௳ (முகப்பு)

View Original

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் கோவில்

பக்தர்கள் பூதகணம் வேடமிட்டு பங்கேற்கும் திருக்குவளை மாசிமகம் நெல் அட்டி திருவிழா

திருவாரூரில் இருந்து 24 கி.மீ. தொலைவில் உள்ள தேவாரத்தலம் திருக்குவளை. இறைவன் திருநாமம் பிரம்மபுரீசுவரர். இறைவியின் திருநாமம் வண்டமர் பூங்குழலம்மை. பிரம்மன் இத்தல இறைவனை வணங்கி படைப்புத்தொழில் கைவரப் பெற்றமையால், இறைவனுக்கு இப்பெயர் ஏற்பட்டது. பிரம்மனால் வெண்மணலால் அமைக்கப்பட்டவர் என்பதால், மூலவருக்குக் குவளை சாற்றியே வழிபடப்படுகிறது. மாதந்தோறும் அமாவாசையன்று இரவு 6 மணிக்கு மட்டுமே குவளை நீக்கப்பட்டு, வெண்மணலால் ஆன சிவலிங்கத் திருமேனிக்குத் தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

திருவாரூரில் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரும், அவரது மனைவி பரவை நாச்சியாரும், தினந்தோறும் சிவனடியார்களுக்கு உணவு படைத்து வந்தார்கள். உணவு சமைப்பதற்கான பொருட்களை, திருக்குவளை அருகே உள்ள குண்டையூரைச் சேர்ந்த வேளாளரான குண்டையூர் கிழார் என்பவர். சுந்தரருக்கு அனுப்பி வைப்பது வழக்கம். ஒரு சமயம், திடீரென பஞ்சம் ஏற்பட்டது. அதனால், சுந்தரருக்கு நெல் அனுப்ப முடியாமல் குண்டையூர் கிழார் கவலையுற்று, இறைவனை வேண்டினார். அவரது வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், குண்டையூர் கிழாரின் கனவில் தோன்றி. சுந்தரமூர்த்தி நாயனாருக்காக உமக்கு நெல் தந்தோம் என்றருளி மறைந்தார். குண்டையூர் கிழார் கண் விழித்துப் பார்க்கையில் நெல் மலை ஒன்றை இறைவன் அருளியிருப்பதை அறிந்தார். இந்த செய்தியை அறிந்த சுந்தரர் நெல்லைப் பெற்றுச் செல்ல குண்டையூர் வந்தார். அங்கு குவிந்திருந்த நெல் மலையைக் கண்டு வியந்த சுந்தரர். அந்த நெல் அனைத்தையும் தன்னால் கொண்டு செல்ல இயலாது என்பதை உணர்ந்து, நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு செல்ல ஆள் வேண்டி, திருக்குவளைக்கு வந்து திருக்கோளிலி இறைவனை வேண்டி.

"....கோளிலி எம்பெரு மான் குண்டையூர்ச்

சில நெல்லுப்பெற்றேன்

ஆளிலை எம்பெரு மானவை

அட்டித் தரப்பணியே"

என்ற திருப்பதிகம் பாடினார். அன்றிரவே, சிவபெருமானின் அருளால் பூதகணங்கள், குண்டையூர் நெல் மலையைத் திருவாரூருக்குக் கொண்டு சென்று ஊர் முழுவதும் நிரப்பின.

இக்கோவிலில், குண்டையூர் கிழார், சுந்தரருக்கு அளித்த நெல்லைத் திருவாருருக்குக் கொண்டு செல்ல சிவபெருமான் பூதகணங்களை அனுப்பிய ஐதீக விழா, மாசி மாதத்தில் நெல் மகோற்சவமாக, 5 நாட்கள் திருவிழாவாக நடைபெறுகிறது. மாசி மக நட்சத்திர நாளில், திருக்குவளையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குண்டையூருக்கு அருள்மிகு கோளிலிநாதர் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனார் சுவாமிகள் புறப்பாடு நடைபெறுகிறது. அப்போது, பூதகணங்களைப் போல வேடமணிந்த பக்தர்கள் உடன் சென்று, குண்டையூரில் நெல் அள்ளும் நிகழ்ச்சியும், அங்கிருந்து திருவாருருக்குக் கொண்டு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இந்த மாசிமகம் நெல் அட்டி திருவிழா, இத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.

பூதகணங்களைப் போல வேடமணிந்த பக்தர்கள்

See this map in the original post