குழந்தைபாக்கியம் மற்றும் சகல செல்வங்களையும் வாரி வழங்குகின்றாள்.
இந்த அம்மனின் தேர் திருவிழா இந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. சுற்று வட்டார மாவட்டங்களில் இருந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இந்த தேர் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.தேரின் முன்வடமாகவும், பின்வடமாகவும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் ஏந்தி செல்வார்கள். இந்த ஆயிரம் ஆயிரம் தீவட்டியுடன் அம்மன் செல்லும் அற்புதத்தைக் காண கண்கள் கோடி வேண்டும்.
மருத்துவச்சி அம்மன் என்று போற்றப்படும் பாகம்பிரியாள்
ராமநாதபுரம் மாவட்டம், தேவாரப் பாடல் பெற்ற தலமான திருவாடானையிலிருந்து 11 கி. மீ. தொலைவில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்துள்ளது பாகம்பிரியாள் கோவில். இறைவன் திருநாமம் வல்மீக நாதர். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இந்த கோவில் பழமை வாய்ந்ததும், விஷம் முறிக்கும் திருத்தலமாகவும் கருதப்படுகிறது.
தீராத நோய்களையும் தீர்ப்பவளாக அருளுவதால் இத்தலத்து அம்பிகை பாகம் பிரியாளை 'மருத்துவச்சி அம்மன்' என்றும் அழைக்கிறார்கள். விவசாயிகள் தங்கள் நிலத்தில் பணி துவங்கும் முன், விதை நெல்லை பாகம்பிரியாள் சன்னதியில் வைத்து பூஜித்துச் செல்கின்றனர். முதலில் அறுவடை செய்யும் நெல்லையும் இவளுக்கு காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இப்பகுதியில் யாரேனும் விஷப்பூச்சிகளால் கடிபட்டால், அவர்களை கோயிலுக்கு கொண்டு வருகின்றனர். அவர்களை கோவில் எதிரேயுள்ள வாசுகி தீர்த்தத்தில் மூழ்கச்செய்து, மண்டபத்தில் படுக்க வைத்து, அம்பிகைக்கு அபிஷேகம் செய்த தீர்த்த பிரசாதம் தருகின்றனர். தற்போதும் இந்த வழக்கம் நடைமுறையில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களை தீர்த்தக்குளத்தில் அமுக்கி குளிக்க வைப்பதால், 'அமுக்கிப் போட்டா சரியாப்போகும்' என்று சொல்லும் வழக்கம் உள்ளது.
இக்கோவிலில் வியாழக்கிழமை இரவு தங்கி, வெள்ளிக்கிழமை காலையில், கோவில் முன் உள்ள வாசுகி தீர்த்தத்தில் நீராடி, பாகம்பிரியாள் உடனுறை பழம்புற்றுநாதர் எனும் வல்மீகநாதரை வழிபடுவதால் தோல் நோய்கள், விஷக்கடிகள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தலத்து அம்பிகையை வணங்கி தீர்த்தம் பருகினால் புற்றுநோய் குணமாகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
பெண்களுக்கான பிரார்த்தனை தலம்
பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் 'தங்கி வழிபடுதல்' என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர்.
இந்த அம்பிகை தாயுள்ளம் கொண்டவள். இவ்வூர் மக்கள் தங்கள் சொத்துக்களை அம்பிகைக்குரியதாக கருதுகின்றனர். அதனால் தாய்வழி சொத்தாக மகள்களுக்கு சொத்தை எழுதி வைக்கின்றனர்.
இசைக்கலையில் சிறந்து விளங்க அம்பிகைக்கு தேன் அபிஷேகம்
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில் அமைந்துள்ள தேவாரத்தலம், இரும்பை மாகாளேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் மதுரசுந்தர நாயகி. இத்தலம் திண்டிவனத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவிலும் புதுச்சேரியில் இருந்து 9 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
இத்தலத்து அம்பிகை மதுரசுந்தர நாயகி தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். இங்கு கடுவெளி சித்தர் என்னும் சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்தபோது, அம்பாள் குயில் வடிவத்தில் அம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவபெருமானிடம் சொல்வாளாம். இதனால் இத்தலத்து அம்பிகைக்கு 'குயில்மொழி நாயகி' என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர். இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிபடும் வித்தியாசமான நடைமுறை
காரைக்குடி நகரின் மீனாட்சிபுரம் பகுதியில் அமைந்துள்ளது முத்து மாரியம்மன் கோவில். கருவறையில் முத்து மாரியம்மன் நின்ற கோலத்தில் கருணைப் பார்வையும்,கனிவு சிரிப்புமாகக் காட்சி தந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறாள் . இக்கோவிலில் அம்மனுக்கு தக்காளியால் அர்ச்சனை செய்வதும், தக்காளி மாலை சாத்தியும் வழிபாடு செய்வது வேறு எந்த அம்மன் தலத்திலும் இல்லாத நடைமுறையாகும்.
அம்மனுக்குத் தக்காளியால் அர்ச்சனை செய்து, தக்காளி மாலை சாத்தி வழிப்பட்டால், நினைத்த காரியங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இக்கோவிலில் மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து நாடுகளில் வசிக்கும் தமிழர்கள், நேர்த்திக்கடன் நேர்ந்து பால்குடம் எடுப்பது தனி சிறப்பாகும்.
உயர்ந்த பேரழகுடன் கூடிய, நுணுக்கமான வேலைப்பாடு உள்ள அம்பிகையின் ஆபூர்வ சிற்பம்
சிற்பத்தில் தெரியும் திருமாங்கல்ய முடிச்சு மற்றும் இடையில் அணிந்திருக்கும் ஆடையின் முடிச்சு
16 சிறு துவாரங்கள் உள்ள மேகலை என்ற நுணுக்கமான ஆபரணம்
கோயம்புத்தூர் மாநகரில் இருந்து 27 கி.மீ. தொலைவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது முட்டம் நாகேசுவரர் கோவில். இறைவியின் திருநாமம் முத்துவாளி அம்மன். முத்துக்களால் அமைந்த காதணி அணிந்ததால் இப்பெயர் பெற்றார். 1500 ஆண்டுகள் பழமையானது இக்கோவில்
அம்பிகை முத்து வாளியம்மன் சிற்ப அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். அம்மனின் சிற்பத்தை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். உயர்ந்த பேரழகுடன் கூடிய இந்த அம்மனின் சிற்பத்தை போன்றதொரு சிற்பம் உலகில் வேறு எங்கும் நாம் காண முடியாது. மதுரை மீனாட்சியம்மன் சிலையையும், இச்சிலையையும் ஒரே சிற்பி வடித்ததாக கூறப்படுகிறது.
நின்ற கோலத்தில் இருக்கும் இந்த அம்பிகை, தனது வலது கையில் நீலோத்பல மலரை ஏந்தி உள்ளார். முன்கையில் பரியகம் எனும் ஆபரணம் உள்ளது. இருதோள்களிலும்அடுக்கடுக்காக அரும்புகள் பொருந்திய கடகங்கள் உள்ளன. அவற்றின் நடுவே வட்டமான மலர்மொட்டுக்கள் உள்ளன. அம்பிகையின் கை விரல்களில் உள்ள மோதிரம் மற்றும் ரேகைகளைக் கூட காண முடிகிறது. மூக்கில் மூக்குத்தி அணியவும், காதில் கம்மல் அணியவும் சிறு துவாரங்கள் உள்ளது. மணிக்கழுத்தில் சவடியும் காறைகளும் சிறப்பாக அமைந்துள்ளது. இவைகளின் நடுவே ஒரு சிறு துவாரம் உள்ளது. இதில் அணிகலனை மாட்டலாம். கழுத்தின் பின்புறம் திருமாங்கல்யத்தின் முடிச்சுகள் சிற்பத்திலேயே செதுக்கப்பட்டுள்ளது மிகவும் அபூர்வமான வேலைப் பாடாகும். தலையில் உள்ள முடி 9 அடுக்குகளாக பூவேலைப்பாடுகளுடன் பொருந்தியுள்ளது. அம்பிகையின் கூந்தலானது பின்னலிட்ட முழு சடையாக இல்லாமல், தற்பொழுது நாகரிக பெண்கள் வைத்திருக்கும் குதிரைவால் சடையாகவும், அந்த சடையில் ரப்பர் பேண்ட் போன்ற முடிச்சு இருப்பதும் நம்மை வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் அமைப்பாகும்.
அம்பிகை திரிபுரை அம்சமானவர். ஆதலால் மணிவயிறும், மார்பும், பிடியளவு இடையுடனும் காட்சியளிக்கிறார். அம்பிகை இடையில் உடுத்தியிருக்கும் ஆடையின் முடிச்சும் பின்புறம் காணப்படுகிறது. இடுப்பில் மேகலை என்ற ஆபரணம் சிறப்புடன் விளங்குகின்றது. மேகலை இதழ் இதழாகத் தொங்குகின்றன. மேகலை மாட்டுவதற்கு 16 துவாரங்கள் உள்ளன. கற்சிலையில் துல்லியமாக சிறிய துவாரங்களை ஏற்படுத்துவது என்பது எளிதான காரியமில்லை. 16 கோவை உள்ள மேகலைக்கு கலாபம் எனப் பெயர். இவ்வணிகலனை அணிந்து, அம்பிகை ஒயிலாக கலாப மயில் போல் காட்சியளிக்கிறாள். மலர்ந்த முகத்துடன் மகிழ்ச்சியோடு விளங்கும் அழகை எத்தனை நேரம் வேண்டுமானாலும் தொழலாம். சுருங்கச் சொன்னால் இந்த அம்பிகையின் சிற்பமானது வேறெங்கும் காணக்கிடைக்காத ஆபூர்வ சிற்பம் ஆகும்.
பௌர்ணமி தினங்களில் அம்பிகைக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை அமையும் என்பது ஐதீகம்.
மகாலட்சுமி
மகாலட்சுமியின் முக்கிய சிறப்புகள்
மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.
லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும், பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.
ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.
மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிலிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.
திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.
லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.
சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் மகாலட்சுமியை பூஜிப்பது, தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.
மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி, லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும். வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.
பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது. யானையின் முகத்திலும், குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.
பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம்,சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை,திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள். வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.
லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும். தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.
அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.
லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும். லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.
வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள். வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும். மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற, வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.
மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும்.சகலவித செல்வத்தையும், வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான்.
தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால், திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.
வெள்ளிகிழமையில் மருதாணியை ஸ்ரீமகாலஷ்மியை மனதில் நினைத்துக் கொண்டு கையில் அணிந்துக்கொண்டால், எந்த துன்பங்களும் நெருங்காது. ஸ்ரீமகாலஷ்மியின் அருளாசியும் பரிபூரணமாக கிடைக்கும்.
நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும். ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு, அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.