௳ (முகப்பு)

View Original

சென்னை கந்தசாமி கோவில்

வேத மந்திரங்களால் முருகன் விக்கிரகத்தை சீர் செய்த அற்புதம்

சென்னை பாரிமுனைப் பகுதியிலுள்ள ராசப்ப தெருவில் அமைந்ததுள்ளது, சுமார் 450 ஆண்டுகள் பழமையான கந்தசாமி கோவில். மூலவர் கந்தசாமி. உற்சவர் முத்துக் குமாரசுவாமி. சிதம்பர சுவாமி , பாம்பன் குமரகுரு பரதாச சுவாமிகள், இராமலிங்க அடிகளார் ஆகியோர் பாடிய தலம்.

தல வரலாறு

வேளூர் மாரிச்செட்டியார்,பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற முருக பக்தரகள், ஒவ்வொரு கிருத்திகையன்றும, சென்னையிலிருந்து திருப்போரூக்கு நடைப் பயணமாகச் சென்று திருப்போரூர் கந்தசாமியை வழிபடும் வழக்கம் உடையவர்கள். அப்படி ஒரு சமயம், 1673ம் ஆண்டு மார்கழி மாதம் கிருத்திகையன்று, திருப்போரூர் கந்தசாமியை வணங்கி விட்டு சென்னை திரும்பும் வழியில், செங்கண்மால் ஈசுவரன் கோவில் என்ற இடத்தில் அசதியில் படுத்து உறங்கி விட்டார்கள். அப்போது அவர்கள் இருவர் கனவிலும் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள், இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப் பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஒரு போலவே கனவு வந்தபடியால்,வந்து சொன்னது முருகனே என்று மகிழ்ந்தார்கள். சுற்றிலும் தேடிப் பார்த்தார்கள் அருகில் முருகன் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும்வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள விரும்புகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்திலேயே முருகருக்கு கோவில் கட்டினார்கள்.

சுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து, தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி, தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர்.

உற்சவர் முத்துக் குமாரசுவாமி

ஒரு சமயம் , முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கோயிலுக்கு உற்சவ விக்கிரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர் . சிற்ப சாஸ்திரத்தில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரைத் தேர்வு செய்தனர் . சிற்பியிடம், உற்சவ முருகனாகப் பஞ்சலோகத்தில் விக்கிரகம் ஒன்றை வார்த்துக் தரும்படி ஒப்படைத்தனர் . சிற்பியும் புடம் போட்டு எடுத்தபின், வார்ப்படத்தைப் பிரித்தபோது விக்கிரகம் 'மினு மினு' வென மின்னியது . அதன் ஒளிச் சிதறல்கள் கண்களை கூசச் செய்தது . ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள் போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் அனைவருமாகச் சேர்ந்து சிற்பியிடம், சிற்பம் நல்லா வந்திருக்கிறது ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.

சிற்பியும், சரி! துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்கிரகத்தைத் தொட்டார் . அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாங்கியவர் போல் தூரப்போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பியை தூக்கி வைத்து ஆசுவாசப்படுத்தி, என்ன ஆயிற்று ஐயா என்றனர். சிற்பியோ, என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார் . இந்த விக்கிரகம் நீறு பூத்த அனலாக இருக்கிறது. இதைச் சுத்தம் செய்யும் தகுதியோ, சக்தியோ எனக்கில்லை என்றார். என்னால் முடியாது என்று சொல்லிவிட்டு போய் விட்டார்.அந்த விக்கிரகத்தை தீண்டப்பயந்து வழிப்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளாமல் பாதுகாப்பாக வைத்துப் பூட்டி விட்டனர் . இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.

ஒருநாள் காசியிலிருந்து சாம்பையர் எனும் துறவி கந்தக்கோட்டம் வந்தார். அவர் மூலவரை தரிசித்து முடித்தவுடன் உற்சவர் எங்கே என்று விசாரித்தார். அவருக்கு உற்சவர் இருந்த பெட்டியை காண்பித்தனர். கொஞ்ச நேரம் அந்த விக்கிரகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சாம்பையர், மயக்கம் போட்டு விழுந்தார். பிறகு எழுந்தவர் சந்தோஷத்தில், மூலவருக்கு எவ்வளவு சான்னித்தியம் உள்ளதோ, அதே சாந்நித்தியம் இந்த உற்சவர் சிலைக்கும் உள்ளது என்று சொன்னார். இப்படி அமைவது மிக மிக அபூர்வம் என்றார். ஆத்ம சக்தியினால் மட்டுமே இந்த உற்சவரை சுத்தம் செய்யமுடியும். எந்த கருவிகளாலும் சுத்தம் செய்ய முடியாது என்றார். அவரே சிலையின் முன் அமர்ந்து வேத மந்திரங்களை சொல்லி அந்த சிலையை சுத்தம் செய்தார். அவர் உற்சவர் திருமேனியில் இருந்த பிசிறுகளையெல்லாம் நீக்கினார். ஆனால் முகத்தில் இருந்த பிசிறுகளை நீக்க முடியவல்லை. இன்று நாம் உற்சவராக தரிசிப்பது இந்த பொன்னிற முருகனைத்தான். ஆனால் முகத்தில் மட்டும் பிசிறுகள் இருக்கும்.

See this map in the original post